திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் தொடங்க இருப்பதால் கோபுரங்களை புதுப்பிக்க சாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில், காசிக்கு செல்ல முடியாதவர்கள் பலரும் திருப்புவனம் வந்து முன்னோர்களின் அஸ்தியை கரைத்து புஷ்பவனேஷ்வரரை வழிபட்டு செல்வார்கள், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் உள்ளிட்டோரால் பாடல் பெற்ற ஸ்தலமான இக்கோயிலில் கடந்த 2002ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பபிஷேகம் நடத்தப்பட வேண்டும், 23 வருடங்களாகியும் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை என பக்தர்கள் வேதனை தெரிவித்துவந்த நிலையில் கடந்த மாதம் கும்பாபிஷேக பணிகள் தடையின்றி நடக்க தொடர்வதற்காக ஜூலை 7ல் பாலாலயம் நடந்தது. கோயில் கோபுரங்கள், கோபுரங்களில் உள்ள சுதைகள் உள்ளிட்டவைகள் புதுப்பிக்கப்பட உள்ளன. இதற்கு வசதியாக கோயில் கோபுரம் முன் சாரம் அமைக்கப்பட்டு வருகிறது. கோயிலைச்சுற்றிலும் சாரம் கட்டிய பின் கும்பாபிஷேகத்திற்காக வர்ணம் தீட்டுவது, சேதமடைந்த சிற்பங்களை சரி செய்யும் பணி நடைபெறும்.