திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே கண்டவராயன்பட்டியில் இருந்த கி.பி.17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேட்டில் அப்பகுதியில் இரு குழுக்களிடையே நடந்த சண்டையும், வெற்றி பெற உதவியவர்களுக்கு கிடைத்த பலிக் காணி குறித்தும் தெரிய வந்துள்ளது.
கண்டவராயன்பட்டி அரியநாயகி அம்மன் கோயில் வழிபாட்டாளர்களால் பாரம்பரியமாக ஒரு செப்பேட்டை பாதுகாத்து வருகின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா.கா.காளிராசா, செயலர் ரா.நரசிம்மன், அழகப்பா அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் வேலாயுத ராஜா ஆகியோர் செப்பேட்டிலுள்ள எழுத்துக்களை ஆய்வு செய்தனர். ஒன்றரை அடி நீ்ள,அகலமுள்ள சதுர வடிவிலான அந்த செப்பேட்டின் இரு பக்கத்திலும் 128 வரிகள் உள்ளன. முதல் 19 வரிகள் சேதுபதி மன்னரை புகழ்ந்துள்ளன. கி.பி. 1653ம் ஆண்டைச் சேர்ந்த இந்த செப்பேட்டில் இரண்டு நிலப்பகுதியினருக்கிடையே 3 ஆண்டுகள் நடைபெற்ற சண்டையும், அதில் இறந்த 150 இளவட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்ட ‛பலிக் காணி’ குறித்தும் தெரியவந்துள்ளது. இப்பகுதியை ஆண்ட திருமலை காத்த சேதுபதி ஆட்சியில், விசைய வருடம் ஆனி மாதம் 13ஆம் தேதியில் செப்பேடு செதுக்கப்பட்டுள்ளது.
கி.பி.1653 ம் வருடத்தில் வழங்ப்பட்ட இந்த செப்பேட்டில் ‛வேலங்குடியில் தெற்கு மற்றும் வடக்குத் தரப்பினர் 24 கிராம நிலத்திற்காக சண்டை செய்ததும், அதற்கு வடக்குத் தரப்பினர் பொன்னமராவதியிலிருந்து ஆட்கள் கூட்டி வந்து, தெற்கு தரப்பினரின் நிலங்களை பறி்த்து விரட்டியதும், பின்னர் தெற்கு தரப்பினர் வன்னியன் சூரக்குடிக்கு சென்று சேதுபதி மன்னர்களின் அரச பிரதிநிதி வன்னியனாரிடம் தங்களுடைய 24 கிராமத்தையும் மீட்டு தரவும், அதில் மூன்றில் ஒரு பங்கு தருவதாக சத்திய பிரமாணம் செய்ததும், வன்னியனார் 8 சேர்வைகாரர்கள் 500 இளவட்டங்களை அனுப்பி வடக்குத் தரப்பினரை விரட்டி நிலங்களை மீட்டதும், சண்டையில் இறந்த 150 இளவட்டங்களுக்கு பலிக் காணியாக 8 கிராமங்கள் வழங்கப்பட்டதும்’ குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், செப்பேட்டில் தற்போதைய கண்டவராயன்பட்டி என்பது இராசகண்டியநல்லூர் என்றும், நெற்குப்பை என்பது நெய்க்குப்பைபட்டி என்றும் கோவிலார்பட்டி என்பது கோவிலூர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. செப்பேட்டை எழுதிக் கொடுத்தவர்களின் பெயர்கள் கடைசியாக எழுதப்பட்டுள்ளன.