காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ரதி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி, காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்த அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இஷிதா ரதி தலைமையில் நேற்று நடந்தது. கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின், கலெக்டர் இஷிதா ரதி கூறுகையில், சனிப்பெயர்ச்சி வரும் 6ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, பக்தர்கள் வசதிக்காக இலவச மற்றும் ரூ.300, 600, 1,000 கட்டண சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டு, 15 டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்படுகிறது. மேலும், முதலுதவி மையங்கள், கழிவறைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தரிசன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. விழாவில் 4 லட்சம் பேர் வரை பங்கேற்பர் என, எதிர்பார்க்கப் படுகிறது. விழாவிற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகிறது. நளன் குளத்தில் நீராடும்போது சோப்பு, ஷாம்பு ஆகியவை பயன்டுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு முழுதும் 200 இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8300261071 மற்றும் 1070, 1077 கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்றார்.