மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச பெருமாள்கள் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பௌர்ணமி திதி, மகம் நட்சத்திரம் கூடிய மாசி மகத்தினை திருநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் தேவார பாடல் பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து இன்று அதிகாலை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சந்திரசேகர சுவாமி அஸ்திர தேவருடன் வெள்ளி மஞ்சளத்தில் எழுந்தருள மங்கள வாத்தியங்கள் இசைக்க புறப்பாடு செய்யப்பட்டு சூரிய உதயத்தின் போது பூம்புகார் காவிரி சங்கமத் துறையில் எழுந்தருளினார். அங்கு சிவாச்சாரியார்கள் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ பூஜைகளை நடத்தி வைத்தனர். அஸ்திரதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் அஸ்திர தேவர் காவிரி சங்கமத் துறையில் தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் காவிரி கடலுடன் சங்கமிக்கும் இடத்தில் நீராடி சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.