சாய்பாபா -பகுதி 7 | Sri Sathya Sai Baba's 100 Birthday Celebration | Sathya Sai Baba News | Sri Sathya Sai Baba | Sri Sathya Sai Baba photos | ஸ்ரீ சத்ய சாய் பாபா - 100வது பிறந்த நாள்

சாய்பாபா -பகுதி 7



ஈஸ்வராம்பாவுக்கு மனதில் ஏற்பட்ட பயம் இன்னும் தீரவில்லை. என்ன இருந்தாலும், ஒரு ஆசிரியரை சத்யா எழவிடாமல் செய்தது அவரது மனதை வெகுவும் பாதித்தது.இது என்ன பெரிய மனுஷத்தனம்...இதனால் சத்யாவின் எதிர்காலம் பாதிக்குமே, என மற்ற ஆசிரியர்களிடம் வருத்தப்பட்டு சொன்னார் ஈஸ்வராம்பா. ஆனால் ஆசிரியர்கள் யாரும் சத்யாவைக் குறை சொல்லவில்லை.அம்மா! சத்யாவால் இப்படி செய்ய முடிகிறதென்றால் ஏதோ தெய்வீக சக்தி அவனுள் அடங்கி இருக்கிறது என்றே பொருள். நீங்கள் கலங்க வேண்டாம். நாங்கள் சத்யாவை தெய்வமாகவே மதிக்கிறோம், என்றனர்.ஆசிரியர்களின் ஒட்டு மொத்த கருத்து ஈஸ்வராம்பாவை மேலும் கலங்கடித்தது. தெய்வப்பிறவி என்பதால் சத்யாவை கண்டிக்க ஆசிரியர்கள் தவறினால் அவனது எதிர்காலம் என்னாகுமோ என கலங்கினார். கஸ்தூரி என்ற ஆசிரியர் இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்ட முன் வந்தார்.நான் சத்யாவிடம் இதுபற்றி கேட்கிறேன், என்றவர், சத்யாவின் வகுப்பறைக்கு சென்று அவனைத் தனியாக அழைத்தார்.சத்யா! நீ தெய்வப்பிறவி என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதற்காக ஒரு ஆசிரியரை எழவிடாமல் செய்தது, அவரை அவமானப்படுத்துவது போல் ஆகாதா? என்றார்.இதற்கு சத்யசாயிபாபா, நான் தெய்வப்பிறவி அல்ல. நானே தெய்வம். தெய்வத்தை மனிதன் சோதிக்க முயலும் போது தெய்வம் மனிதனை என்ன செய்யுமோ அதைத்தான் செய்திருக்கிறேன். என்னை தெய்வம் என்று அடையாளம் காட்ட இதுபோன்ற லீலைகளைச் செய்கிறேன், என்றார்.ஆசிரியர் கஸ்தூரி இதை ஏற்றுக் கொண்டார். சாயிபாபாவின் சீடராக மாறினார். தெய்வப்புராணங்களை புரட்டினால் அரக்கர்கள் தெய்வ சக்திக்கு எதிராகவே செயல்பட்டு வந்திருக்கிறார்கள். தெய்வத்திடமே வரம் பெற்று, தெய்வத்திற்கு எதிரான நிலையை எடுப்பார்கள். சத்யா விஷயத்திலும் இது உண்மையாயிற்று.சத்யாவிற்கு எதிராக ஒரு கூட்டம் கிளம்பியது. தாத்தா கொண்டமராஜூவின் வம்சாவழியினருக்கு ஏராளமான குழந்தைகள் இருந்தனர். எல்லாருமே சத்யாவின் வீட்டில் தான் தங்கியிருந்தனர். இவர்களும் சத்யாவின் பள்ளியில் படிப்பவர்கள் தான். சத்யாவிற்கு ஏற்படும் புகழைத் தாங்கும் சக்தி இவர்களிடம் இல்லை. பொறாமையால் சத்யாவை மட்டம் தட்டுவது என முடிவெடுத்தனர்.

அன்று சத்யா பள்ளிக்கு போய்க் கொண்டிருந்தான். சித்ராவதி ஆற்றைக் கடந்து தான் சத்யா பள்ளிக்கு சென்றாக வேண்டும்.சத்யா! நீ தான் கடவுளாச்சே! எங்கே எங்களுடன் போட்டிக்கு வா! நாம் சண்டை போடுவோம். யார் வெற்றி பெறுகிறார்கள் என பார்ப்போம், வாப்பா, என்றனர்.சத்யா அவர்களைப் பார்த்து புன்முறுவல் செய்து விட்டு தன் வழியில் சென்றான். டேய்! அவன் சரியான பயந்தாங்கொள்ளிடா! அவனாவது, நம்மகிட்ட வாலாட்டுவதாவது, எனக் கேலி செய்தனர்.மனிதர்களின் கேலிக்கு தெய்வம் பணிந்தால் மனிதனுக்கும், தெய்வத்துக்கும் என்ன வித்தியாசம்...அந்த தெய்வமகன் எதையும் சட்டை செய்யாமல் நடந்து கொண்டே இருந்தான்.உடனே சத்யாவின் அனைத்து உறவு பையன்களும் ஆத்திரமடைந்தனர். அவன் கையைப்பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக சண்டைக்கு இழுத்தனர். சத்யாவை அடித்து துவைத்தனர். சத்யாவின் அழகான உடைகள் கலைந்தன. சத்யாவை ஆற்றுமணலில் போட்டு புரட்டி எடுத்தனர். கண்டு கொள்ளவே இல்லை சத்யா.அடித்தவர்களின் கைகள் வலித்தன. சத்யாவை தரதரவென இழுத்துக் கொண்டு போய், ஒரு முள்புதர் அருகே போட்டுவிட்டனர்.சத்யா அமைதியே வடிவாக எழுந்து பள்ளிக்குச் சென்றான். அவன் தலையும், உடையும் கலைந்திருப்பதைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.சத்யா என்ன நடந்தது? என அவர்கள் விசாரித்தனர்.
அடி கொடுத்து விட்டு வகுப்பில் நல்ல பிள்ளைகள் போல் அமர்ந்திருந்த சத்யா ஏதும் நடக்கவில்லை என்றே சொன்னான்.அதற்குமேல் ஆசிரியர்கள் ஏதும் கேட்கவில்லை. ஆனால் மாலையில் வீடு திரும்பியதும், சத்யாவின் அழுக்கடைந்த உடையையும், கலைந்த கேசத்தையும் கண்ட அன்னை ஈஸ்வராம்பா சத்யாவைக் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்து விட்டார். சத்யா, சொல், உடைகள் அழுக்காக காரணம் என்ன? முடி இப்படி கலைந்திருக்கிறதே! அம்மாவிடமும் ஏதும் நடக்கவில்லை என்றே சொன்னான் சத்யா. அம்மா! இன்று காலையில் பஜனை நடந்தது. எல்லாரும் பஜனை பாடினார்கள், என்றான்.

ஆம்! தெய்வத்தை போற்றினாலும், தூற்றினாலும் அது பஜனையாகவே ஆகிறது...அதனால் தான் பாபா இப்படி சொல்லி இருக்க வேண்டும்.மறுநாள் விடுமுறை. அம்மா சத்யாவைக் காணாமல் வெளியே தேடிச் சென்றார். தோப்பிலிருந்து இனிமையான சங்கீதம் கேட்டது. பண்டரிநாதனை வாழ்த்தி பஜனைப்பாடல் கேட்டது. இதுவரை கேட்காத பாட்டு அது.இவ்வளவு அழகாக புத்தம்புது பாடலை இசை அமைத்து ராகத்துடன் பாடுவது யார்? உடன் ஏராளமானோர் பாடுகிறார்களே!ஈஸ்வராம்பா தோட்டத்திற்கு சென்றார். அங்கே சத்யா நடுநாயகமாக வீற்றிருந்து இனிமையாகப் பாட, மற்றவர்கள் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தனர்.ஈஸ்வராம்பா தன் மகனுக்கு இந்த இளம்வயதிலேயே பாடல் இயற்றி பாடும் திறமை வந்தது பற்றி பெருமை கொண்டார். அதே நேரம் தாய்மைக்கே உரிய கனிவுடன், இவனுக்கு கடும் திருஷ்டி ஏற்படுமே, எனக் கவலையும் கொண்டார்.அன்று மதியம் பெருமழைக்கான அறிகுறி தெரிந்தது. அவ்வூரில் புது வீடு கட்டிக் கொண்டிருந்த வெங்கம்மா, தன் செங்கல் சூளையை எப்படி காப்பாற்றுவது என கவலை கொண்டாள். மிகவும் சிரமப்பட்டு கடன் வாங்கி, பச்சை செங்கல்களை அடுக்கி அவற்றை சுடுவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யும் போது மழை கொட்டினால் என்னாவது. கவலையுடன் இருந்த அவளுக்கு ஒரு பெரியவர் உதவ முன்வந்தார்.தன் வயலில் இருக்கும் கரும்புத்தோகையைக் கொண்டு வந்து சூளை மீது போட்டு விட்டால் மழைத்தண்ணீரில் இருந்து சூளையை ஓரளவு பாதுகாக்கலாம் என யோசனை சொன்னார் பெரியவர்.எல்லாரும் வயலுக்கு புறப்பட்டனர். சத்யா இல்லாமலா...அவனும் அவர்களுடன் புறப்பட்டான். பாதி வழி சென்றதும் வானம் மேலும் இருட்டியது. சத்யா எல்லாரையும் தடுத்து நிறுத்தினான்.வேண்டாம்! யாரும் வயலுக்கு செல்ல வேண்டாம். இனிமேல் மழை பெய்யாது,என்றான்.வானம் கருத்து மேகம் புடைசூழ்ந்து நிற்கும் போது இவன் இப்படி சொல்கிறானே! இவனுக்கு என்னாச்சு, அனைவரும் திகைத்தனர்.