காஞ்சிபுரம்: ஏனாத்துாரில் அமைந்துள்ள சங்கரா பல்கலையில், ‘ஐடியா லேப்’பை, காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் விஜயேந்திரர் நேற்று திறந்து வைத்தார்.
மாணவர்களின் புதுமைச் சிந்தனை மற்றும் தொழில்முனைவுத் திறனை மேம்படுத்தும் வகையில், ஏ.ஐ.சி.டி.இ., எனும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ள ‘ஐடியா லேப்’ எனும் நவீன ஆய்வகத்தில் நிறுவப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பார்வையிட்ட சங்கராச்சாரியார் விஜயேந்திரர், மாணவர்களின் கண்டுபிடிப்பு களையும் மாதிரிகளையும் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பல்கலை துணைவேந்தர் ஸ்ரீநிவாசு பேசுகையில், ‘‘மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து, சமூகத்திற்கும் தொழில் துறைக்கும் பயனளிக்கும் புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்கும் மையமாக இந்த நவீன ஆய்வகம் திகழும்’’ என்றார்.
நிகழ்ச்சியில், இணை -துணைவேந்தர் வசந்த்குமார் மேத்தா, பல்கலை பதிவாளர் ஸ்ரீராம், ஐடியா லேப் ஒருங்கிணைப்பாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
‘புதுமையிலிருந்து தயாரிப்பிற்கு,- தயாரிப்பிலிருந்து தொழில்முனைவிற்கு’ என்ற இலக்குடன் இயங்கவுள்ள இந்த நவீன ஆய்வகம், மாணவர்களின் படைப்பாற்றலை உலகத் தரத்திற்கு உயர்த்தும் என பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.