SS பெருமாளின் திருப்பள்ளியெழுச்சி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பெருமாளின் திருப்பள்ளியெழுச்சி
பெருமாளின் திருப்பள்ளியெழுச்சி
பெருமாளின் திருப்பள்ளியெழுச்சி

தொண்டரடிப்பொடியாழ்வார் அருளியது.

தனியன்

திருமாலையாண்டான் அருளிச்செய்தது

தமேவ மத்வா பரவாஸுதேவம்
ரங்கேசயம் ராஜவதர்ஹணீயம்!
ப்ராபோதிகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே!!

திருவரங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது

நேரிசை வெண்பா

மண்டங் குடியென்பர் மாமறையோர் மன்னியசீர்த்
தொண்ட ரடிப்பொடி தொன்னகரம் - வண்டு
திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி
யுணர்த்தும் பிரானுதித்த வூர்.

1. கதிரவன்குணதிசைச்சிகரம் வந்தணைந்தான்
கனவிருளகன்றது காலையம் பொழுதாய்
மதுவிரிந்தொழுகின மாமலரெல்லாம்
வானவரரசர்கள் வந்து வந்தீண்டி
எதிர்திசை நிறைந்தனரிவரொடும் புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலிலலை கடல்போன்றுள தெங்கும்
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. 

2. கொழுங்கொடி முல்லையின் கொழுமலரணவிக்
கூர்ந்தது குணதிசை மாருதமிதுவோ
எழுந்தனமலரணைப் பள்ளி கொள்ளன்னம்
ஈன்பனிநனைந்த தமிருஞ்சிறகுதறி
விழுங்கிய முதலையின்பிலம்புரை பேழ்வாய்
வெள்ளெயிறுறவதன் விடத்தினுக்கனுங்கி
அழுங்கியவானையினருந் துயர்கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. 

3. சுடரொளி பரந்தன சூழ்திசையெல்லாம்
துன்னியதாரகை மின்னொளி சுருங்கிப்
படரொளிபசுத்தனன் பனிமதி இவனோ
பாயிருளகன்றது பைம்பொழிற்கமுகின்
மடலிடைக்கீறி வண்பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதமிதுவோ
அடலொளிதிகழ் தருதிகிரியந் தடக்கை
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

4. மேட்டிளமேதிகள் தளைவிடுமாயர்கள்
வேய்ங்குழலோசையும் விடைமணிக்குரலும்
ஈட்டியவிசை திசைபரந்தன வயலுள்
இரிந்தனசுரும்பின மிலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவரேறே!
மாமுனிவேள்வியைக் காத்து, அவபிரத-
மாட்டியவடுதிறலயோத்தி யெம்மரசே!
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

5. புலம்பினபுட்களும் பூம்பொழில்களின்வாய்
போயிற்றுக்கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசைக்கனைகடலரவம்
களிவண்டுமிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கலந்தொடை யல்கொண்டடியினை பணிவான்
அமரர்கள் புகுந்தனராதலிலம்மா!
இலங்கையர் கோன்வழிபாடு செய்கோயில்
எம்பெருமான்! பள்ளியெழுந்தருளாயே.

6. இரவியர்மணி நெடுந்தேரோடு மிவரோ
இறையவர் பதினொரு விடையருவரோ
மருவியமயிலினனறுமுகனிவனோ
மருதரும் வசுக்களும்வந்து வந்தீண்டிப்
புரவியோடாடலும் பாடலும் தேரும்
குமரதண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்
அருவரையனையநின் கோயில் முன்னிவரோ
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

7. அந்தரத்தமரர்கள் கூட்டங்களிவையோ
அருந்தவமுனிவரும் மருதருமிவரோ
இந்திரனானையும் தானும்வந்திவனோ
எம்பெருமான்! உன்கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்கவிச்சாதர்நூக்க
இயக்கருமயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம்பாரிடமில்லைமற்றிதுவோ
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

8. வம்பவிழ்வானவர் வாயுறைவழங்க
மாநிதிகபிலையொண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பனவாயின கொண்டுநன் முனிவர்
தும்புருநாரதர் புகுந்தன்ரிவரோ
தோன்றினனிரவியும் துலங்கொளிபரப்பி
அம்பரத்தலத்தினின்றகல்கின்ற திருள்போய்
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

9. ஏதமில்தண்ணுமையெக்கம்மத்தளி
யாழ்குழல் முழவமோடிசை திசைகெழுமிக்
கீதங்கள் பாடினர்கின்னரர் கெருடர்கள்
கெந்தருவரவர் கங்குலுமெல்லாம்
மாதவர் வானவர் சாரணரியக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலிலவர்க்கு நாளோலக்கமருள
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

10. கடிமலர்க்கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன்கனை கடல்முளைத் தனனிவனோ
துடியிடையார் சுரிகுழல் பிழிந்துதறித்
துகிலுடுத்தேறினர் சூழ்புனலரங்கா!
தொடையொத்ததுளவமும் கூடையும் பொலிந்து
தோன்றியதோள் தொண்டரடிப் பொடியென்னும்-
அடியனை, அளியனென்றருளி யுன்னடியார்க்கு
ஆட்படுத்தாய் பள்ளியெழுந்தருளாயே.

அடிவரவு:- கதிர் கொழு சுடர் மேட்டு புலம்பின இரவி அந்தரம் வம்பவிழ் ஏதம் கடி அமலன்.

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் அருளிச் செய்தது

தனியன்

குருமுகமநதீத்ய ப்ராஹ வேதாநசேஷாந்
நரபதிபரிக்லுப்தம் சுல்கமாதாதுகாம: !
ச்வசுரமமரவந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷõத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி !!

நேரிசை வெண்பா

மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூ ரென்றொருகால்
சொன்னார் கமற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தா னெனöறுரைத்தோம் கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து.
பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்க மெடுத்தூத - வேண்டிய
வேதங்க ளோதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று.

1. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!; உன்
சேவடி செவ்விதிருக் காப்பு.

அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்

2. அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.

3. வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும் கொண்மின்
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்காலும்பழிப்பிலோம் நாங்களிராக்கதர்வாழ், இலங்கை
பாழாளாகப்படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

4. ஏடுநிலத்திலிடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம் புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்தொல்லைகூடுமினோ
நாடுநகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர் வந்துபல்லாண்டு கூறுமினே.

5. அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக்குலத்தையெடுத்துக்களைந்த இருடீகேசன் தனக்குத்
தொண்டக்குலத்திலுள்ளீர்! வந்தடிதொழுது ஆயிரநாமம் சொல்லிப்
பண்டைக்குலத்தைத் தவிர்த்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே.

6. எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்துவழிவாழியாட்செய்கின்றோம் திருவோணத் திருவிழாவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனைப்
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே.

7. தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேயொற்றுண்டுநின்று குடிகுடியாட் செய்கின்றோம்
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி-
பாயச், சுழற்றியவாழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

8. நெய்யெடைநல்லதோர்சோறும் நியதமுமத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர் சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடையநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே.

9. உடுத்துக்களைந்தநின் பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடுமித்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

10. எந்நாளெம்பெருமான் உன்தனக்கடியோ மெற்றெழுத்துப்பட்ட -
அந்நாளே, அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுய்ந்தது காண்
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து, ஐந்தலைய -
பைந்நாகத்தலைப்பாய்ந்தவனே <உன்னைப் பல்லாண்டு கூறுதுமே.

11. அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே! நானுமுனக்குப் பழவடியேன்
நல்வகையால் நமோநாராயணாவென்று நாமம்பலபரவிப்
பல்வகையாலும்பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு கூறுவனே.

12. பல்லாண்டென்றுபவித்திரனைப் பரமேட்டியைச் சார்ங்கமென்னும்-
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன் விரும்பியசொல்
நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
பல்லாண்டும்பரமாத்மனைச் சூழந்திருதேத்துவர் பல்லாண்டே.

அடிவரவு: பல் அடி வாழ் ஏடு அண்டம் எந்தை தீ நெய் <உடுத்து எந்நாள் அல்வழக்கு பல்லாண்டு வண்ணம்.
(ஆதி கூறுதும், அநந்தரம் கூறுமின், அண்டம் என்மின், எந்தை பாடுதும், தீ உடுத்து எந்நாள் கூறுதும், நெய்யும் அல்லும் கூறுவனே.)

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

வாரணமாயிரம்

ஆண்டாள் அருளிச் செய்தது

தனியன்

அல்லிநாள் தாமரைமே லாரணங்கினின் துணைவி
மல்லிநாடாண்டமடமயில் - மெல்லியலாள்
ஆயர்குலவேந்தனாகத்தாள் தென்புதுவை
வேயர்பயந்தவிளக்கு.

1. வாரணமாயிரம் சூழவலஞ்செய்து
நாரணன்நம்பி நடக்கின்றானென்றெதிர்
பூரணபொற்குடம் வைத்துப்புறமெங்கும்
தோரணம்நாட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

2. நாளைவதுவை மணமென்றுநாளிட்டுப்
பாளைகமுகு பரிசுடைப்பந்தற்கீழ்
கோளரிமாதவன் கோவிந்தனென்பானோர்
காளைபுகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

3. இந்திரனுள்ளிட்ட தேவர்குழாமெல்லாம்
வந்திருந்தென்னை மகட்பேசிமந்திரித்து
மந்திரக்கோடியுடுத்தி மணமாலை
அந்தரிசூட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

4. நால்திசைத்தீர்த்தம் கொணர்ந்துநனிநல்கிப்
பார்ப்பனச்சிட்டர்கள் பல்லாரெடுத்தேத்திப்
பூப்புனைகண்ணிப் புனிதனோடென்தன்னைக்
காப்புநாண்கட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

5. கதிரொளிதீபம் கலசமுடனேந்திச்
சதிரிளமங்கையர்தாம் வந்தெதிர்கொள்ள
மதுரையார்மன்னன் அடிநிலைதொட்டு, எங்கும்-
அதிரப்புகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

6. மத்தளம்கொட்ட வரிசங்கம்நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்தபந்தற்கீழ்
மைத்துனன்நம்பி மதுசூதன்வந்து, என்னைக்-
கைத்தலம்பற்றக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

7. வாய்நல்லார்நல்லமறையோதி மந்திரத்தால்
பாசிலைநாணல்படுத்துப் பரிதிவைத்துக்
காய்சினமாகளிறன்னான் என்கைப்பற்றித்
தீவலம்செய்யக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

8. இம்மைக்கும் ஏழேழ்பிறவிக்கும்பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன்நம்பி
செம்மையுடைய திருக்கையால்தாள் பற்றி
அம்மிமிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

9. வரிசிலைவாள்முகத்து என்னைமார்தாம்வந்திட்டு
எரிமுகம்பாரித்து என்னைமுன்னேநிறுத்தி
அரிமுகன்அச்சுதன் கைம்மேலென்கைவைத்துப்
பொரிமுகந்தட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

10. குங்குமமப்பிக் குளிர்சாந்தம்மட்டித்து
மங்கலவீதி வலம்செய்துமணநீர்
அங்கவனோடுமுடன்சென்று அங்கானைமேல்
மஞ்சனமாட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

(கல்யாண நாளில் சீர்பாடல் கட்டத்தில் நாச்சியார் ஸம்பாவனை செய்த பின் 11-வது பாசுரத்தை ஸேவிப்பது வழக்கம்.)

11. ஆயனுக்காகத் தான்கண்டகனாவினை
வேயர்புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதைசொல்
தூயதமிழ்மாலை ஈரைந்தும்வல்லவர்
வாயுநன்மக்களைப் பெற்றுமகிழ்வரே.

அடிவரவு:- வாரணம் நாளை இந்திரன் நால்திசை கதிர் மத்தளம் வாய் இம்மை வரிசிலை குங்குமம் ஆயன் கருப்பூரம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

திருமஞ்சன காலத்தில் அநுஸந்திப்பது

நீராட்டம்

அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்

1. வெண்ணெயளைந்தகுணுங்கும் விளையாடுபுழுதியும் கொண்டு
திண்ணெனவிவ்விராவுன்னைத் தேய்த்துக்கிடக்க நானொட்டேன்
எண்ணெய்புளிப்பழங்கொண்டு இங்கெத்தனை போதுமிருந்தேன்
நண்ணலரியபிரானே! நாரணா! நீராடவாராய்.

2. கன்றுகளோடச்செவியில் கட்டெறும்புபிடித்திட்டால்
தென்றிக்கெடுமாகில் வெண்ணெய்திரட்டி விழுங்குமாகாண்பன்
நின்றமராமரம் சாய்த்தாய்! நீ பிறந்ததிருவோணம்
இன்றுநீநீராட வேண்டும் எம்பிரானோடாதேவாராய்.

3. பேய்ச்சிமுலையுண்ணக்கண்டு பின்னையும்நில்லா தென்னெஞ்சம்
ஆய்ச்சியரெல்லாரும்கூடி அழைக்கவும்நான்முலை தந்தேன்
காய்ச்சினநீரொடுநெல்லி கடாரத்தில்பூரித்துவைத்தேன்
வாய்த்தபுகழ்மணிவண்ணா! மஞ்சனமாடநீவாராய்.

4. கஞ்சன்புணர்ப்பினில்வந்த கடியசகடமுதைத்து
வஞ்சகப்பேய்மகள்துஞ்ச வாய்முலைவைத்தபிரானே!
மஞ்சளும்செங்கழுநீரின் வாசிகையும்நாறுசாந்தும்
அஞ்சனமும்கொண்டுவைத்தேன் அழகனே! நீராடவாராய்.

5. அப்பம்கலந்தசிற்றுண்டி அக்காரம்பாலில்கலந்து
சொப்படநான்சுட்டுவைத்தேன் தின்னலுறுதியேல்நம்பி!
செப்பிளமென் முலையார்கள் சிறுபுறம்பேசிச்சிரிப்பர்
சொப்படநீராடவேண்டும் சோத்தம்பிரானிங்கேவாராய்.

6. எண்ணெய்க்குடத்தையுருட்டி இளம்பிள்ளை கிள்ளியெழுப்பிக்
கண்ணைப்புரட்டிவிழித்துக் கழகண்டுசெய்யும்பிரானே!
உண்ணக்கனிகள்தருவன் ஒலிகடலோதநீர்போலே
வண்ணமழகியநம்பீ! மஞ்சனமாடநீவாராய்.

7. கறந்தநற்பாலும்தயிரும் கடைந்துறிமேல்வைத்த வெண்ணெய்
பிறந்ததுவேமுதலாகப் பெற்றறியேனெம்பிரானே!
சிறந்தநற்றாயலர்தூற்றும் என்பதனால்பிறர்முன்னே
மறந்துமுரையாடமாட்டேன் மஞ்சனமாடநீவாராய்.

8. கன்றினைவாலோலைகட்டிக் கனிகளுதிரவெறிந்து
பின்தொடர்ந்தோடியோர்பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும்
நின்திறத்தேனல்லேன்நம்பி! நீபிறந்ததிருநன்னாள்
நன்றுநீநீராடவேண்டும் நாரணாவோடாதேவாராய்.

9. பூணித்தொழுவினில்புக்குப் புழுதியளைந்தபொன்மேனி
காணிப்பெரிதுமுகப்பன் ஆகிலும்கண்டார்பழிப்பர்
நாணெத்தனையுமிலாதாய்! நப்பின்னைகாணிற்சிரிக்கும்
மாணிக்கமேயென்மணியே! மஞ்சனமாடநீவாராய்.

10. கார்மலிமேனிநிறத்துக் கண்ணபிரானையுகந்து
வார்மலிகொங்கையசோதை மஞ்சனமாட்டியவாற்றைப்
பார்மலிதொல்புதுவைக்கோன் பட்டர்பிரான் சொன்னபாடல்
சீர்மலிசெந்தமிழ்வல்லார் தீவினையாதுமிலரே.

அடிவரவு:- வெண்ணெய் கன்று பேய்ச்சி கஞ்சன் அப்பம் எண்ணெய் கறந்த கன்றினை பூணி கார் பின்னை.

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

திருமஞ்சன காலத்தில் சேர்த்து அநுஸந்திக்கும் பாசுரங்கள்

முன்பொலாவிராவணன்தன் முதுமதிளிலங்கைவேவித்து
அன்பினாலனுமன்வந்து ஆங்கடியிணைபணியநின்றாற்கு
என்பெலாமுருகியுக்கிட்டு என்னுடை நெஞ்சமென்னும்
அன்பினால்ஞானநீர்கொண்டு ஆட்டுவனடியனேனே. 

மாயமான்மாயச்செற்று மருதிறநடந்து, வையம்-
தாயமாபரவைபொங்கத் தடவரைதிரித்து, வானோர்க்கு-
ஈயுமாலெம்பிரானார்க்கு என்னுடைச்சொற்களென்னும்
தூயமாமாலைகொண்டு சூட்டுவன்தொண்டனேனே.

சூட்டுநன்மாலைகள் தூயனவேந்தி, விண்ணோர்கள்நன்னீ-
ராட்டியந்தூபம்தராநிற்கவேயங்கு, ஓர்மாயையினால்
ஈட்டியவெண்ணெய்தொடுவுண்ணப்போந்திமிலேற்றுவன் கூன்
கோட்டிடையாடினைகூத்து, அடலாயர்தம்கொம்பினுக்கே.

காடுகளூடுபோய்க்கன்றுகள் மேய்த்துமறியோடிக், கார்க்கோடல்
பூச்சூடிவருகின்றதாமோதரா! கற்றுத்தூளி காணுன்னுடம்பு
பேடைமயிற்சாயல்பின்னைமணாளா! நீராட்டமைத்து வைத்தேன்
ஆடியமுதுசெய்யப்பனுமுண்டிலன் <உன்னோடுடனேயுண்பான்.

திண்ணார்வெண்சங்குடையாய்! திருநாள் திருவோணமின்றேழு நாள் முன்
பண்ணேர்மொழியாரைக்கூவிமுளையட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன்
கண்ணலம்செய்யக் கறியும்கலத்ததரிசியுமாக்கி வைத்தேன்
கண்ணா! நீநாளைத் தொட்டுக்கன்றின்பின்போகேல் கோலம்செய் திங்கேயிரு.

பூச்சூட்டல்

அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்

1. ஆநிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய்
கானகமெல்லாம்திரிந்து உன்கரியதிருமேனிவாடப்
பானையில்பாலைப்பருகிப் பற்றாதாரெல்லாம்சிரிப்பத்
தேனிலினியபிரானே! செண்பகப்பூச்சூட்டவாராய்.

2. கருவுடைமேகங்கள்கண்டால் <உன்னைக்
கண்டாலொக்கும் கண்கள்
உருவுடையாயுலகேழும் உண்டாகவந்துபிறந்தாய்!
மருவிமணம்கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய்.

3. மச்சொடுமாளிகையேறி மாதர்கள்தம்மிடம்புக்குக்
கச்சொடுபட்டைக்கிழித்துக் காம்புதுகிலவைகீறி
நிச்சலும்தீமைகள்செய்வாய்! நீள்திருவேங்கடத்தெந்தாய்!
பச்சைத்தமனகத்தோடு பாதிரிப்பூச்சூட்டவாராய்.

4. தெருவின்கண்நின்றிளவாய்ச்சிமார்களைத் தீமைசெய்யாதே
மருவும்தமனகமும்சீர் மாலைமணம்கமழ்கின்ற
புருவம்கருங்குழல்நெற்றி பொலிந்தமுகிற்கன்றுபோலே
உருவமழகியநம்பீ! உகந்திவைசூட்டவாராய்.

5. புள்ளினைவாய்பிளந்திட்டாய்! பொருகரியின் கொம்பொசித்தாய்!
கள்ளவரக்கியைமூக்கொடு காவலனைத்தலை கொண்டாய்!
அள்ளிநீவெண்ணெய்விழுங்க அஞ்சாதடியேனடித்தேன்
தெள்ளியநீரிலெழுந்த செங்கழுநீர் சூட்டவாராய்.

6. எருதுகளோடுபொருதி ஏதுமுலோபாய்காண் நம்பி
கருதியதீமைகள் செய்து கஞ்சனைக்கால்கொடு பாய்ந்தாய்
தெருவின்கண்தீமைகள்செய்து சிக்கெனமல்லர்களோடு
பொருதுவருகின்றபொன்னே! புன்னைப்பூச்சூட்ட வாராய்.

7. குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லவெங்கோவே!
மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லவென் மைந்தா!
இடந்திட்டிரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய்!
குடந்தைக்கிடந்தவெங்கோவே! குருக்கத்திப்பூச் சூட்டவாராய்.

8. சீமாலிகனவனோடு தோழமைகொள்ளவும்வல்லாய்
சாமாறவனைநீயெண்ணிச் சக்கரத்தால்தலைகொண்டாய்
ஆமாறறியும்பிரானே! அணியரங்கத்தேகிடந்தாய்!
ஏமாற்றமென்னைத்தவிர்த்தாய் இருவாட்சிப்பூச் சூட்டவாராய்.

9. அண்டத்தமரர்கள்சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய்!
தொண்டர்கள்நெஞ்சிலுறைவாய்! தூமலராள் மணவாளா!
உண்டிட்டுலகினையேழும் ஓராலிலையில்துயில் கொண்டாய்!
கண்டுநானுன்னையுகக்கக் கருமுகைப்பூச் சூட்டவாராய்.

10. செண்பகமல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சி
எண்பகர்பூவும் கொணர்ந்தேன் இன்றிவை சூட்டவாவென்று
மண்பகர்கொண்டானை ஆய்ச்சிமகிழ்ந்துரைசெய்த விம்மாலை
பண்பகர்வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்பிரான் சொன்னபத்தே.

அடிவரவு:- ஆநிரை கரு மச்சு தெரு புள் எருது குடம் சீமாலிகன் அண்டம் செண்பகம் இந்திரன்.

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

காப்பிடல்

அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்

1. இந்திரனோடுபிரமன் ஈசனிமையவரெல்லாம்
மந்திரமாமலர்கொண்டு மறைந்துவராய்வந்துநின்றார்
சந்திரன்மாளிகைசேரும் சதுரர்கள்வெள்ளறைநின்றாய்!
அந்தியம்போதிதுவாகும் அழகனே! காப்பிடவாராய்.

2. கன்றுகளில்லம்புகுந்து கதறுகின்றபசுவெல்லாம்
நின்றொழிந்தேனுன்னைக்கூவி நேசமேலொன்றுமிலாதாய்!
மன்றில்நில்லேலந்திப்போதுமதிள்திருவெள்ளறைநின்றாய்!
நன்றுகண்டாயென்தன்சொல்லு நானுன்னைக்காப்பிடவாராய்.

3. செப்போதுமென்முலையார்கள் சிறுசோறுமில்லும் சிதைத்திட்டு
அப்போதுநானுரப்பப்போய் அடிசிலுமுண்டிலையாள்வாய்!
முப்போதும்வானவரேத்தும் முனிவர்கள்வெள்ளறை நின்றாய்!
இப்போதுநானொன்றும்செய்யேன் எம்பிரான்! காப்பிடவாராய்.

4. கண்ணில்மணல்கொடுதூவிக் காலினால்பாய்ந்தனை யென்றென்று
எண்ணரும்பிள்ளைகள்வந்திட்டு இவரால் முறைப்படுகின்றனர்
கண்ணனே! வெள்ளறைநின்றாய்! கண்டாரோடேதீமை செய்வாய்
வண்ணமேவேலையதொப்பாய்! வள்ளலே! காப்பிடவாராய்.

5. பல்லாயிரவர்இவ்வூரில்பிள்ளைகள் தீமைகள்செய்வார்
எல்லாமுன்மேலன்றிப்போகா எம்பிரான்! நீயிங்கேவாராய்
நல்லார்கள் வெள்ளறைநின்றாய்! ஞானச்சுடரே!யுன்மேனி
சொல்லாரவாழ்த்தநின்றேத்திச் சொப்படக்காப்பிட வாராய்.

6. கஞ்சன்கறுக்கொண்டுநின்மேல் கருநிறச்செம்மயிர்ப் பேயை
வஞ்சிப்பதற்குவிடுத்தான் என்பதோர்வார்த்தையுமுண்டு
மஞ்சுதவழ்மணிமாட மதிள்திருவெள்ளறைநின்றாய்!
அஞ்சுவன்நீயங்குநிற்க அழகனே! காப்பிடவாராய்.

7. கள்ளச்சகடும்மருதும் கலக்கழியவுதைசெய்த
பிள்ளையரசே! நீபேயைப்பிடித்து முலையுண்டபின்னை
உள்ளவாறொன்றுமறியேன் ஒளியுடைவெள்ளறை நின்றாய்!
பள்ளிகொள்போதிதுவாகும் பரமனே! காப்பிடவாராய்.

8. இன்பமதனையுயர்த்தாய்! இமையவர்க்கென்றுமரியாய்!
கும்பக்களிறட்டகோவே! கொடுங்கஞ்சன்நெஞ்சினில் கூற்றே!
செம்பொன்மதிள் வெள்ளறையாய்! செல்வத்தினால் வளர்பிள்ளாய்!
கம்பக்கபாலிகாணாங்குக் கடிதோடிக்காப்பிடவாராய்.

9. இருக்கொடுநீர்சங்கில்கொண்டிட்டு எழில்மறையோர் வந்துநின்றார்
தருக்கேல்நம்பி! சந்திநின்று தாய்சொல்லுக்கொள்ளாய் சிலநாள்
திருக்காப்புநான் உன்னைச்சாத்தத் தேசுடைவெள்ளறை நின்றாய்!
உருக்காட்டுமந்திவிளக்கு இன்றுஒளிகொள்ளஏற்றுகேன்வாராய்.

10. போதமர்செல்வக்கொழுந்து புணர்திருவெள்ளறை யானை
மாதர்க்குயர்ந்தவசோதை மகன்தன்னைக்காப்பிட்ட மாற்றம்
வேதப்பயன்கொள்ளவல்ல விட்டுசித்தன்சொன்னமாலை
பாதப்பயன்கொள்ளவல்ல பத்தருள்ளார்வினைபோமே.

அடிவரவு:- இந்திரன் கன்று செப்பு கண்ணில் பல்லாயிரவர் கஞ்சன் கள்ளம் இன்பம் இருக்கு போதமர் வெண்ணெய் விழுங்கி.

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

சென்னியோங்கு

1. சென்னியோங்குதண் திருவேங்கடமுடையாய்! உலகு-
தன்னைவாழநின்றநம்பீ! தாமோதரா! சதிரா!
என்னையுமென்னுடைமையையும் உன்சக்கரப்பொறியொற்றிக் கொண்டு
நின்னருளேபுரிந்திருந்தேன் இனியென்திருக்குறிப்பே.

2. பறவையேறுபரம்புருடா! நீயென்னைக்கைக்கொண்டபின்
பிறவியென்னும்கடலும்வற்றிப் பெரும்பதமாகின்றதால்
இறவுசெய்யும்பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால்
அறிவையென்னுமமுதவாறு தலைப்பற்றபிவாய்க் கொண்டதே.

3. எம்மனாவென்குலதெய்வமே! என்னுடைய நாயகனே!
நின்னுளேனாய்ப்பெற்றநன்மை இவ்வுலகினிலார்பெறுவார்
நம்மன்போலேவீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ளபாவமெல்லாம்
சும்மெனாதேகைவிட்டோடித் தூறுகள்பாய்ந்தனவே. 

4. கடல்கடைந்தமுதம்கொண்டு கலசத்தைநிறைத்தாற்போல்
உடலுருகிவாய்திறந்து மடுத்துன்னைநிறைத்துக் கொண்டேன்
கொடுமைசெய்யும்கூற்றமும் என்கோலாடிகுறுகப்பெறா
தடவரைத்தோள் சக்கரபாணீ! சார்ங்கவிற்சேவகனே! 

5. பொன்னைக்கொண்டுரைகல்மீதே நிறமெழவுரைத்தாற் போல்
உன்னைக்கொண்டென்னுள்வைத்தேன் என்னையுமுன்னிலிட்டேன்
என்னப்பாவென்னிருடீகேசா! என்னுயிர்க்காவலனே.

6. உன்னுடையவிக்கிரமம் ஒன்றொழியாமலெல்லாம்
என்னுடையநெஞ்சகம்பால் சுவர்வழியெழுதிக் கொண்டேன்
மன்னடங்கமழுவலங்கைக்கொண்ட இராமநம்பீ!
என்னிடைவந்தெம்பெருமான்! இனியெங்குப் போகின்றதே!

7. பருப்பதத்துக்கயல்பொறித்த பாண்டியர்குலபதிபோல்
திருப்பொலிந்தசேவடி என்சென்னியின்மேல்பொறித்தாய்
மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய்! என்றென்றுன் வாசகமே
உருப்பொலிந்தநாவினேனை உனக்குரித்தாக்கினையே.

8. அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து, என்-
மனந்தனுள்ளளேவந்துவைகி வாழச்செய்தாயெம்பிரான்!
நினைந்தெனுள்ளேநின்றுநெக்குக் கண்களசும்பொழுக
நினைந்திருந்தேசிரமந்தீர்த்தேன் நேமிநெடியவனே! 

9. பனிக்கடலில்பள்ளிகோளைப் பழகிவிட்டு, ஓடிவந்தேன்-
மனக்கடலில் வாழவல்ல மாயமணாளநம்பீ!
தனிக்கடலேதனிச்சுடரே தனியுலகேயென்றென்று
உனக்கிடமாயிருக்க என்னையுனக்குரித்தாக்கினையே,

10. தடவரை வாய்மிளிர்ந்துமின்னும் தவளநெடுங்கோடி போல்
சுடரொளியாய்நெஞ்சினுள்ளே தோன்றுமென்சோதிநம்பீ!
வடதடமும்வைகுந்தமும் மதிள்துவராபதியும்
இடவகைகளிகழ்ந்திட்டு என்பாலிடவகை கொண்டனையே.

11. வேயர்தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன்மனத்தே
கோயில்கொண்ட கோவலனைக் கொழுங்குளிர் முகில்வண்ணனை
ஆயரேற்றைமரர்கோவை அந்தணர்தமமுதத்தினைச்
சாயைபோலப்பாடவல்லார் தாமுமணுக்கர்களே.

அடிவரவு:- சென்னி பறவை எம்மனா கடல் பொன் உன் பருப்பதம் அனந்தன் பனி தடவரை வேயர் மார்கழி.

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

அமலனாதிபிரான்

திருப்பாணாழ்வார் அருளிச்செய்தது

தனியன்கள்

பெரியநம்பிகள் அருளிச் செய்தது

ஆபாதசூடமநுபூய ஹரிம் சயாநம்
மத்யே கவேரதுஹிதுர் முதிதாந்தராத்மா!
அத்ரஷ்டருதாம் நயநயோர் விஷயாந்த்ராணாம்
யோ நிச்சிகாய மநவை முநிவாஹநம் தம்!!

அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்

நம்பிகள் அருளிச் செய்தது

காட்டவேகண்டபாதகமலநல்லாடையுந்தி
தேட்டருமுதரபந்தம் திருமார்வு கண்டம்செவ்வாய்
வாட்டமில்கண்கள்மேனி முனியேறித்தனிபுகுந்து
பாட்டினால்கண்டுவாழும் பாணர்தாள்பரவினோமே.

1. அமலனாதிபிரான் அடியார்க்கென்னையாட்படுத்த-
விமலன், விண்ணவர்கோன் விரையார்பொழில் வேங்கடவன்
நிமலன்நின்மலன் நீதிவானவன் நீள்மதிளரங்கத்தம்மான், திருக்-
கமலபாதம்வந்து என்கண்ணிலுள்ளனவொக்கின்றவே.!

2. உவந்தவுள்ளத்தனாய் உலகமளந்தண்டமுற
நிவந்தநீள்முடியன் அன்றுநேர்ந்தநிசாசரரைக்
கவர்ந்தவெங்கணைக்காகுத்தன் கடியார்பொழிலரங்கத் தம்மான், அரைச்-
சிவந்தவாடையின்மேல் சென்றதாமெனசிந்தனையே.

3. மந்திபாய் வடவேங்கடமாமலை, வானவர்கள்-
சந்திசெய்யநின்றான் அரங்கத்தரவினணையான்
அந்திபோல்நிறத்தாடையும் அதன்மேலயனைப் படைத்ததோரெழில்
உந்திமேலதன்றோ அடியேனுள்ளத்தின்னுயிரே.

4. சதுரமாமதிள்சூழ் இலங்கைக்கிறைவன்தலைபத்து-
உதிரவோட்டி,ஓர்வெங்கணையுய்த்தவன் ஓதவண்ணன்
மதுரமாவண்டுபாட மாமயிலாடரங்கத்தம்மான், திருவயிற்-
றுதரபந்தம் என்ணுள்ளத்துள்நின்றுலாகின்றதே.

5. பாரமாய பழவினைபற்றறுத்து, என்னைத்தன்-
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றியென்னுள்புகுந்தான்
கோரமாதவம்செய்தனன்கொலறியேன் அரங்கத்தம்மான், திரு-
வாரமார்பதன்றோ அடியேனையாட்கொண்டதே.

6. துண்டவெண்பிறையன் துயர்தீர்த்தவன், அஞ்சிறைய-
வண்டுவாழ்பொழில்சூழ் அரங்கநகர்மேயவப்பன்
அண்டரண்டபகிரண்டத்து ஒருமாநிலமெழுமால்வரை, முற்று-
முண்டகண்டம்கண்டீர் அடியேனையுய்யக்கொண்டதே.

7. கையினார்சுரிசங்கனலாழியர் நீள்வரைபோல்-
மெய்யனார், துளபவிரையார் கமழ்நீள்முடியெம்-
ஐயனார், அணியரங்கனார் அரவினணைமிசைமேய மாயனார்
செய்யவாய்ஐயோ! என்னைச்சிந்தைகவர்ந்ததுவே.

8. பரியனாகிவந்த அவுணனுடல்கீண்ட, அமரர்க்-
கரியவாதிப்பிரான் அரங்கத்தமலன்முகத்துக்
கரியவாகிப்புடைபரந்து மிளிர்ந்துசெவ்வரியோடி, நீண்டவப்-
பெரியவாயகண்கள் என்னைப்பேதைமைசெய்தவவே.

9. ஆலமாமரத்தினிலைமேல் ஒருபாலகனாய்
ஞாலமேழுமுண்டான் அரங்கத்தரவினணையான்
கோலமாமணியாரமும் முத்துத்தாமமும் முடிவில்லதோரெழில்
 நீலமேனிஐயோ! நிறைகொண்டதென்நெஞ்சினையே.

10. கொண்டல்வண்ணனைக் கோவலனாய்வெண்ணே-
யுண்டவாயன், என்னுள்ளம்கவர்ந்தானை
அண்டர்கோனணியரங்கன் என்னமுதினைக்
கண்டகண்கள் மற்றொன்றினைக்காணவே.

அடிவரவு:- அமலன் உவந்த மந்தி சதுரம் பாரம் துண்டம் கை பரி ஆலம் கொண்டல் கண்ணி.

திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்.

கண்ணிநுண் சிறுத்தாம்பு

மதுரகவியாழ்வார் அருளிச் செய்தது

தனியன்கள்

அவிதிதவிஷயாந்தர: சடாரே: உபநிஷதாமுபகாநமாத்ர போக:!
அபி ச குணவசாத் ததேகசேஷீ மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து!!

இருவிகற்ப நேரிசை வெண்பா

வேறொன்றும்நானறியேன் வேதம்தமிழ்செய்த
மாறன்சடகோபன் வண்குருகூர் - ஏறெங்கள்
வாழ்வாமென்றேத்தும் மதுரகவியார் எம்மை
ஆள்வாரவரே யரண்.

1. கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்-
பண்ணியபெருமாயன், என்னப்பனில்
நண்ணித்தென்குருகூர் நம்பியென்றக்கால்
அண்ணிக்குமமுதூறும் என்நாவுக்கே.

2. நாவினால்நவிற்றி இன்பமெய்தினேன்
மேவினேன் அவன்பொன்னடிமெய்ம்மையே
தேவுமற்றறியேன் குருகூர்நம்பி
பாவினின்னிசை பாடித்திரிவனே.

3. திரிதந்தாகிலும் தேவபிரானுடைக்
கரியகோலத் திருவுருக்காண்பன்நான்
பெரியவண்குருகூர் நகர்நம்பிக்கா-
ளுரியனாய், அடியேன்பெற்றநன்மையே.!

4. நன்மையால்மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவராதலில்
அன்னையாயத்தனாய் என்னையாண்டிடும்-
தன்னையான், சடகோபனென்நம்பியே.

5. நம்பினேன் பிறர்நன்பொருள்தன்னையும்
நம்பினேன் மடவாரையுமுன்னெலாம்
செம்பொன்மாடத் திருக்குருகூர்நம்பிக்கு-
அன்பனாய், அடியேன் சதிர்த்தேனின்றே.

6. இன்றுதொட்டும் எழுமையுமெம்பிரான்
நின்றுதன்புகழ் ஏத்தவருளினான்
குன்றுமாடத் திருக்குருகூர்நம்பி
என்றுமென்னை இகழ்விலன்காண்மினே.

7. கண்டுகொண்டென்னைக் காரிமாறப்பிரான்
பண்டைவல்வினை பாற்றியருளினான்
எண்டிசையம் அறியவியம்புகேன்
ஒண்டமிழ்ச் சடகோபனருளையே. 

8. அருள்கொண்டாடும் அடியவரின்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரமின்தமிழ்பாடினான்
அருள்கண்டீர் இவ்வுலகினில்மிக்கதே.

9. மிக்கவேதியர் வேதத்தினுட்பொருள்
நிற்கப்பாடி என்நெஞ்சுள்நிறுத்தினான்
தக்கச்சீர்ச் சடகோபனென்நம்பிக்கு, ஆட்-
புக்ககாதல் அடிமைப்பயனன்றே. 

10. பயனன்றாகிலும் பாங்கலராகிலும்
செயல்நன்றாகத்திருத்திப் பணிகொள்வான்
குயில்நின்றார்பொழில்சூழ் குருகூர்நம்பி!
முயல்கின்றேன் உன்தன்மொய்கழற்கன்பையே.

11. அன்பன்தன்னை அடைந்தவர்கட்கெல்லா-
மன்பன், தென்குருகூர் நகர்நம்பிக்கு
அன்பனாய் மதுரகவிசொன்னசொல்-
நம்புவார்பதி, வைகுந்தங்காண்மினே.

(கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்-
பண்ணியபெருமாயன் என்னப்பனில்
நண்ணித்தென்குருகூர் நம்பியென்றக்கால்
அண்ணிக்குமமுதூறும் என்நாவுக்கே.)

மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்.

கோயில் திருவாய்மொழி

நம்மாழ்வார் அருளிச் செய்தது

தனியன்கள்

பக்தாம்ருதம் விச்வஜநாநுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்மயம்!
ஸஹஸ்ரசாகோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிடவேதஸாகரம்!!

இருவிகற்ப நேரிசை வெண்பா

திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்
மருவினிய வண்பொருந லென்றும் - அருமறைக
ளந்தாதி செய்தா னடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே! தெளிந்து.

மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன் - தனத்தாலும்
ஏதும் குறைவிலே னெந்தை சடகோபன்
பாதங்கள் யாமுடைய பற்று.

ஏய்ந்த பெருங்கீர்த்தி யிராமா நுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன் - ஆய்ந்தபெருஞ்
சீரார் சடகோபன் செந்தமிழ்வேதம்தரிக்கும்
பேராத வுள்ளம் பெற.

வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைக ளாயிரமும் - ஈன்ற
முதல்தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத்தா யிராமா நுசன்.

மிக்க விறைநிலையும் மெய்யா முயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையு மோதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத் தியல்.

திருவாய்மொழி, முதற்பத்து, முதல் திருவாய்மொழி

1. உயர்வறவுயர்நலம் உடையவன்யவனவன்
மயர்வறமதிநலம் அருளினன்யவனவன்
அயர்வறுமமரர்கள் அதிபதி யவனவன்
துயரறுசுடரடி தொழுதெழென்மனனே!

2. மனனகமலமற மலர்மிசையெழுதரும்
மனனுணர்வளவிலன் பொறியுணர்வவையிலன்
இனனுணர்முழுநலம் எதிர்நிகழ்கழிவினும்
இனனிலனெனனுயிர் மிகுநரையிலனே.

3. இலனதுவுடையனிது எனநினைவரியவன்
நிலனிடைவிசும்பிடை <உருவினனருவினன்
புலனொடுபுலனலன் ஒழிவிலன்பரந்த, அந்-
நலனுடையொருவனை நணுகினம்நாமே.

4. நாமவனிவனுவன் அவளிவளுவளெவள்
தாமவரிவருவர் அதுவிதுவுதுவெது
வீமவையிவையுவை அவைநலம்தீங்கவை
ஆமவையாயவை ஆய்நின்றவவரே.

5. அவரவர் தமதமது அறிவறிவகைவகை
அவரவரிறையவர் எனவடியடைவர்கள்
அவரவரிறையவர் குறைவிலரிறையவர்
அவரவர்விதிவழி அடையநின்றனரே.

6. நின்றனரிருந்தனர் கிடந்தனர்திரிந்தனர்
நின்றிலரிருந்திலர் கிடந்திலர்திரிந்திலர்
என்றுமொரியல்வினர் எனநினைவரியவர்
என்றுமொரியல்வொடு நின்றவெந்திடரே.

7. திடவிசும்பெரிவளி நீர்நிலமிவைமிசை
படர்பொருள்முழுவதுமாய் அவையவைதொறும்
உடல்மிசையுயிரெனக் கரந்தெங்கும்பரந்துளன்
சுடர்மிகுசுருதியுள் இவையுண்டசுரனே.

8. சுரரறிவருநிலை விண்முதல்முழுவதும்
வரன்முதலாயவை முழுதுண்டபரபரன்
புரமொருமூன்றெரித்து அமரர்க்குமறிவியந்து
அரனயனென உலகழித்தமைத்துளனே.

9. உளனெனிலுளன் அவனுருவமிவ்வுருவுகள்
உளனலனெனில் அவனருவமிவ்வருவுகள்
உளனெனவிலனென இவைகுணமுடைமையில்
உளனிருதகைமையொடு ஒழிவிலன்பரந்தே.

10. பரந்ததண்பரவையுள் நீர்தொறும்பரந்துளன்
பரந்தவண்டமிதென நிலவிசும்பொழிவறக்
கரந்தசிலிடந்தொறும் இடந்திகழ்பொருள்தொறும்
கரந்தெங்கும்பரந்துளன் இவையுண்டகரனே.

11. கரவிசும்பெரிவளி நீர்நிலமிவைமிசை
வரனவில்திறல்வலி அளிபொறையாய்நின்ற
பரனடிமேல் குருகூர்ச்சடகோபன்சொல்
நிரனிறையாயிரத்து இவைபத்தும்வீடே.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி, முதற்பத்து, 2-ஆம் திருவாய்மொழி

1. வீடுமின்முற்றவும் வீடுசெய்து, உம்முயிர் வீடுடையானிடை வீடுசெய்ம்மினே.
2. மின்னின் நிலையில என்னுடமிடத்து இறை உன்னுமின்நீரே.
3. நீர்நுமதென்றிவை வேர்முதல்மாய்த்து, இறை சேர்மின் உயிர்க்கு அதன் நேர்நிறையில்லே.
4. இல்லதுமுள்ளதும் அல்லதவனுரு எல்லையிலந்நலம் புல்குபற்றற்றே.
5. அற்றதுபற்றெனில் உற்றதுவீடுயிர் செற்றதுமன்னுறில் அற்றிறைபற்றே.
6. பற்றிலனீசனும் முற்றவும்நின்றனன் பற்றிலையாய் அவன் முற்றிலடங்கே.
7. அடங்கெழில்சம்பத்து அடங்கக்கண்டு, ஈசன் அடங்கெழிலஃதென்று அடங்குகவுள்ளே.
8. உள்ளமுரைசெயல் உள்ளவிம்மூன்றையும் உள்ளிக்கெடுத்து, இறை உள்ளிலொடுங்கே.
9. ஒடுங்கவவன்கண் ஒடுங்கலுமெல்லாம் விடும்பின்னுமாக்கை விடும்பொழுதெண்ணே.
10. எண்பெருக்கந்நலத்து ஒண்பொருளீறில வண்புகழ்நாரணன் திண்கழல்சேரே.
11. சேர்த்தடத்தென்குரு கூர்ச்சடகோபன்சொல் சீர்த்தொடையாயிரத்து ஓர்த்தவிர்ப்பதே.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி, 2-ஆம் பத்து, 10-ஆம் திருவாய்மொழி

1. கிளரொளியிளமை கெடுவதன்முன்னம்
வளரொளிமாயோன் மருவியகோயில்
வளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை
தளர்விலராகில் சார்வதுசதிரே.

2. சதிரிளமடவார் தாழ்ச்சியைமதியாது
அதிர்குரல்சங்கத்து அழகர்தம்கோயில்
மதிதவழ்குடுமி மாலிருஞ்சோலைப்
பதியதுவேத்தி எழுவதுபயனே.

3. பயனல்லசெய்து பயனில்லைநெஞ்சே!
புயல்மழைவண்ணர் புரிந்துறைகோயில்
மயல்மிகுபொழில்சூழ் மாலிருஞ்சோலை
அயல்மலையடைவது அதுகருமமே.

4. கருமவன்பாசம் கழித்துழன்றுய்யவே
பெருமலையெடுத்தான் பீடுறைகோயில்
வருமழைதவழும் மாலிருஞ்சோலை
திருமலையதுவே அடைவதுதிறமே.

5. திறமுடைவலத்தால் தீவினைபெருக்காது
அறமுயலாழிப் படையவன்கோயில்
மறுவில்வண்சுனைசூழ் மாலிருஞ்சோலைப்
புறமலைசாரப் போவதுகிறியே.

6. கிறியெனநினைமின் கீழ்மைசெய்யாதே
உறியமர்வெண்ணெய் <உண்டவன்கோயில்
மறியொடுபிணைசேர் மாலிருஞ்சோலை
நெறிபடவதுவே நினைவதுநலமே.

7. நலமெனநினைமின் நரகழுந்தாதே
நிலமுனமிடந்தான் நீடுறைகோயில்
மலமறுமதிசேர் மாலிருஞ்சோலை
வலமுறையெய்தி மருவுதல்வலமே.

8. வலம்செய்துவைகல் வலம்கழியாதே
வலம்செய்யும் ஆயமாயவன்கோயில்
வலம்செய்யும்வானோர் மாலிருஞ்சோலை
வலம்செய்து நாளும் மருவுதல்வழக்கே.

9. வழக்கெனநினைமின் வல்வினைமூழ்காது
அழக்கொடியட்டான் அமர்பெருங்கோயில்
மழக்களிற்றினம்சேர் மாலிருஞ்சோலை
தொழக்கருதுவதே துணிவதுசூதே.

10. சூதென்றுகளவும் சூதும்செய்யாதே
வேதமுன்விரித்தான் விரும்பியகோயில்
மாதுறுமயில்சேர் மாலிருஞ்சோலை
போதவிழ்மலையே புகுவதுபொருளே.

11. பொருளென்றிவ்வுலகம் படைத்தவன் புகழ்மேல்
மருளில்வண்குருகூர் வண்சடகோபன்
தெருள்கொள்ளச்சொன்ன ஓராயிரத்துளிப்பத்து
அருளுடையவன்தாள் அணைவிக்கும் முடித்தே.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி, 3-ஆம் பத்து, 3-ஆம் திருவாய்மொழி

1. ஒழிவில்காலமெல்லாம் உடனாய்மன்னி
வழுவிலாவடிமை செய்யவேண்டும்நாம்
தெழிகுரலருவித் திருவேங்கடத்து
எழில்கொள்சோதி எந்தை தந்தை தந்தைக்கே.

2. எந்தை தந்தை தந்தை தந்தைதந்தைக்கும்-
முந்தை, வானவர்வானவர்கோனொடும்
சிந்துபூமகிழும் திருவேங்கடத்து
அந்தமிழ்புக்ழ்க் காரெழிலண்ணலே.

3. அண்ணல்மாயன் அணிகொள்செந்தாமரைக்-
கண்ணன், செங்கனிவாய்க் கருமாணிக்கம்
தெண்ணிறைச்சுனைநீர்த் திருவேங்கடத்து
எண்ணில்தொல்புகழ் வானவரீசனே.

4. ஈசன்வானவர்க்கு என்பனென்றால், அது-
தேசமோ திருவேங்கடத்தானுக்?
நீசனேன் நிறைவொன்றுமிலேன், என்கண்-
பாசம்வைத்த பரஞ்சுடர்ச்சோதிக்கே.

5. சோதியாகி எல்லாவுலகும்தொழும்
ஆதிமூர்த்தியென்றால் அளவாகுமோ?
வேதியர் முழுவேதத்தமுதத்தைத்
தீதில்சீர்த் திருவேங்கடத்தானையே.

6. வேங்கடங்கள் மெய்ம்மேல்வினைமுற்றவும்
தாங்கள்தங்கட்கு நல்லனவேசெய்வார்
வேங்கடத்துறைவார்க்கு நமவென்ன-
லாம்கடமையது சுமந்தார்கட்கே.

7. சுமந்துமாமலர் நீர்சுடர்தூபம் கொண்டு
அமர்ந்துவானவர் வானவர்கோனொடும்
நமன்றெழும் திருவேங்கடம்நங்கட்குச்
சமன்கொள்வீடுதரும் தடங்குன்றமே.

8. குன்றுமேந்திக் குளிர்மழைகாத்தவன்
அன்றுஞாலம் அளந்தபிரான், பரன்-
சென்றுசேர் திருவேங்கடமாமலை
ஒன்றுமேதொழ நம்வினையோயுமே.

9. ஒயமூப்புப் பிறப்பிறப்புப்பிணி
வீயுமாறுசெய்வான் திருவேங்கடத்-
தாயன், நாள்மலராம் அடித்தாமரை
வாயுள்ளும்மனத்துள்ளும் வைப்பார்கட்கே.

10. வைத்தநாள்வரை எல்லைகுறுகிச் சென்று
எய்த்திளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்தபாம்பணையான் திருவேங்கடம்
மொய்த்தசோலை மொய்பூந்தடம்தாழ்வரே.

11. தாள்பரப்பி மண்தாவியஈசனை
நீள்பொழில் குருகூர்ச்சடகோபன்சொல்
கேழிலாயிரத்து இப்பத்தும்வல்லவர்
வாழ்வர்வாழ்வெய்தி ஞாலம்புகழவே.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி, 4-ஆம் பத்து, 10-ஆம் திருவாய்மொழி

1. ஒன்றும் தேவுமுலகுமுயிரும் மற்றும் யாதுமில்லா-
வன்று, நான்முகன் தன்னொடு தேவருலகோடுயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாட நீடு திருக்குருகூரதனுள்
நின்றவாதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே.

2. நாடிநீர்வணங்கும் தெய்வமும் உம்மையும் முன்படைத்தான்
வீடில் சீர்ப்புகழாதிப்பிரான் அவன்மேவியுறை கோயில்
மாடமாளிகை சூழ்ந்தழகாய திருக்குருகூரதனைப்
பாடியாடிப்பரவிச் சென்மின்கள் பல்லுலகீர்! பரந்தே.

3. பரந்த தெய்வமும் பல்லுலகும் படைத்து அன்றுடனே விழுங்கிக்
கரந்துமிழ்ந்து கடந்திடந்தது கண்டும் தெளியகில்லீர்
சிரங்களாலமரர்வணங்கும் திருக்குருகூரதனுள்
பரன்திறமன்றிப்பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.

4. பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்-
நாயகனவனே, கபாலநன்மோக்கத்துக் கண்டுகொள்மின்
தேசமாமதிள்சூழ்ந்தழகாய திருக்குருகூரதனுள்
ஈசன்பாலோரவம் பறைதல் என்னாவதிலிங்கியர்க்கே.

5. இலிங்கத்திட்டபுராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்துவாதுசெய்வீர்களும் மற்றுநுந்தெய்வமுமாகி நின்றான்
மலிந்துசெந்நெல்கவரிவீசும் திருக்குருகூரதனுள்
பொலிந்துநின்றபிரான்கண்டீர் ஒன்றும்பொய்யில்லை போற்றுமினே.

6. போற்றி மற்றோர் தெய்வம் பேணப்புறத்திட்டு, உம்மைஇன்னே-
தேற்றிவைத்தது எல்லீரும்வீடு பெற்றாலுலகில்லை யென்றே
சேற்றில் செந்நெல்கமலமோங்கு திருக்குருகூரதனுள்
ஆற்றவல்லவல் மாயன்கண்டீர் அதறிந்தறிந்தோமினே.

7. ஓடியோடிப் பல பிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்-
பாடியாடிப் பணிந்து, பல்படிகால் வழியேறிக் கண்டீர்
கூடிவானவரேத்த நின்ற திருக்குருகூரதனுள்
ஆடுபுட்கொடியாதிமூர்த்திக்கு அடிமைபுகுவதுவே.

8. புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயனவனை
நக்கபிரானுமன்றுய்யக்கொண்டது நாராயணனருளே
கொக்கலர்தடந்தாழைவேலித் திருக்குருகூரதனுள்
மிக்கவாதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே.

9. விளம்புமாறு சமயமும் அவையாகியும் மற்றும் தன்பால்
அளந்துகாண்டற்கரியனாகிய ஆதிப்பிரானமரும்
வளங்கொள்தண்பனை சூழ்ந்தழகாய திருக்குருகூரதனை
உளங்கொள்ஞானத் துவைம்மின் உம்மையுய்யக்கொண்டு போகுறிலே.

10. உறுவதாவதெத்தேவும் எவ்வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவில் மூர்த்தியோடடொத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல்கரும்பொடோங்கு திருக்குருகூரதனுள்
குறியமாணுருவாகிய நீள்குடக்கூத்தனுக்காட் செய்வதே.

11. ஆட்செய்தாழிப்பிரானைச் சேர்ந்தவன் வண்குருகூடர்நகரான்
நாட்கமழ் மகிழ்மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துளிப்பத்தும் வல்லார்
மீட்சியின்றி வைகுந்தமாநகர் மற்றதுகையதுவே.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி, 5-ஆம் பத்து, 8-ஆம் திருவாய்மொழி

1. ஆராவமுதே! அடியேனுடலம் நின்பாலன் பாயே
நீராயலைந்து கரையவுருக்குகின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல்கவரிவீசும் செழுநீர்த்திருக்குடந்தை
ஏரார்கோலம் திகழக்கிடந்தாய்! கண்டேனெம்மானே!

2. எம்மானே! என் வெள்ளைமூர்த்தி! என்னையாள்வானே!
எம்மாவுருவும் வேண்டுமாற்றால் ஆவாயெழிலேறே!
செம்மாகமலம் செழுநீர்மிசைக்கண் மலரும் திருக்குடந்தை
அம்மாமலர்க்கண் வளர்கின்றானே! என் நாய்செய்கேனே!

3. என்நான்செய்கேன் யாரேகளைகண்? என்னையென் செய்கின்றாய்?
உன்னாலல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார்மதிள் சூழ்குடந்தைக் கிடந்தாய்! அடியேனருவாணாள்
சென்னாளெந்நாளந்நாள் உனதாள்பிடித்தே செலக்காணே.

4. செலக்காண்கிற்பார் காணுமளவும் செல்லும்கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லாவுலகுமுடையவொரு மூர்த்தி!
நலத்தால்மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக்காண்பான் நான்-
அலப்பாய், ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.

5. அழுவன் தொழுவனாடிக் காண்பன் பாடியலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழுவொண்பழனக்குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!
தொழுவனேனையுனதாள் சேரும்வகையேசூழ் கண்டாய்.

6. சூழ்கண்டாயென் தொல்லை வினையையறுத்து உன்னடிசேரும்-
ஊழ்கண்டிருந்தே, தூராக்குழிதூர்த்து எனைநாளகன்றிருப்பன்?
வாழ்தொல்புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர்கோமானே!
யாழினிசையேயமுதே! அறிவின் பயனேயரியேறே.

7. அரியேறே! என்னம்பொற்சுடரே! செங்கண்கருமுகிலே!
எரியேபவளக்குன்றே! நால்தோளெந்தாயுனதருளே
பிரியாவடிமையென்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேனினியுன் சரணம் தந்து என் சன்மம்களையாயே.

8. களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண்மற்றிலேன்
வளைவாய்நேமிப்படையாய்! குடந்தைக்கிடந்தமாமாயா!
தளராவுடலமெனதாவி சரிந்துபோம்போது
இளையாதுனதாளொருங்கப்பிடித்துப் போதவிசைநீயே.

9. இசைவித்தென்னை உன் தாளிணைக் கீழ்இருத்துமம்மானே!
அசைவிலமரர் தலைவர்தலைவா! ஆதிப்பெருமூர்த்தி!
திசைவில்வீசும் செழுமாமணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவிலுலகம் பரவிக்கிடந்தாய்! காணவாராயே.

10. வாராவருவாய் வருமென்மாயா! மாயாமூர்த்தியாய்!
ஆராவமுதாயடியேனாவி அகமேதித்திப்பாய்!
தீராவினைகள் தீரவென்னையாண்டாய்! திருக்குடந்தை
ஊரா! உனக்காட்பட்டும் அடியேனின்னுமுழல்வேனோ?

11. ஊழலையென்பின்பேய்ச்சிமுலையூடு அவளையுயிருண்டான்
கழல்களவையே சரணாக் கொண்ட குருகூர்ச்சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துளிப் பத்தும்
மழலைதீரவல்லார் காமர்மானேய் நோக்கியர்க்கே.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி, 6-ஆம் பத்து, 10-ஆம் திருவாய்மொழி

1. உலகமுண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தியம்மானே!
நிலவும்சுடர்சூழொளிமூர்த்தி! நெடியாயடியேனாருயிரே!
திலதமுலகுக்காய்நின்ற திருவேங்கடத்தெம்பெருமானே!
குலதொல்லடியேனுளபாதம் கூடுமாறு கூறாயே.

2. கூறாய் நீறாய் நிலனாகிக் கொடுவல்லசுரர் குலமெல்லாம்
சீறாவெறியும் திருநேமிவலவா! தெய்வக்கோமானே!
சேறார்சுனைத் தாமரை செந்தீமலரும் திருவேங்கடத்தானே!
ஆறாவன்பிலடியேன் உன்னடிசேர்வண்ணமருளாயே.

3. வண்ணமருள்கொளணி மேகவண்ணா! மாயவம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்குமமுதே! இமையோரதிபதியே!
தெண்ணலருவிமணிபொன்முத்தலைக்கும் திருவேங்கடத்தானே!
அண்ணலேயுன்னடிசேர அடியேற்காவாவென்னாயே.

4. ஆவாவென்னாதுலகத்தையலைக்கும் அசுரர்வாணாள்மேல்
தீவாய்வாளிமழை பொழிந்த சிலையா! திருமாமகள்கேள்வா-
தேவா, சுரர்கள்முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார்கழள்களருவினையேன் பொருந்துமாறுபுணராயே.

5. புணராநின்றமரமேழ் அன்றெய்தவொருவில்வலவாவோ!
புணரேய்நின்றமரமிரண்டின் நடுவேபோன முதல்வாவோ!
திணரார்மேகமெனக் களிறுசேரும் திருவேங்கடத்தானே!
திணரார்சார்ங்கத்துனபாதம் சேர்வதடியேனெந்நாளே?

6. எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின்றிமையோர்களேத்தி இறைஞ்சியினமினமாய்
மெய்ந்நாமனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே!
மெய்ந்நானெய்தியெந்நாள் உன்னடிக்கணடியேன் மேவுவதே.

7. அடியேன் மேவியமர்கின்றவமுதே இமையோரதிபதியே!
கொடியாவடுபுள்ளுடையானே! கோலக்கனிவாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர்மருந்தே! திருவேங்கடத்தெம்பெருமானே!
நொடியார் பொழுதுமுனபாதம் காணநோலாதாற்றேனே.

8. நோலாதாற்றேனுன பாதம் காணவென்று நுண்ணுணர்வின்
நீலார்கண்டத்தம்மானும் நிறைநான்முகனுமிந்திரனும்
சேலேய்கண்ணார் பலர் சூழவிரும்பும் திருவேங்கடத்தானே!
மாலாய் மயக்கியடியேன்பால் வந்தாய் போலேவாராயே.

9. வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந்தாமரைக்கண் செங்கனிவாய் நால்தோளமுதே! எனதுயிரே!
சிந்தாமணிகள் பகரல்லைப்பகல்செய் திருவேங்கடத்தானே!
அந்தோவடியேனுனபாதம் அகலகில்லேனிறையுமே.

10. அகலகில்லேனிறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பா!
நிகரில்புகழாயுலக மூன்றுடையாய்! என்னையாள்வானே!
நிகரிலமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
புகலொன்றில்லாவடியேன் உன்னடிக்கீழமர்ந்து புகுந்தேனே.

11. அடிக்கீழமர்ந்துபுகுந்து அடியீர்வாழ்மினென்றென்றருள் கொடுக்கும்
படிக்கேழில்லாப் பெருமானைப் பழனக்குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்னவாயிரத்துத் திருவேங்கடத்துக்கிவை பத்தும்
பிடித்தார்பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி, 7-ஆம் பத்து, 2-ஆம் திருவாய்மொழி

1. கங்கலும் பகலும் கண்டுயிலறியாள்
கண்ண நீர் கைகளாலிறைக்கும்
சங்கு சக்கரங்களென்று கைகூப்பும்
தாமரைக் கண்ணென்றே தளரும்
எங்ஙனே தரிக்கேனுன்னை விட்டென்னும்
இருநிலம் கை துழாவிருக்கும்
செங்கயல்பாய்நீர்த்திருவரங்கத்தாய்!
இவள் திறத்தென் செய்கின்றாயே?

2. என் செய்கின்றாயென் தாமரைக் கண்ணா-
வென்னும் கண்ணீர் மல்கவிருக்கும்
என்செய்கேனெறிநீர்த் திருவரங்கத்தா-
யென்னும் வெவ்வுயிர்த்துயிர்த்துருகும்
முன்செய்த வினையே முகப்படாயென்னும்
முகில்வண்ணாதகுவதோவென்னும்
முன் செய்திவ்வுலகமுண்டுமிழ்ந்தளந்தாய்!
என்கொலோ முடிகின்றதிவட்கே?

3. வட்கிலளிறையும் மணிவண்ணாவென்னும்
வானமே நோக்கும் மையாக்கும்
உட்குடையசுரருயிரெல்லாமுண்ட
ஒருவனேயென்னுமுள்ளுருகும்
கட்கலீயுன்னைக் காணுமாறருளாய்
காகுத்தாகண்ணனேயென்னும்
திட்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்!
இவன் திறத்தென் செய்திட்டாயே?

4. இட்டகாலிட்ட கையளாயிருக்கும்
எழுந்துலாய் மயங்கும் கைகூப்பும்
கட்டமேகாதலென்று மூர்ச்சிக்கும்
கடல்வண்ணா! கடியைகாணென்னும்
வட்டவாய்நேமி வலங்கையாவென்னும்
வந்திடாயென்றென்றே மயங்கும்
சிட்டனே! செழுநீர்த்திருவரங்கத்தாய்!
இவள் திறத்தென் சிந்தித் தாயே?

5. சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்
திருவரங்கத்துள்ளாயென்னும்-
வந்திக்கும், ஆங்கே மழைக்கண்ணீர் மல்க
வந்திடாயென்றென்றே மயங்கும்
அந்திப்போதவுணனுடலிடந்தானே!
அலைகடல் கடைந்த வாரமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
தையலைமையல் செய்தானே.

6. மையல்செய்தென்னை மனம் கவர்ந்தானே-
யென்னும், மாமாயனேயென்னும்
செய்யவாய் மணியேயென்னும் தண்புனல்சூழ்
திருவரங்கத்துள்ளாயென்னும்
வெய்யவாள் தண்டு சங்குசக்கரம் வில்லேந்தும்
விண்ணோர் முதலென்னும்
பைகொள்பாம்பணையாயிவள் திறத்தருளாய்
பாவியேன் செயற்பாலதுவே.

7. பாலதுன்பங்களின் பங்கள் படைத்தாய்!
பற்றிலார் பற்ற நின்றானே!
காலசக்கரத்தாய்! கடலிடங்கொண்ட
கடல்வண்ணா! கண்ணனேயென்னும்
சேல்கொள்தண்புனல்சூழ்திருவரங்கத்தாயென்னும்
என் தீர்த்தனேயென்னும்
கோலமாமழைக்கண் பனிமல்கவிருக்கும்
என்னுடைக்கோமளக்கொழுந்தே.

8. கொழுந்துவானவர்கட்கென்னும்
குன்றேந்திக்கோ நிரைகாத்தவனென்னும்
அழும்தொழுமாவியனலவெவ்வுயிர்க்கும்
அஞ்சனவண்ணனேயென்னும்
எழுந்துமேல்நோக்கியிமைப்பிலளிருக்கும்
எங்ஙனே நோக்குகேனென்னுமம்
செழுந்தடம்புனல்சூழ் திருவரங்கத்தாய்!
என்செய்கேனென் திருமகட்கே?

9. என் திருமகள் சேர்மார்வனேயென்னும்
என்னுடையாவியேயென்னும்
நின்திருவெயிற்றாலிடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனேயென்னும்
அன்றுருவேழும்தழுவிநீகொண்ட
ஆய்மகளன்பனேயென்னும்
தென்திருவரங்கம் கோயில் கொண்டானே!
தெளிகிலேன் முடிவிவள் தனக்கே.

10. முடிவிவள் தனக்கொன்றறிகிலேனென்னும்
மூவுலகாளியேயென்னும்
கடிகமழ் கொன்றைச்சடையனேயென்னும்
நான்முகக் கடவுளேயென்னும்
வடிவுடைவானோர் தலைவனேயென்னும்
வண்திருவரங்கனேயென்னும்
அடியடையாதாள் போலிவளணுகி
அடைந்தனள் முகில்வண்ண னடியே.

11. முகில்வண்ணனடியையடைந்தருள்சூடி-
யுய்ந்தவன், மொய்புனல்பொருநல்
துகில்வண்ணத்தூநீர்ச்சேர்ப்பன்வண்பொழில்சூழ்
வண்குருகூர்ச்சடகோபன்
முகில்வண்ணனடி மேல்சொன்ன சொல்மாலை
ஆயிரத்திப்பத்தும் வல்லார்
முகில்வண்ணவானத்திமையவர்சூழ-
விருப்பர்பேரின்ப வெள்ளத்தே.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி, 8-ஆம் பத்து, 10-ஆம் திருவாய்மொழி

1. நெடுமாற்கடிமைசெய்வேன் போன் அவனைக்கருத வஞ்சித்துத்
தடுமாற்றற்றதீக்கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர்நினைந்தால்
கொடுமாவினையேனவனடியாரடியே கூடுமிதுவல்லால்
விடுமாறென்பதென்னந்தோ! வியன்மூவுலகுபெறினுமே!

2. வியன்மூவுலகு பெறினும் போய்த் தானேதானேயானாலும்
புயல்மேகம் போல் திருமேனியம்மான் புனைபூங்கழடிக்கீழ்
சயமேயடிமைதலைநின்றார் திருத்தாள் வணங்கி-இம்மையே
பயனேயின் பம்யான் பெற்றது உறுமோபாவியேனுக்கே.

3. உறுமோபாவியேனுக்கே இவ்வுலகமூன்றுடன் நிறையச்
சிறுமாமேனி நிமிர்த்த என் செந்தாமரைக்கண் திருக்குறளன்
நறுமாவிரைநாண்மலரடிக்கீழ்ப் புகுதலன்றியவனடியார்
சிறுமாமனி சராயென்னையாண்டார் இங்கே திரியவே.

4. இங்கே திரிந்தேற்கிழுக்குற்றேன்? இருமாநிலம் முன்னுண்டுமிழ்ந்த
செங்கோலத்தபவளவாய்ச் செந்தாமரைக் கணென்னம்மான்
பொங்கேழ்புகழ்கள் வாய வாய்ப்புலன் கொள்வடி வென்மனத்தாய்
அங்கேய் மலர்கள் கைவாய் வழிபட்டோடவருளிலே.

5. வழிபட்டோட வருள்பெற்று மாயன் கோலமலரடிக்கீழ்
கழிபட்டோடும் சுடர்ச்சோதி வெள்ளத்து இன்புற்றிருந்தாலும்
இழிபட்டோடு முடலினிற்பிறந்து தன்சீர்யான்கற்று
மொழிபட்டோடும் கவியமுதம் நுகர்ச்சியுறுமோ முழுதுமே.

6. நுகர்ச்சியுறுமோ? மூவுலகின் வீடுபேறுதன்கேழில்
புகர்ச்செம்முகத்தகளிறட்ட பொன்னாழிக்கையென்னம்மான்
நிகர்ச்செம்பங்கியெரி விழிகள் நீண்ட வசுரருயிரெல்லாம்
தகர்த்துண்டுழலும் புட்பாகன் பெரியதனிமாப்புகழே.

7. தனிமாப்புகழேயெஞ்ஞான்றும் நிற்கும் படியாய்த்தான் தோன்றி
முனிமாப்பிரம முதல்வித்தாய் உலகமூன்றும் முளைப்பித்த
தனிமாத்தெய்வத்தளிரடிக்கீழ்ப் புகுதலன்றியவனடியார்
நனிமாக்கல்வியின்பமே நாளும்வாய்க்க நங்கட்கே.

8. நாளும் வாய்க்க நங்கட்கு நளிர்நீர்க்கடலைப் படைத்துத் தன்-
தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி
நீளும் படர்பூங்கற்பகக்காவும் நிறைபல் நாயிற்றின்
கோளுமுடையணி மலைபோல் கிடந்தான் தமர்கள் கூட்டமே.

9. தமர்கள் கூட்ட வல்வினையே நாசம் செய்யும் சதிர்மூர்த்தி
அமர்கொளாழிசங்குவாள் வில்தண்டாதி பல்படையன்
குமரன் கோலவைங்கணைவேள்தாதை கோதிலடியார்தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரேவாய்க்க தமியற்கே.

10. வாய்க்கதமியேற்கு ஊழிதோறூழியூழி, மாகாயாம்-
பூக்கொள்மேனி நான்கு தோள் பொன்னாழிக்கை யென்னம்மான்
நீக்கமில்லாவடியார்தம் அடியாரடியாரடியாரெம்-
கோக்கள், அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்லகோட்பாடே.

11. நல்லகோட்பாட்டுலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த
அல்லிக்கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச்சடகோபன்
சொல்லப்பட்டவாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,
நல்லபதத்தால் மனைவாழ்வர் கொண்ட பெண்டிர்மக்களே.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி, 9-ஆம் பத்து, 10-ஆம் திருவாய்மொழி

1. மாலைநண்ணித் தொழுதெழுமினோ வினைகெடக்
காலைமாலை கமலமலரிட்டுநீர்
வேலைமோதும் மதிள்சூழ் திருக்கண்ணபுரத்து
ஆலின்மேலாலமர்ந்தான் அடியிணைகளே.

2. கள்ளவிழும் மலரிட்டு நீரிறைஞ்சுமின்
நள்ளிசேரும் வயல்சூழ் கிடங்கின்புடை
வெள்ளியேய்ந்த மதிள்சூழ் திருக்கண்ணபுர-
முள்ளி, நாளும் தொழுதெழுமினோ தொண்டரே!

3. தொண்டர்! நுந்தம் துயர்போகநீரேகமாய்
விண்டுவாடா மலரிட்டு நீரிறைஞ்சுமின்
வண்டுபாடும் பொழில்சூழ் திருக்கண்ணபுரத்து-
அண்டவாணன், அமரர்பெருமானையே.

4. மானைநோக்கி மடப்பின்னை தன்கேள்வனைத்
தேனை வாடாமலரிட்டு நீரிறைஞ்சுமின்
வானையுந்து மதிள்சூழ் திருக்கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரணாகுமே.

5. சரணமாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரணமைந்த மதிள்சூழ் திருக்கண்ணபுரத்-
தரணியாளன், தனதன்பர்க்கன்பாகுமே.

6. அன்பனாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம்
செம்பொனாகத்து அவுணனுடல் கீண்டவன்
நன்பொனேய்ந்த மதிள்சூழ் திருக்கண்ணபுரத்-
தன்பன், நாளும்தன மெய்யர்க்கு மெய்யனே.

7. மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கெல்லாம்
பொய்யனாகும் புறமே தொழுவார்க்கெல்லாம்
செய்யில் வாளையுகளும் திருக்கண்ணபுரத்-
தையன், ஆகத்தணைப்பார்கட் கணியனே.

8. அணியனாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம்
பிணியும்சாரா பிறவிகெடுத்தாளும்
மணிபொனேய்ந்த மதிள்சூழ் திருக்கண்ணபுரம்-
பணிமின், நாளும் பரமேட்டி தன் பாதமே.

9. பாதம்நாளும் பணியத் தணியும்பிணி
ஏதம்சாரா எனக்கேலினியென்குறை?
வேதநாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்-
தாதியானை, அடைந்தார்க்கு அல்லலில்லையே.

10. இல்லையல்லல் எனக்கேலினியென்குறை
அல்லிமாதரமரும் திருமார்பினன்
கல்லிலேய்ந்தமதிள்சூழ் திருக்கண்ணபுரம்-
சொல்ல, நாளும்துயர்பாடுசாராவே.

11. பாடுசாராவினை பற்றறவேண்டுவீர்!
மாடநீடு குருகூர்ச்சடகோபன், சொல்
பாடலானதமிழ் ஆயிரத்துளிப்பத்தும்
பாடியாடிப், பணிமின் அவன்தாள்களே.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி, 10-ஆம் பத்து, 9-ஆம் திருவாய்மொழி

1. சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின
ஆழ்கடலலை திரை கையெடுத்தாடின
ஏழ்பொழிலும் வளமேந்திய வென்னப்பன்
வாழ்புகழ் நாரணன் தமரைக் கண்டுகந்தே.

2. நாரணன் தமரைக் கண்டுகந்து நல்நீர்முகில்
பூரணபொற்குடம் பூரித்ததுயர்விண்ணில்
நீரணிகடல்கள் நின்றார்த்தன, நெடுவரைத்-
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனருலகே.

3. தொழுதனருலகர்கள் தூபம் நல்மலர்மழை-
பொழிவனர், பூமியன்றளந்தவன் தமர்முன்னே
எழுமினென்றிருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழியிதுவைகுந்தற்கென்று வந்தெதிரே.

4. எதிரெதிரிமையவர் இருப்பிடம் வகுத்தனர்,
கதிரவரவரவர் கைந்நிரைகாட்டினர்
அதிர்குரல் முரசங்கள் அலைகடல் முழக்கொத்த
மதுவிரிதுழாய்முடி மாதவன் தமர்க்கே.

5. மாதவன் தமரென்று வாசலில் வானவர்
போதுமினெமதிடம் புகுதுகவென்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேதநல்வாயவர் வேள்வியுள்மடுத்தே.

6. வேள்வியுள்மடுத்தலும் விரைகமழ் நறும்புகை
காளங்கள் வலம்புரி கலந்தெங்குமிசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமரென்று
வாளொண்கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிந்தே.

7. மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர், தொடுகடல்-
கிடந்தவெங்கேசவன் கிளரொளிமணிமுடி
குடந்தையெங்கோவலன் குடியடியார்க்கே.

8. குடியடியாரிவர் கோவிந்தன் தனக்கென்று
முடியுடைவானவர் முறைமுறையெதிர்கொள்ளக்
கொடியணிநெடுமதிள் கோபுரம்குறுகினர்
வடிவுடைமாதவன் வைகுந்தம்புகவே.

9. வைகுந்தம்புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுதென்று
வைகுந்தத்தமரரும் முனிவரும் வியந்தனர்,
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே.

10. விதிவகை புகுந்தனரென்று நல்வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நற்சுண்ணமும் நிறைகுட விளக்கமும்
மதிமுக மடந்தையர் ஏந்தினர்வந்தே.

11. வந்தவரெதிர்கொள்ள மாமணிமண்டபத்து
அந்தமில் பேரின்பத்து அடியரோடிருந்தமை
கொந்தலர்பொழில் குருகூர்ச்சடகோபன், சொல்-
சந்தங்களாயிரத்து இவைவல்லார் முனிவரே.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி, 10-ஆம் பத்து, 10-ஆம் திருவாய்மொழி

1. முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா! என்பொல்லாக்-
கனிவாய்த் தாமரைக்கண் கருமாணிக்கமேயென்கள் வா!
தனியேனாருயிரே! என்தலைமிசையாய் வந்திட்டு
இனி நான் போகலொட்டேன் ஒன்றும் மாயம் செய்யேலென்னையே.

2. மாயம் செய்யேலென்னை உன்திருமார்வத்து மாலைநங்கை
வாசம் செய்பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய்
நேசம் செய்துன்னோடென்னை உயிர்வேறின்றியொன்றாகவே
கூசம்செய்யாது கொண்டாய் என்னைக்கூவிக் கொள்ளாய் வந்தந்தோ!

3. கூவிக் கொள்ளாய் வந்தந்தோ! என் பொல்லாக் கருமாணிக்கமே!
ஆவிக்கோர்பற்றுக் கொம்பு நின்னலாலறிகின்றிலேன்யான்
மேவித்தொழும் பிரமன்சிவன் இந்திரனாதிக்கெல்லாம்
நாவிக்கமல முதற்கிழங்கே! உம்பரந்ததுவே.

4. உம்பரந்தண்பாழேயோ! அதனுள் மிசை நீயேயோ!
அம்பரநற்சோதி அதனுள்பிரமனரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவனவன்நீ
எம்பரம் சாதிக்கலுற்று என்னைப் போரவிட்டிட்டாயே.

5. போரவிட்டிட்டென்னை நீபுறம்போக்கலுற்றால், பின்னையான்-
ஆரைக்கொண்டெத்தையந்தோ எனதென்பதென்? யானென்பதென்?
தீரவிரும்புண்டநீரது போல என்னாருயிரை-
ஆரப்பருக, எனக்காராவமுதானாயே.

6. எனக்காராவமுதாய் எனதாவியையின்னுயிரை
மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனியுண்டொழியாய்
புனக்காயாநிறத்த புண்டரீகக்கண் செங்கனிவாய்
உனக்கேற்கும் கோலமலர்ப் பாவைக்கன்பா! என்னன்பேயோ!

7. கோலமலர்ப்பாவைக்கன் பாகிய என்னன்பேயோ!
நீலவரையிரண்டு பிறைகவ்வி நிமிர்ந்ததொப்பக்
கோலவராகமொன்றாய் நிலம்கோட்டிடைக்கொண்ட வெந்தாய்!
நீலக்கடல் கடைந்தாய்! உன்னைப் பெற்றினிப் போக்குவனோ!

8. பெற்றினிப்போக்குவனோ? உன்னையென் தனிப்பேருயிரை
உற்றஇருவினையாய் உயிராய்ப்பயனாயவையாய்
முற்றவிம்மூவுலகும் பெருந்தூறாய்த்தூற்றில்புக்கு
முற்றக்கரந்தொளித்தாய்! என்முதல்தனிவித்தேயோ!

9. முதல்தனிவித்தேயோ! முழுமூவுலகாதிக்கெல்லாம்
முதல் தனியுன்னையுன்னை எனைநாள்வந்து கூடுவன்நான்
முதல்தனியங்குமிங்கும் முழுமுற்றுறுவாழ்பாழாய்
முதல்தனிசூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவிலீயோ!

10. சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவில்பெரும்பாழேயோ!
சூழ்ந்ததனில்பெரிய பரநன்மலர்ச்சோதீயோ!
சூழ்ந்ததனில்பெரிய சுடர்ஞானவின்பமேயோ!
சூழ்ந்ததனில்பெரிய என்னவாவறச்சூழ்ந்தாயே.

11. அவாவறச்சூழ் அரியையயனையரனையலற்றி
அவாவற்றுவீடுபெற்ற குருகூர்ச்சடகோபன் சொன்ன
அவாவிலந்தாதிகளால் இவையாயிரமும், முடிந்த-
அவாவிலந்தாதியிப்பத்தறிந்தார் பிறந்தாருயர்ந்தே.

(உயர்வறவுயர்நலம் உடையவன்யவனவன்,
மயர்வறமதிநலம் அருளினன்யவனவன்,
அயர்வறுமமரர்கள் அதிபதியவனவன்,
துயரறுசுடரடி தொழுதெழென்மனனே!)

கோயில் திருவாய்மொழி முடிவுற்றது.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar