சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம், பொற்பாத விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி, கடந்த 14ம் தேதி காலையில் கணபதி ஹோமம் நடைபெற்று, கஞ்சி வார்த்தல் நடந்தது. பின்னர் சுவாமிக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்று இரவு சாமி வீதி உலாவும், கடந்த, 15ம் தேதி அபிஷேக ஆரா தனையும், தொடர்ந்து சுவாமி வீதி உலாவும் நடந்தது. நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், சுவாமி திரு ஊஞ்சல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவில் வளாகம் முன்பு நீண்ட வரிசையில் பெண்கள் அமர்ந்து விளக்கு பூஜையில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தனர். இந்த பூஜை பொதுமக்கள் நலனுக்காகவும், நாட்டு நலனுக்காகவும், மழை வேண்டியும் நடைபெற்றது. முன்னதாக சுவாமி அலங்கரிக்கப்பட்டு கோவில் வளாகம் முன்பு ஊஞ்சலில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை மெய்காவல் தெருவை சேர்ந்த இறை பணிக்குழுவினர் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.