மயிலம்; மயிலம் முருகன் கோவிலில் நடந்த சஷ்டி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணிய சுவாமி கோவிலில், ஆனி மாத வளர்பிறை சஷ்டி மற்றும் செவ்வாய் கிழமையையொட்டி இன்று காலை 6;00 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்டவைகளால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து, 7:00 மணிக்கு வீரபாகு சுவாமிக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது. மேலும், 11:00 மணிக்கு பாலாபிஷேகம், மகா தீபாரதனைக்கு பின்னர் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மதியம் 1:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கபட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்தார்.