பெரியகுளம்: பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.
இக்கோயில் மலைமேல்வைத்தியநாதசுவாமி கோயில் உபகோயில். பிப்.24 ல் சாட்டுதலை தொடர்ந்து, நேற்று முன்தினம் (மார்ச் 2)ல் திருவிழா துவங்கியது. மார்ச் 11வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. தினமும் நடக்கும் மண்டகப்படி தாரர்கள் நிகழ்ச்சியில் அம்மன் அன்னபட்சி, காளை, சிம்மம், மின் விளக்கு, புஷ்ப பல்லக்கு உட்பட பல்வேறு அலங்காரத்தில் இரவில் வடகரை முக்கிய தெருக்களின் வழியாக வீதி உலா வருகிறார். முக்கிய திருவிழாவான மார்ச் 10ல் கரகம் எடுத்தல், முளைப்பாரியும், மறுநாள் மார்ச் 11ல் பால்குடம், காவடி எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. மார்ச் 17ல் மறுபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் சுந்தரி,அர்ச்சகர் சீனிவாசன் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.