தமிழகத்தில், பிரசித்தி பெற்ற கோவில்களில் தரிசனத்தை, முக்கிய விசேஷ நாட்களில், உள்ளூர் அரசியல்வாதிகள், முன்னாள் மற்றும் இந்நாள் நீதித்துறையினர், ஓய்வு பெற்ற அரசுத்துறை அதிகாரிகள், போலீசார் என, ஆளாளுக்கு தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு அத்துமீறுவது, பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதுபோன்ற நபர்களுக்கு தனியாக நேரம் ஒதுக்கி, அந்நேரத்தில் மட்டும் அனுமதித்தால், பக்தர்களின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டிய நிலை அறநிலையத்துறைக்கு ஏற்படாது.
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 43,700 கோவில்கள் உள்ளன. இவற்றில், 586 கோவில்கள் பிரசித்தி பெற்றவை; ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் கொண்டவை. இக்கோவில்களில், முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சமீபத்தில் தைப்பூச நாளில் திருவண்ணாமலை, திருச்செந்துார், பழநி, வடபழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி, திருப்போரூர், சிறுவாபுரி உள்ளிட்ட மாநிலம் முழுவதுமுள்ள கோவில்களில் தரிசனத்துக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திரண்டிருந்தனர். சில கோவில்களில் உள்ளூர் அரசியல்வாதிகள், போலீஸ், முக்கிய பிரமுகர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் நீதித்துறையினர், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், அதிகார பலத்துடன் அத்துமீறி, பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்களை பொருட்படுத்தாமல் குறுக்கு வழியில் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ததை கண்கூடாக காண முடிந்தது.
ஒவ்வொருவரும் குறைந்து 8 முதல் 10 பேரை, சுற்றம்சூழ அழைத்து வந்திருந்ததுதான் பக்தர்களின் கோபத்துக்கு காரணம். இதனால், வரிசையில் காத்திருந்த பக்தர்கள் – கோவில் ஊழியர்கள் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. தைப்பூச நாளில் திருப்பரங்குன்றம் கோவிலில் சுவாமி தரிசனத்துக்கு மூன்று மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தபோது, உள்ளூர் அரசியல்வாதிகள், போலீஸ் உள்ளிட்ட பிற துறை அதிகாரிகள் வரிசையில் நிற்காமல் நேரடியாக கோவில் ஊழியர்களால் அழைத்துச் செல்லப்பட்டு தரிசனம் செய்தனர். கோவை, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பாதுகாப்புக்கு வந்த போலீசார், போலீஸ் அதிகாரிகள், தங்களது குடும்பத்தினருடன் வரிசையில் நிற்காமல், சிறப்பு தரிசனம் செய்தனர். வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்த பக்தர்கள், ‘பணம், அதிகாரம் இருந்தால்தான் சுவாமியை பார்க்க முடியுமா’ என, கோவில் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். மேலும், தேரோட்டத்தின்போதும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் மலை மீது அனுமதிக்கப்பட்டனர். அதேவேளையில், தி.மு.க., உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் அத்துமீறி நுழைந்தனர். அவர்களிடம், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களின் சிபாரிசுடன் அடையாள அட்டையும் இருந்தது.
கோவை, கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலிலும் இதே பிரச்னை தான். தேர்த்திருவிழாவில் பக்தர்களை ஒதுக்கிவிட்டு, தி.மு.க., நிர்வாகிகளுக்கு கோவில் ஊழியர்கள் வழி ஏற்படுத்தி அழைத்துச் சென்றனர். கருவறை முன் நிற்க வைத்து, முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திக், தொகுதி பொறுப்பாளர் மகேந்திரனுக்கு சிறப்பு மரியாதை அளித்தனர். கோவை மாவட்டம், அன்னுார் – மேட்டுப்பாளையம் சாலையில் குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தின்போது, கோவில் சார்பில் தி.மு.க., கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்துார் ரவி, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முக சுந்தரம் ஆகியோருக்கு பெரிய மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஆனால், நன்கொடையாளர்கள், உபயதாரர்கள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள், அறங்காவாலர்களை கண்டுகொள்ளவில்லை.
உடனடி தீர்வு அவசியம்: இதே நிலையே முக்கிய பண்டிகை, விசேஷ நாட்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தொடர்கிறது. சிறப்பு தரிசனத்துக்கு தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி வரும் முக்கிய நபர்கள், மற்ற பக்தர்களுடன் வரிசையில் நிற்பது கிடையாது. தங்களது செல்வாக்கை பயன்படுத்தி கோவில் ஊழியர்களை மிரட்டி உள்ளே நுழைந்து விடுகின்றனர்; இவர்கள் தரிசன கட்டண டிக்கெட்டும் வாங்குவதில்லை. உள்ளூர் அமைச்சர் மற்றும் அதிகார மட்டத்தினருடன் தொடர்புடைய இவர்களை தடுத்தால் தங்களுக்கு பிரச்னை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் கோவில் ஊழியர்களும் பாராமுகமாய் ஒதுங்கிக்கொள்கின்றனர். இதனால், பக்தர்கள் மத்தியில், அரசுக்குத்தான் அவப்பெயர் ஏற்படுகிறது. ‘இந்த அரசு வந்தபின்தான், தமிழகத்தில் 4,000 கோவில்களுக்கு கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது; பல கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன; பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன’ என, பெருமைப்பட்டுக்கொண்டாலும், விசேஷ நாட்களில் கோவில்கள், அறநிலையத்துறையினரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் போவது, அரசுக்கு அவப்பெயரையே ஏற்படுத்துகிறது. இதைத்தவிர்க்க, வி.ஐ.பி.,க்கள் மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், போலீசார் உள்ளிட்டோர், விசேஷ நாட்களில், அத்துமீறாமல் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக, குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அந்த நேரத்தில் மட்டுமே அவர்களை அனுமதிக்க வேண்டும். அதை மீறி நுழைவோரை தடுத்து கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை, பணிப்பாதுகாப்பை அறநிலையத்துறையினருக்கு வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை அமைச்சர் சேகர்பாபு மேற்கொள்ள வேண்டும்.