காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில், பக்தர்களின் காலணிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு போதிய இடவசதி இல்லாததால், தொல்லியல் துறையின் வரலாற்று தகவல் பலகையின் கீழ் காலணிகள் விடப்பட்டு உள்ளன.
மத்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலை காண, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டினரும், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணியரும் தினமும் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் காலணிகளை கழற்றி வைப்பதற்கு முறையான காலணி பாதுகாப்பு அறை எதுவும் இங்கு இல்லை. இதனால், வேறு வழியின்றி பக்தர்கள் கோவில் நுழைவாயிலிலும், வளாகத்தில் உள்ள புல்வெளிகளிலும் காலணிகளை விட்டுச் செல்கின்றனர். குறிப்பாக, கோவிலின் நுழைவாயில் அருகே மத்திய தொல்லியல் துறை அமைத்துள்ள, கோவிலின் வரலாற்றுச் சிறப்புகளை விளக்கும் தகவல் பலகையின் அடியில், நுாற்றுக்கணக்கான காலணிகள் கழற்றி விடப்பட்டுள்ளன. நாட்டின் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள வைக்கப்பட்டுள்ள தகவல் பலகை, காலணிகள் குவிக்கும் இடமாக மாறியிருப்பது வரலாற்று ஆர்வலர் களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தொல்லியல் துறை அலுவலர் ஸ்ரீதரன் கூறியதாவது: கைலாசநாதர் கோவிலில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனுடன் சேர்த்து, கோவில் வளாகத்திற்கு வெளியில் பக்தர்கள் காலணிகளை பாதுகாப்பாக வைக்கும் வகையில் உலோகத்தால் ஆன, ‘ரேக்’ விரைவில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.