குன்னூர்; குன்னூரில் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயின் சமூகத்தை சேர்ந்த இருவர் துறவற வாழ்க்கை துவங்கும் ஊர்வலம் நடந்தது. நீலகிரி மாவட்டம், குன்னூர் ஜெயின் சமூகத்தின் குரு ஆச்சாரியர் ஜுகோதே பிரபு. இவரை குருவாக ஏற்று பெங்களூருவை சேர்ந்த மது ஜெயின் என்பவரின் மகள் தார்மிகா மதுபாய் 34, ஜபல்பூரை சேர்ந்த ஹேமலதா, 65 ஆகியோர் துறவறம் மேற்கொண்டனர். அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இருவரையும் ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்ச்சி நேற்று குன்னூரில் நடந்தது. வண்டிப்பேட்டையில் துவங்கிய ஊர்வலம் மவுண்ட் ரோடு, பஸ் ஸ்டாண்ட் வழியாக ஜெயின் கோவிலை அடைந்தது. மக்களுக்கு தான தர்மம் செய்யப்பட்டது. ஜெயின் சமுதாய மக்கள் கூறுகையில், "உலக வாழ்க்கையில் இருந்து மோட்ச நிலையை அடைய வேண்டும் என்ற மகாவீரரின் போதனைகளை பின்பற்றி துவங்கிய இந்த துறவறத்தில் சம்பிரதாயங்களுடன் மவுன விரதம் உண்ணா நோன்பு மேற்கொள்ள உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு பிறகு துறவரம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி தற்போது நடந்தது, " என்றனர்