காரைக்குடி: காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லுாரியைச் சேர்ந்த வரலாற்றுத்துறை இணை பேராசிரியர் வேலாயுத ராஜா முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் 13 ஆம் நுாற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகளை கண்டறிந்துள்ளார்.
அவர் கூறுகையில்: தேவகோட்டை அருகேயுள்ள கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் கோயில் சவுந்தரநாயகி அம்மன் சன்னதி அர்த்தமண்டபத்தின் சுவரில் இரு கல்வெட்டுகள் இருப்பதாக ஆறாவயல் கிராமத்தைச் சேர்ந்த பெரியய்யா தெரிவித்தார். புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவர் ராஜேந்திரனுடன் சேர்ந்து கள ஆய்வு மேற்கொண்டோம். அதில் இருந்த ஒரு கல்வெட்டு 36 வரிகளையும் மற்றது 39 வரிகளையும் கொண்டுள்ளன. இவை பாண்டிய நாட்டை ஆண்ட முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் 14 வது ஆட்சி ஆண்டை (கி.பி. 1229) சேர்ந்தவை. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையை தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை கி.பி. 1216 முதல் 1238 வரை ஆட்சி செய்த மன்னர். இவர் சோழர்களை போரில் தோற்கடித்ததால் சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டிய தேவர் என இவரது கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறார்.
இப்பாண்டிய மன்னரது அரசியல் அதிகாரிகளில் ஒருவராக இருந்த மாளவச் சக்கரவர்த்தி, மக்களால் மழவர் மாணிக்கம் என்று அழைக்கப்பட்டவர். காளையார்கோவில் என்று வழங்கும் திருக்கானப்பேர் நகரில் வாழ்ந்தவர் ஆவார். இக்கல்வெட்டு காணப்படும் இவ்வூருக்கு வந்த மாளவச்சக்கரவர்த்தி திருவகத்திசுவரமுடைய நாயனார் கோயில் பூசையின்றி கிடப்பதாக மன்னனிடம் சொல்லவே மன்னர் கோயிலை சுற்றி இருந்த காட்டை வெட்டி அழித்து திரு அகத்தீஸ்வரமுடைய நாயனாருக்கு வேண்டிய பூஜைகள் செய்ய ஓடைப்புறத்தில் இரண்டு மாச்சை நிலம் காணியாக அந்தராயம், விநியோகம் உட்பட அனைத்து வரிகளிலும் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு கொடுக்கப்பட்ட செய்தியை குறிக்கிறது. மேலும் ஒரு கல்வெட்டில் இவ்வூர் பாலுார் என குறிப்பிட்டுள்ளதோடு திருவனந்திசுவரமுடையாருக்கும் அஞ்சாத பெருமாள் சந்திக்கும் அதாவது பூசைக்கும் திருப்பலி மாற்றம் செலவினத்துக்கும் வரி நீக்கி இரண்டு மா நிலம் வழங்கப்பட்டு அதன் 4 எல்லைகளிலும் திரிசூலக்கல் நட்டு வைத்து இவ்வாண்டு முதல் சந்திர சூரியன் உள்ளவரை தர்மம் நிலைத்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மாளவச்சக்கரவர்த்தி ஓலை என்று துவங்குவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அரண்மனை சிறுவயல் கோயிலில் காணப்படும் கல்வெட்டிலும் மாளவச்சக்கரவர்த்தி ஓலை என்ற வரி காணப்படுகிறது. மேலும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டுகள் தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் திருப்புத்துார், சதுர்வேதிமங்கலம், பெரிச்சி கோயில், அரண்மனை சிறுவயல், திருமலை, கம்பனுார், வெளியாத்துார் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. இதில் காணப்படும் செய்தி போலவே வெளியாத்துார் கோயிலில் காணப்படும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டிலும் மழவராயர் நமக்கு சொன்னைமையினால் என்ற வரிகள் வருவது குறிப்பிடத் தக்கது.