பொன்னேரி: பொன்னேரியில், கடந்த 31ம் தேதி முருகன் கண் திறந்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவிய நிலையில், நேற்று திருவாவடுதுறை ஆதீனம் பார்வையிட்டு தரிசனம் செய்தார்.
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட திருவாயற்பாடி புளியந்தோப்பு குடியிருப்பு பகுதியில் ஆனந்த விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 31ம் தேதி, இக்கோவில் வளாகத்தில் உள்ள பாலமுருகன் சிலையின் இடது கண் திறந்து, அதிலிருந்து நீர் வடிவதாக சமூக வலைதளங்களில் பரவியது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள், பாலமுருகனை தரிசித்து சென்றனர்.
நேற்று மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனம் குருமஹாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், பொன்னேரிக்கு வந்து பாலமுருகனை தரிசனம் செய்தார். அவருக்கு, பூர்ண கும்பமரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கண் திறந்த முருகன் குறித்து, கோவில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். ‘உலக அதிசயம் ஏதோ ஒன்று நடப்பதற்கான அறிகுறி’ என, பக்தர்களிடம் தெரிவித்தார். அதன்பின், குருமஹாசன்னிதானத்திடம் பக்தர்கள் ஆசி பெற்றனர்.