SS சிவசெந்தி மாலை - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சிவசெந்தி மாலை
சிவசெந்தி மாலை
சிவசெந்தி மாலை

1.செந்தில்வளர் நாயகனே சிவனே யுன்றன்
சீர்பாதம் போற்றிசெய்து சிறப்பாய்ப் பாட
வந்துதமிழ் வாக்கருளும் வாலைத் தாயே
மலரடியை நானடியேன் வருந்தி நித்தம்
தந்திரமாய்ச் சடாக்ஷரத்தைத் தியானஞ் செய்ய
சரஸ்வதியும் சாமுண்டி வீரவாகு
செந்தில்வாழ் விநாயகனே முருகா ஐயா
சீர்பாத மெந்நாளுஞ் சரணங் காப்பே

2. ஈசன்மகிழ் பொதிகைமுனி குருவுமாகி
ஈராறு கைதனிலே வேலுமேந்திப்
பாசமுடன் மயிலேறி அசுரரை வென்று
பண்பான அமரருட துயரந் தீர்த்த
தேசிகனார் செந்தில் வடிவேலர் மீதில்
தீர்க்கமாய் ஐம்பத்தோர் கவிநான் சொல்ல
மாசிலாப் பரஞ்சோதி ஒற்றைக் கொம்பன்
மலரடியை அனுதினமும் வணங்குவோமே.

3. காருகந்த மேனியனும் அயனுங் காணார்
கடவுளர்க்கு உபதேச மருளு மூர்த்தி
வாருகந்த குவிமுலையாள் உமையாளீன்ற
வளர்மணியே செழுஞ்சுடரே மயிற்க டம்பா
தாருகத்த பன்னிரண்டு கையும் வேலும்
சண்முகனே உன்னிருதாள் சதங்கை கொஞ்சச்
சீருகந்து எனையாளும் ஐயா வா வா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

4. அயிலிலங்கு செழுலுஞ்சேவற் கொடியும் வாளும்
ஆறுசங்க சூலமும் அழகா யேந்திப்
துயிலிலங்கு மணிமார்பும் கடப்ப மா<லுஞ்
சோதியொத்த திருமேனி சுயம்ப்ர காசம்
ஒயிலிலங்கு நடையழகு உனைக்கொண் டாட
உன்னிருந்தாள் சதங்கை கொஞ்ச உமையாள் பாலா
செயிலிலங்க எனைக்காக்க ஐயா வா வா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

5. முத்து நவரத்ன முடியசையு முல்லை
முறுவலுரு கனிவாயு முகங்க ளாறுஞ்
சற்றுகுற மாதுவள்ளி தெய்வானை சூழ
மயில்சேவற் கொடியிலங்க அன்பு கூர்ந்து
எத்தேச காலமுந்தன் பாதம் போற்றி
எளியேனான் தெண்டனிட எனைநீ காக்க
சிற்றடியில் சிலம்பு கொஞ்ச ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

6. கஞ்சமலர் அணியுந்தி ருவுந்தி மார்புங்
காதிலிசை குண்டலமும் கையில் வேலும்
த<ஞ்சமென்றோர்க் கருள்புரியும் அமுத வாயுஞ்
சண்முகனே உன்னிருந்தால் சதங்கை கொஞ்ச
அஞ்சலென்று வந்தடியேன் தன்னைக் காக்க
அழகான மயிலேறி அடியேன் முன்பு
செஞ்சதங்கை கலகலென ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

7. பழம்பொருளே மனோன்மனியாள் ஈன்றெடுத்த
பாக்கியமே மெய்<ஞ்ஞானப் பவுசே வேதத்
தொழும்பொருளே இடையில் கலைச்சுழியின் மீதில்
துலங் குநலம் புரிந்தருளும் சுவாமி நாதா
இளம்பொருளே வள்ளியம்மை தெய்வ யானை
இன்பசுக நாயகனே எளியேன் உள்ளச்
செழும்பொருளே என்குருவே சித்தே வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

8. விரிவுற்ற தோகையில் மீதில் ஏறி
வீரவாகு தம்பிமார் மிக்க வீரர்
அறிவுற்ற பூதபடை சூழ்ந்து மேவ
அயில்சேவற் கொடியிலங்க அன்பர்க்காகப்
பரிவுற்ற வள்ளியம்மை தாய் தெய்வானை
வலஇடமா யெழுந்தருளி மனது கூர்ந்து
தரிசித்து யான்போற்ற ஐயா வா வா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

9. மெய்யுற்ற பரஞ்சுடரே கருணை மூர்த்தி
வேதாந்த மெய்ப்பொருளே அமலநாதா
மையுற்ற கூர்விழியாள் வள்ளி யம்மாள்
வசீகரசி காமணியே வா வா என்முன்
கையுற்ற வேல்துலங்க இடைதள் ளாடக்
கனகபத சிலம்புதண்டை கலீரென் றென்முன்
மெய்யுற்ற யான்போற்ற ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

10. கடம்பணிந்த புயமிலங்க இடை தள்ளாட
கரங்கள் பன்னிரண்டிலங்க வயிரமுத்து
வடம்புனைந்த மார்புதனில் குழையிலங்க
மதிமுகஞ் சடைமுடியும் பளப ளென்ன
நடம்புரிந்த பதந்துலங்க சதங்கை கொஞ்ச
நறுமலர்கள் கமகவென நாயே னுள்ளம்
திடம்புரிந்து எனையாளும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

11. சருவலோக நாயகனே விஞ்சை மூலத்
தவக்கொழுந்தே மெய்ஞ்ஞானத் தாயாம் வள்ளி
அருள்மருவு பரங்கிரியாய்க் குன்று தோறும்
அமர்ந்தவனே பாலசுப்ரமண்ய தேவா
அருணகிரி நீலகண்டர் கீரற்கெல்லாம்
அருள் நிறைந்த கண்மணியே அழகே ஞானத்
திரவியமே என்குருவே சித்தே வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

12. மந்திரஞ்சேர் மெய்ப்பொருளே ஞான மூர்த்தி
வாலையம்மா ளீன்றெடுத்த மரகதமே மூலம்
தந்திமுகன் தனைப்படைத்த சுவாமி நாதா
சகலசித்து மாடுகின்ற சற்குருவே ஞான
சுந்தரமே வள்ளிதெய்வ யானை நேயா
துரந்தரமே சௌந்தரமே துலங்க என்றன்
சிந்தைகுடி கொண்டருளும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

13. அறியாத ஏகவெளி வீதியாகி
அகண்டபரி பூரணமாய் வாசி யோகச்
சுழியாகிச் சுழுமுனைச்சூட்சும முமாகித்
துலங்குகின்ற விந்துவும் நாதமாகி
ஒளியாகிப் பரஞ்சுடராய் உருவமாகி
ஒன்றிரண்டாய் மூன்றாக உலக மெங்கும்
தெளிவாக விளையாடும் ஐயா வா வா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

14. கைகொடுத்து மெல்லமெல்ல வாவா என்றால்
கால்தூக்கி நடக்க நடை காட்டி என்னை
பையவேனும் நடைவருமோ தூக்கி னாலும்
படுத்திருந்து தூங்குமுன்னே பரனே யுன்றன்
மெய்யருளே தான்காட்டி ஞானங்காட்டி
விந்தைலர்த் தாள்காட்டி வியாளத் தொண்டு
செய்தவர்க்கு இதுசமயம் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

15. நலங்கள்பெற ஆறெழுத்தின் பொருளுங் காட்டி
நடுகின்ற முதலெழுத்தின் பொருளுங் காட்டி
துலங்குகின்ற விதிவாசல் நாலுங் காட்டிச்
சூழ்ந்து நின்ற நல்வீரசொ ரூபங்காட்டி
இலங்குகின்ற தெய்வானை மயில் சேவலேந்தி
என்னிருகண் விழிகாணத் தோற்றம் காட்டி
சதங்கைப்பதத் தினைக்காட்டும் ஐயா வா வா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

16.அன்பருளம் மேவுகின்ற ஐயா வாவா
அரகரா ஆறுமுக சுவாமி வாவா
 உம்பர்குடி வாழவந்த உறவே வாவா
ஓம்நமவசிவாய குரு மூர்த்தி வாவா
எம்பெருமான் என்சுவாமி நாதா வாவா
என்கோவே எனையாளும் தேவா வாவா
என்பொதிகை முனிபணியும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

17. காரிலங்கு கூந்தல் மின்னாள் மோகங் காட்டி
காம இதழ்ச் சுகங்காட்டிக் கருணை கூர்ந்து
தேரிலங்குத் தமிழ்காட்டி <ஞானங் காட்டி
நினைவினுக்கு மறியாத அருளுங் காட்டித்
தாரிலங்குத் திருமார்பும் தோளுங் காட்டி
சண்முகமும் பன்னிருகை வேலுங் காட்டி
சீரிலங்கும் பதம்காட்டும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

18. ஆசையெனும் பேரின்பப் பொருளுங் காட்டி
அஞ்செழுத்தின் ஆறெழுத்தின் அருளுங் காட்டிப்
பூசைசெய்யும் விதிப்படியே முறையுங் காட்டி
பூரணமாய் மெய்ஞ்ஞானப் பொருளுங்காட்டி
மாசில்லாப் பரஞ்சோதி மணிபோல் என்றன்
மனத்திலென்றும் பிரியாத மௌனங் காட்டி
தேசிகனே எனையாளும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

19. உருப்படுத்தி யாளாக்கி யெழுந்த பிள்ளை
ஓதுதற்கு இசைகாட்டி உள்ளொ ளிக்குள்
பொருந்தியைந்து புலன்களையும் ஒன்றாய்க் கூட்டிப்
பூரணமாய் மெய்ஞ்ஞானப் பொருளுங் காட்டி
கருத்திலொன்று பிரியாமல் அருளுங் கூட்டிக்
கவியின்பச் சுகங்காட்டிக் கருணை கூர்ந்து
திருத்தியெனை ஆட்கொண்ட ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

20. நானுன்றன் பதமுழுதும் நம்பினேன் வா
நற்கதிதந் தாண்டருள்வாய் நாடி நீயும்
தானுன்றன் கிருபை செய்து அருள்செய் வாயே
தமிழிசையும் இயல்பரதம் தந்து காப்பாய்
மானீன்ற பூங்கொடியாள் கானில் வள்ளி
மாத்தெள்ளிக் கொடுக்குந்தினை மாவும் மிக்க
தேனுண்ட கனிவாயா ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

21. பாடுகின்ற மெய்ப்பொருளே ஐயா வாவா
பாக்கியமே மெய்ஞ்ஞானப் பவிசே வாவா
நாடுகின்ற என்குருவே சாமி வாவா
நாதாந்த வசனியாள் பாலா வாவா
ஆடுகின்ற வேதாந்தப் பொருளே வாவா
ஆச்சர்ய அருள்புரிய அடியேனுள்ளே
தேடுகின்ற மெய்ப்பொருளே ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

22. உன்பதத்தைக் காணாத விழிதான் என்ன
உன்செயலைப் பாடாத வாய்தான் என்ன
அன்புடனே உனைத்து தியாச் சிந்தை என்ன
அனுதினமும் சேவை செய்யாக் கைதான் என்ன
நம்பனை த்யானம் செய்யா மனந்தான் என்ன
நாயுடலை வளர்த்துமென்ன இருந்து மென்ன
தென்பொதிகை முனிபணியும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

23. சுப்பையா என்சுவாமி வாவா என்று
துதிக்கமிக அடிபணிந்து அழைத்த வேளை
அப்பையா என்முன்னே வருவதற்கு
ஆயாச மேதுசொலு அடியேன் உன்னை
எப்பையா மறந்திருந்தேன் குறைகள் ஏது
இதுவேதும் அறிந்ததில்லை எனக்கே அன்பாய்ச்
செப்பையா வாய்திறந்து ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

24. விரிகமலோன் பரவுகின்ற விமலா வாவா
வேதாந்த மெய்ஞ்ஞான விசாகா வாவா
பரிபுரவனொளியேதம் பரனே வாவா
பரமகுருசாமி கந்த சுவாமி வாவா
அரிநமசிவாயமெனும் பொருளே வாவா
ஆறெழுத்தில் அமர்ந்தருளும் அப்பா வாவா
திரிபுரதாண்டவராயர் மைந்தா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

25. அப்பனே வா சற்குருவாம் அண்ணலே வாவா
அங்குமிங்குமாய் நிறைந்த அழகே வாவா
சுப்பையாவா முத்தையா வா துரந்த ராவா
சுந்தரியாள் ஈன்றெடுத்த துரையே வாவா
இப்பவா இங்கு வா என் முன்னே வாவா
எளியேனைக் காத்தருளும் சுவாமி வாவா
செப்பரிய முற்பொருளே ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

26. அலங்கார ரவி மதில்சூழ்மலையும் சார்பும்
அமிர்தநதி சுத்திவரும் அல்லி தேசம்
இலங்குகின்ற மாத்தூரின் நடுவே கம்பம்
எட்டிரண்டும் சாத்திவைத்த வட்ட வீடு
துலங்குகின்ற மேவாசல் துணிந்த வீடு
தூக்கியிரு கால் பாதந்தொந்தோ மென்று
சலங்கைப் பதந்தனைக்காட்டி ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

27. தந்தையும்நீ அன்னையும்நீ என்னை நாளும்
சற்குருநீ என்றழைத்தால் தமியேன் முன்னே
வந்ததினால் உன்குலத்தில் தாட்சி யாமோ
வாராமல் இருப்பதற்கு வழக்கே துண்டோ
எந்தனுக்குச் சேனையுண்டோ உனைப்பிடித்து
எளியேன்முன் கொண்டுவர இயலுமோ சொல்
செந்திநகர் தனில்வாழும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

28. எடுத்தமுறை தவறாமல் இருக்க வேணும்
எங்கிலுமுன் செந்தமிழைப் பாட வேணும்
தடுத்தோரை வாயடைக்கச் செய்ய வேணும்
சடாட்சரத்தில் உன்பெருமை நாட்ட வேணும்
அடுத்தோர்க்கு உன்செயலைக் காட்ட வேணும்
அனுதினமும் பாதமலர் சூட்ட வேணும்
திடத்துடனே எனையாளும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

29. முப்பொருளே தற்பரமே அகண்ட வீதி
முடியிலங்கு கோமளமே முதலென் கோவே
அப்பனே வா என்றுகெஞ்சி அழைப்பதல்லால்
அதட்டியழைப் பதுமுண்டோ யார்தான் சொல்லு
இப்படியாய்த் திருப்பரங்குன்றமர்ந்த நேசா
இரக்கமுடன் கிருபைவைத்து எளியேன் உன்மேல்
செப்புதமிழ் கண்டுகந்தே ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

30. எம்மனது வாடுவது கண்டிருந்தும்
எவர்க்கு வந்த விருந்தோ என்றிருக்கலாமோ
உன்மனது கல்லோதான் இரங்கொணாதோ
ஓதுதமிழ் கேட்கலையோ உலகமெல்லாம்
தன்மனது நீயாமோ நான்தான் உன்மேல்
தான்நினைத்த சித்துதந்து ரட்சி ஐயா
தென்பொதிகை முனிபணியும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

31. நீவா வா காத்தருள எளியே னுள்ளம்
நினைத்தவரம் அருள்புரிவாய் நீதானப்பா
தாய் வா வா சுவாமி நீ வாவா என்று
தமியேன் கைக்குதவிதந்து ரட்சி ஐயா
வா வா யென்றழைத்திட்டால் வந்தேன் முன்னே
வாராதிங் கிருப்பதற்கு வழக்கும் உண்டோ
தேவாதி தேவாவா ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

32. பரமனருள் விநாயகனே வாவா வாலைப்
பார்வதியால் பாலகனே வாவா எங்கும்
சருவஉயிர் நாயகனே வாவா சித்துத்
தமிழ்சொரியும் நாயகனே வாவா யார்க்கும்
கருணைபுரி நாயகனே வாவா என்னைக்
காத்தருளும் நாயகனே வாவா என்றன்
திருவருள்செய் நாயகனே ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

33. ஏனையா என்மீதில் மோடி வேண்டாம்
ஏழையல்லோ பாலனல்லோ எளியேன் யானும்
நானையா உன்றனிரு பாதம் போற்றி
நாதனேவா யென்றழைத்தால் நாயேன் முன்னே
தானையா முன்தோன்றி யருளே புரிந்து
தற்காத்து ரட்சிவள்ளித் தாயாள் தந்த
தேனையா உண்டகனி ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

34. நாளென்ற இறுமாப்பைத் தீர்க்க வேணும்
நாடியான சுழுமுனையை நோக்க வேணும்
தானென்ற வன்பொருளைப் போக்க வேணும்
சாகாமல் சற்றுமனம் கிடக்க வேணும்
வானென்ற ஒளிஒளிதான் தோண வேணும்
வடிவேலும் மயிலும்தான் காண வேணும்
தேனுன்ட வாயானே ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

35. பறந்துநின்ற என்மனத்தைத் திருத்த வேணும்
பலர்முகம் பார்த்து உருகாமல் இருக்க வேணும்
உறைந்தெழுந்த ஆங்காரம் ஒடுங்க வேணும்
உண்மைதனில் மௌன மனம் அடங்க வேணும்
நிறைந்த சடாட்சரமுமனம் நாட வேணும்
சிறந்திடவே இலட்சணமே ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

36. ஆக்கைநரம் பெலும்புதசை உதிரம் சிந்தி
ஐம்புலன்களோடுமுன்னே ஐயா உன்னைப்
பார்க்கவேணும் கண்குளிர முகங்க ளாறும்
பன்னிரண்டு புயமார்புங்கடம்புஞ் செய்கை
ஏற்கமயில் சேவல்வள்ளி தெய்வ யானை
இலகுசக்தி வேல்வீர வாகுவோடு
சீக்கிரமாய் என்றன்முன் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

37. ஆடுகின்ற பரஞ்ஜோதி மணியே நான்கும்
அருமறைக்கு வல்லவனே அமுதே ஆறு
வீடுகின்ற விளங்கு பரஞ்சுடரே ஞான
விளக்கொளியே வேதாந்த வேதமூர்த்தி
கூடநின்று விளையாட மனது கூர்ந்து
கோலமயில் மீதேறி வருவாய் என்று
தேடுகின்ற எளியேன்முன் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

38. நாவாலும் மனத்தாலும் தியானத்தாலும்
நம்மாலும் தமிழாலும் நாடி நாடி
வாவாயென் றழைக்கவாரா திருப்ப துண்டோ
மனமிரங்கி அடியேன் முன் வாவா சுவாமி
பாவாலே உனைத்துதித்தே உலகத் தோர்கள்
பவிசுபெற்றெந் நாளுமுன்றன் பாதங்காணத்
தேவாயெ னுமையா என் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

39. நாட்டமுற்றேன் உன்மீதில் அன்பு வைத்து
நானழைத்தால் வருவதற்கு நாயேன் முன்னே
கோட்டையுண்டோ வழியுண்டோ வழிகோணாதோ
கூப்பிட்டால் தமிழோசை செவிகேளாதோ
வாட்டமுற்று நான்மயங்கலாமோ நீதான்
மனமிரங்கி அடியேன்முன் மகிழ்ச்சி கூர்ந்து
தேட்டமுற்றேன் அன்புடனே ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

40. ஏகமுற்ற பரஞ்சுடரே <ஞானமூர்த்தி
எந்தையே பொதிகைவரை இருக்கும் நாதர்
ஆகமுற்ற செழுங்கனியே ஏழைக் கேற்ற
அப்பனே எனைமுழுதும் ஆண்ட சாமி
தாகமுற்று உனைத்தேடி வருந்துகின்ற
தமியேன்முன் வரவேணும் சமயம்ஈதே
தேகசித்தி தந்தருளும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

41. வச்சிரவேல் ஏந்து பன்னிரண்டு கரமும்
மணிமுடியும் குண்டலமும் மயிலும் சேவல்
கச்சிடையும் வச்சிரமும் இலங்கு மார்பும்
காதிலிடும் குண்டலமும் கையில் வேலும்
தற்சொரூபம் தனைக்காட்டி எளியேன் கண்கள்
தரித்துன்னி இசைத்ததெல்லாம் தருவாய் வேலா
தெட்சிணாய னம்பரவும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

42. குருவருளை எந்நாளும் நோக்க வேணும்
கோபமென்ற பேயதனைப் போக்க வேணும்
கருவியருள் மாய்கமலை நீக்க வேணும்
காலடியே நாடிமனம் தூக்க வேணும்
அரகரா சிவசுப்ரமண்யா என்றே
அனுதினமுன் மலர்ப்பதத்தைக் காண வேணும்
திருவருள் தந்தெனையாளும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

43. அடங்காமல் ஓடுகின்ற பேய்மனத்துக்கே
அருள்காட்டி அரவணைத்தே அன்பாய் ஞான
வடம்பூட்டிப் பிடித்திறுக்கி அறுவென்றோங்கு
மாணிக்கம் பத்தோடே வரிந்து சேர்த்து
உடங்கொள்ளும் படியாறெழுத்தால் முட்டி
ஒடுங்கிநின்றேன் உளந்தனிலே உகந்தெந்நாளும்
திடங்காணும் படிக்கருள்செய் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

44. நாசிசெவி கண்மூக்குப் புருவம் ஐயா
நடுவிலொரு நாசியிடைக் கலைகளான
நாசியெனும் சுழுமுனையில் நீங்கா வட்டம்
வட்டமதில் மேல்வீடு மௌன வாசல்
ஓசைநடம் புரிந்தருளும் பதமுங் காட்டி
உன் கிருபைச் செயல்காட்டி உகந்தோம் என்று
தேசிகனே எனையாளும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

45. உன்கிருபை சொல எனக்குத் தயவு வேணும்
ஊர்வழியே துணையெனக்கு வரவும் வேணும்
எங்கிலுமுன் செந்தமிழைப் பாட வேணும்
எதிர்த்தோரை வாயடக்கிப் போட வேணும்
அங்கிலும்நீ நின்று விளையாட வேணும்
அனுதினமும் மலர்ப்பதத்தைச் சூடவேணும்
செங்கையிலே வேலிலங்க ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

46. மடம்பொருளே இதுவென்ன மாய வாழ்வு
வான்பொருளென் றெண்ணிலேன் தமியேனுன்றன்
நடம்பொருளே தான்பாரா திருத்த தாகில்
நானுமெங்கே செல்வதினி நாயனே சொல்
இடம்பொருளே வல்தந்து நான் தானென்று
எந்நாளும் நினைத்த சித்தி இன்பங்காட்டித்
திடம் பொருளே தந்துதவும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

47. ஓசைகொண்ட சதங்கைதண்டை சிலம்பு கொஞ்ச
உகந்து நடம் புரிந்து பதமுன்னே காட்டி
ஆசைகொண்டு வருந்தியுனை நினைத்தேன் காண
ஐயனே வாவென்று அழைப்பதல்லால்
ஏசிலம்பு கொண்டுமெல்ல இங்கு வாவென்
றேசவுனைப் பிடித்தடிக்க எண்ணிலேன்காண்
தேசமெங்கும் நிறைந்தருளும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

48. நாவிலுமுன் செந்தமிழைப் பாட வேணும்
நாடாறுமுன் பாதங்கொண்டாட வேணும்
ஏவல்செய்தே தேவதைகள் நிற்க வேணும்
எந்நாளும் வீரசக்தி காக்க வேணும்
வசிலமாய் வள்ளியம்மன் இடந்தெய்வானை
மலர்ப்பாதம் நீங்காமல் நிற்க வேணும்
சேவல்கொண்ட மயிலிலங்க ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

49. தங்கமுடி சூடுகின்ற பரனே போற்றி
சகல கலை வல்லவனே சுவாமி போற்றி
திங்கள்முடி ந<ஞ்சுடையார் பாலா போற்றி
செகசூட்சி உமையவள் கண்மணியே போற்றி
செங்கைவடி வேலனே கடம்பா போற்றி
செகமெல்லாம் உண்டருல்மால் மருகா போற்றி
மங்கைவள்ளி தெய்வானை மணாளா போற்றி
மயூரகிரி தனிலுறைவாய் போற்றி போற்றி !

50. அத்தனருள் பரமகுரு சுவாமி வாவா
அங்கையற்கண் புத்திரனே ஐயா வாவா
முத்திதரும் குமரகுரு மூர்த்தி வாவா
முத்தையா நால்வேத முதலே வாவா
பச்சைமயில் வாகனனே பரனே வாவா
சித்தர் முனிவோர் பணியும் குகனே வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி

51.ஆதியாய் உலகெங்கும் நிறைந்த ஜோதி
ஐம்பத்தோர் அக்ஷரத்தில் நிறைந்த ஜோதி
ஓதுகின்ற செந்தமிழின் குருவே ஜோதி
ஓங்காரமானவெழுத் துகந்த ஜோதி
நீதியாச் சடாட்சரத்துள் ஆடுஞ்ஜோதி
நிஷ்களா னந்தபர மானந்த ஜோதி
சாதிமத பேதமிலாச் சமய ஜோதி
சமயமிது வந்தென்னைக் காப்பாய் ஜோதி.

52. ஆறாறு ஐம்மூன்று கவிநான் சொல்லி
ஆராதனை செய்ய அடியேன் முன்னே
மாறாத வேலும்பன்னி ரண்டு கையும்
வள்ளிதெய்வா னையோடு மயில்மீ தேறிக்
காறாத பதம் சிலம்பு கலீர்என் றாடக்
கலிகூத்து உன்றனிரு பாதம் போற்றி
தீராத நோய்தீர்க்கும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar