புதுக்கோட்டை: புதுகையில் இருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவில், செவ்வாய் பரிகார தலமாகும். இங்கு அருள்பாலிக்கும் தையல்நாயகி உடனுறை வைத்தியநாத சுவாமியை சித்திரை மாதத்தில், பாத யாத்திரையாக சென்று வழிபடுவதை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட நகரத்தார் சமூகத்தினர் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிகழ்வு, 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. அதேபோல், இந்த ஆண்டும், பாத யாத்திரை குழுவினர் இன்று காலை புதுக்கோட்டை வந்தடைந்தனர். பின், புதுக்கோட்டை பக்தர்களுடன் மச்சுவா யில் இருந்து இன்று மாலை புறப்பட்டவர்கள், கந்தர்வகோட்டை, பூண்டி வழியாக, திருவலஞ்சுழிக்கு செல்கின்றனர். அங்கிருந்து புறப்பட்டு, கும்பகோணம், மூவலுார், மயிலாடுதுறை வழியாக, வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வரும், 21ம் தேதி சென்று, சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்க உள்ளனர்.