சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா பாடலுக்கு நடனமாடி, ‘ரீல்ஸ்’ எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்கள் புனித தலங்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகின்றன என, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பழமையான புனித தலங்களில், முக்கியமானது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில். இக்கோவில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ராகு – கேது, பிதுர் முக்தி எனும் பாவங்களை நீக்குவது, திருமணத்தடை, நோய் தீர்த்தல் மற்றும் மன அமைதிக்கு சிறப்பு பெற்ற ஸ்தலம். இக்கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுதுமிருந்து பக்தர்கள் வருகின்றனர்.
கோவிலின் பாதுகாப்பு கருதி, 2017 முதல், கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் எடுத்து செல்லவும், வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கவும் அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், சமூக வலைதளத்தில் பிரபலமான பெண் ஒருவர், தடையை மீறி, கோவிலின் ரத வீதி பகுதி, சன்னிதி உள்ளிட்ட இடங்களில், அனுமதியின்றி சினிமா பாடலுக்கு, ‘ரீல்ஸ்’ செய்து, சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவேற்றியுள்ளார்.
கருவறை உட்பட கோவிலின் பிரதான பகுதிகள் வீடியோவில் பதிவாகி இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரு தினங்களுக்கு முன், மதுரை மீனாட்சி அம்மன் பொற்றாமரை குளம் அருகே, சிறுமி ஒருவர் ‘ரீல்ஸ்’ எடுத்து வீடியோ வெளியிட்ட சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுபோன்ற சம்பவம், ராமேஸ்வரத்திலும் நடந்திருப்பது, பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள், கோவிலின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளன. இச்சம்பவத்திற்கு, பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பக்தர்கள் சிலர் கூறியதாவது: சமூக வலைதளங்களில் பிரபலமாகும் நோக்கில், சிலர் அனுமதியின்றி கோவில் வளாகங்களில், ‘ரீல்ஸ்’ எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இது, புனித தலங்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி வருகிறது. அறநிலையத்துறையின் மெத்தனத்தையும் காட்டுகிறது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களுக்கு வருவோரை முழுமையாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.