SS பக்தி மார்க்கம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பக்தி மார்க்கம்
பக்தி மார்க்கம்
பக்தி மார்க்கம்

ஓம் நமே பகவதே ராமகிருஷ்ணாய !

தம் வாழ்க்கையாலும் உபதேசங்களாலும் எல்லா மதங்களிலும் உள்ள ஒற்றுமையை எடுத்து விளக்கி, ஸர்வ சமய ஸமரஸத்தைப் பரவச் செய்த பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு நமஸ்காரம் !

1. பக்தி

எவருக்குப் பகவானிடம் பக்தி உள்ளதோ அவர்களே மேன்மையானவர்கள். அது ஒன்றே இவ்வுலகில் உண்மையானது ; மற்ற விஷயங்கள் யாவும் மித்தையே. புனிதமான, புண்ணிய வாழ்க்கையைக்கொள். பயமற்றுத் தைரியமாயிரு. உன் முன்னால் ஆயிரம் மாந்தர் தவறி விழுந்தாலும் கவனியாதே; அப்பொழுதும் உறுதியுடன் நில்; கைவிட்டு விடாதே. பக்தியும் அன்பும் பெற்றிருப்பது உண்மையிலேயே எவ்வளவு மேன்மையான விஷயம்! பக்தி ஒன்றேதான் மனிதனை இன்பமடையச் செய்யக்கூடியது.

உண்மையான பக்திக்கு அபூர்வமான சக்தியுண்டு. அதன் மூலம் ஒரு பக்தன் ஒரு கல்லினின்றுங்கூட தெய்வீக சக்தியை எழுப்பலாம். பக்தி என்பது உயிருள்ளதொரு சக்தி ; உயிரற்ற சரீரத்திற்கு அது உயிரளிக்கவும் கூடும். பகவானிடம் இயற்கையிலே இம்மாதிரி அன்பைப் பெற்றவர் ஆனந்தத்தையடைந்தவராவர். ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்வதைக்கேள் - பக்தி, நம்பிக்கை ஆகிய இவைகளின் மூலம் நம்முடைய இலட்சியத்தைச் சுலபமாக அடையலாமேயொழிய, தர்க்கம் புரிவதால் எந்நாளும் அதை அடைய முடியாது.

உண்மைப் பக்திதான் கடவுள் தரிசனத்தை நமக்குக் கிட்டச் செய்கிறது. கேவலம் புத்தியினால் எவரும் அவனை அடைய முடியாது. யோகாப்பியாசத்தினாலும், பலவிதமான கஷ்டானுபவங்களாலுங்கூட அவனை அடைய முடியாது. இது பகவானுடைய வாக்கியமாகும். பரிசுத்த மெய்யன்பினாலும் ஒருமுகமான தன்னமற்ற அன்பினாலுமே அவனையடைதல் கூடும். கடவுள் பந்தமில்லாதவர். அவர் எந்த விதியினாலும் கட்டுண்டிருக்கவில்லை. அங்ஙன மிருந்தும் அவர் "என் பக்தர்களால் நான் கட்டுண்டிருக்கிறேன் எனக் கூறுகிறார். ஒரு பெரிய அவதார புருஷர் கூறியதைப்போல் "கடவுளே அன்பு ; அன்பே கடவுள். ஆனால் இதை யதார்த்தமாய் அறிவது மிகக் கடினம். தூய்மையான ஹிருதயத்தைப் பெற்றவனே இதையறிந்து உணர முடியும். சிறிதளவு சுயநல ஆசை இருப்பினும் இதைப்பெற நாம் எதிர்பார்ப்பது வீணே. அது புனிதமான வஸ்து ; தெய்வீகமானது.

இத்தகைய அன்பு ஜனித்ததும், மனிதன் இகலோகக் கட்டுகளிலிருந்து விடுபட்டவனாகிறேன். ஆனால் அது கடினாமாயிருக்கிறதேயென்று நாம் மனந்தளரக் கூடாது. <உலகின் மத்தியிலிருந்து நோக்கும்பொழுது அது எவ்வளவு கடினமாகத் தோன்றினும், அதை நாம் அனுபவித்தறிந்தேயாக வேண்டும். அதைப் பெறாதாயின் ஹிருதயம் வெறும் கட்டாந்தரையேயாகும். இதுவே நமது வாழ்க்கை ; இவ்வுலகில் இது ஒன்றே ஸத்யமானது. யதார்த்தமான உண்மைப் பக்தனுக்கு இது கடினமானதல்ல. அன்பினாலேயே அமைக்கப்பட்ட அவன் ஹிருதயம் தானாகவே ஈசுவரனை நோக்கிப் பாய்ந்து ஓடுகிறது.

கடவுளிடம் பூரண நம்பிக்கையுடையவனாக இரு; எல்லாக் கவலைகளிலிருந்தும் நீ விடுபட்டவனாவாய். அவர் உன்னை ஆசீர்வதித்து, எல்லாத் தீங்குகளிலிருந்தும் ரக்ஷிப்பார். உன் கண்களை அவர் மீதே அசையாது செலுத்தி, குழந்தையைப் போல் களங்கமற்ற தன்மையுடன் அவரைப்பிரார்த்திப்பாயாக. எதையும் கவனியாதே. ஒருபொழுதும் தைரியமிழந்து மனந்தளராதே. எப்பொழுதும் கவலையின்றியிரு. அப்பொழுது பகவானுடைய ஆசீர்வாதத்தினால் நீ சாந்தியுடனும் ஆனந்தத்துடனும் வீற்றிருப்பாய்.

நீ உண்மைப் பக்தனாக இருக்க இஷ்டப்பட்டால், உலக சம்பந்தமான எண்ணங்களிலிருந்தும், செய்கைகளிலிருந்தும் நீ விடுதலையடைய வேண்டும். உலக உபாதிகள் உன்சாந்தி நிலையை ஒருபொழுதும் கலக்கிவிடக் கூடாது. பரிசுத்தமாயும், மாசற்றும், தன்னலங் கருதாமலும், ஆழ்ந்த அன்பைக் கொண்ட விசால ஹிருதயத்துடனும் இரு. நீ உன்னை ஒரு பெரிய மனிதனாகப் பாவித்துக் கொள்ளாதே ; பரமாத்மாவினுடைய தாழ்ந்த தொண்டனாகவே உன்னை எண்ணிக் கொள்; அபாயத்தைப் பற்றிய சிந்தனையேயின்றி, சேவை புரிய எப்பொழுதும் தயாராக இரு, கடவுளை நினைத்துக் கொண்டும், தூய வாழ்க்கையை வாழ்ந்தும் கொடிய அகால மரணத்தையடைய நேரிடினும் அதுவே மேன்மையென்பதை ஞாபகத்தில் வை ; அங்ஙனமின்றி, சுகபோகங்களுடன் வாழ்வதாயினும், அது <உன்னை உனது இலட்சியத்தினின்றும் நழுவச் செய்துவிடும் ; இதை விடப் பெரியதோர் சாமில்லை. எப்பொழுதும் கவனத்துடனிரு ; ஏதோவொரு சமயம் நேரும் மனோபலக் குறைவினால் உனதனைத்தையும் நீ இழந்துவிடாதே. தைரியமாய்ப் பயமின்றி நட ; ஒரு பொழுதும் பொறுமையை இழக்காதே.

வெளி விஷயங்களில் நீ சார்ந்து நிற்காதே ; வெளித் தோற்றமாகிய வார்த்தைகள் ஹிருதயத்தினுடைய ஆழ்ந்த உணர்ச்சிகளை ஒருக்காலும் தோற்றுவிக்க முடியாதென்பதைத் தெரிந்து கொள். அதிகமாக வார்த்தையாடாதே. ஒளியை யளிப்பது வார்த்தைகளல்ல ;  வெகு அழகான பாஷையுமல்ல ; நம்முடைய குணமே, இயற்கையே அதையளிக்கும். தீர்க்கதரிசிகளான மகான்கள் மிக இலகுவான பாஷையிலேயே பேசினார்கள் ; ஆனால் அவர் சொற்களில் ஒளி, உயிர், நம்பிகை, தைரியம் யாவும் ததும்பி நின்றன. பக்தி ஆகிய செடி <உன் ஹிருதயத்தினுள் மௌனமாக வளரட்டும் ; மெய்ப் பக்தியினுடைய ஆனந்த பாஷ்பத்தினால் அதற்குத் தண்ணீர் வார். பலன்கள எதிர்பாராதே ; ஹிருதய பூர்வத்துடன் சேவைமட்டும் செய்து கொண்டிரு.

மெய்ப் பக்தன் தன் உயர்ந்த இலட்சியத்திற்கேயன்றி, வேறெவர் பொருட்டும் உழைப்பதில்லை. அவன் உண்பது, குடிப்பது, உறங்குவது, அசைவது ஆகிய ஒவ்வொரு செய்கையும் கடவுளைத் தொழுவதே யாகும். தனது இஷ்ட தெய்வத்திற்கே தன் யாவும் சொந்தமென அவன் நம்புகிறான். தன் சரீரமுங்கூடத் தனது தெய்வத்தினுடையதாகவே கருதித்தான் அவன் அதற்கு உணவளித்து இரக்ஷிக்கிறான். சரீரத்திற்குத் தீங்கு நேர்ந்தாலும், பசியுண்டானாலும், ஜலதோஷ மேற்பட்டாலும், எவ்விதத்திலாவது அதற்குக் கவனக் குறைவு ஏற்பட்டாலும் தனது இஷ்ட தெய்வ துன்புறுகிறது என அவன் எண்ணுகிறான். அதனால், தன் அன்பனின் பொருட்டே, அவன் அதைப் பற்றிக் கவலை கொள்கிறான். அல்லது, தன் சரீரத்தை ஒரு கோயிலாகவும், அதனுள் தன் இஷ்ட தெய்வம் உள்ளதெனவும் அவன் கருதலாம்; அப்பொழுது சரீரத்திற்குச் செய்வது யாவும் தன் அன்பனுக்கே சமர்ப்பிக்கப்படுகின்றன. அதனால் பூர்ண பரிசுத்தமானதும், ஹிருதயமெனும் கர்பக்கிருகத்தில் ஸமர்ப்பிக்க யோக்கியதையுடையதுமான வஸ்துக்களையே அவன் சரீரத்திற்கு அளிக்க ஜாக்கிரதையுட னிருக்கிறான். இஷ்ட தெய்வம் தன்னுள்ளிருப்பதாக இடைவிடாது சிந்தனை செய்வதனால், சரீர பந்தங்களிலிருந்தும் விடுதலையடையச் சாத்தியமாகிறது.

இங்ஙனம் உண்மையான பக்தியானது, உன் வாழ்க்கையில், ஒவ்வொரு க்ஷணமும் உன் இஷ்ட தெய்வத்துடன் இருக்கக்கூடிய நிலைக்கு உன்னை இட்டுச் செல்லு<கிறது. <உன் அன்பான பகவானைத் தவிர வேறெதுவும் உனக்கு இலக்ஷியமாயிருக்கக் கூடாது. கடவுளிடமே நீ வசிக்க ஆரம்பித்துவிட்டால் எல்லாத் துக்கமும் அழிந்து விடுகிறது. பகவானுடைய பாதாரவிந்தங்களின் மீது உன் ஹிருதய முழுதும் செல்கிறது; நீ அவனுள் மறைந்து விடுகிறாய். இந்த நிலை மிக உயர்ந்த நிலை - இது நமது கடைசி இலக்ஷியமான திருவருட் காட்சிக்கு வழி காட்டுகிறது.

அன்பினால் மட்டுமே தெய்வ சான்னித்யத்தை நாம் உணர்கிறோம். அன்பு கடவுளையும் மனிதனையும் ஒன்று சேர்க்கிறது. ஹிருதய பூர்வமானதும் ஏக சித்தத்துடன் கூடியதுமான அன்பு பகவான் மீது உதிக்கும்பொழுது அது ஒரு பெருவெள்ளம்போல் வந்து யாவற்றையும் அடித்துச் சென்றுவிடுகிறது - அவித்தை, குறுகிய பான்மை, பயம், சந்தேகம், சுயநலங்கருதல் இவை யாவும் போய்விட்டால் மிகுந்து நிற்பது என்ன ? நம்முடைய இலக்ஷியம், நம் இஷ்ட தெய்வம்; இதுவே எஞ்சி நிற்பது. அது நமது ஹிருதயத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இதற்குப் பிறகு உலக விஷயங்களை நாம் துறப்பது சுளுவாகிறது ; நமது அன்பனைத் தவிர மற்றெதன் மீதும் நமக்குக் குறியில்லை. அவன் ஒருவனே சாசுவதமான. மாறாத அகிலமான வஸ்து ; மற்ற யாவும் சதா மாறிக்கொண்டிருக்கிற அநித்யமான வஸ்துக்களே. அவன் ஜாஜ்வல்யமான பரமாத்மா ; மற்றவை அழியக்கூடிய வஸ்துக்கள்.

பகவத் பக்தியானது முயற்சியின்றியே உலக விஷயங்களைத் தியஜித்துவிட நமக்கு வன்மையளிக்கிறது. சர்வலோக பிதாவின் மீதுள்ள ஆழ்ந்த பக்தியினால் தான் ஏசு கிறிஸ்துவானவர் சாத்தானுடைய துர் உபதேசங்களை எதிர்த்து நின்று உலக சுகத்தை இலக்ஷியம் செய்யாமலிருக்க முடிந்தது. அங்ஙனமே நமக்கும் ஹிருதயம் நிறைந்த பகவத் பக்தியிருந்தால், <உலக விஷயமெதுவும் நம்மை மயக்கமுடியாது ; பின்பு சந்யாசமும் சுலபமாகிறது. "" உங்கள் மீதுள்ள சுமைப் பளுவை நான் அகற்றிடுவேன் என்று கிறிஸ்துநாதர் கூறியதின் கருத்து இதுவே. நாம் பகவான் மீது உண்மையாகவே பக்தி செ<லுத்தி அவரையே அடிக்கடி சிந்தனை செய்யவேண்டுமென்பதே அதன் பொருள். இதனால் நாம் பரிசுத்தமாகிறோம் ; ஒரு பரிசுத்தமான வஸ்துவைத் தியானிப்பதால், நம்முடைய அகத்தின் அசுத்தங்கள் தாமாகவே அகன்று விடுகின்றன. பகவானுடைய பாதகமலங்களில் நாம் சரணமடையும் பொழுதும், நமது சுமையை அவர் மீது சார்த்திவிடும்பொழுதும், நமது ஹிருதயமனைத்தும் அவரிடமே சென்று அன்புகொள்வதால், பின்னர் இவ்வுலகை நாம் இலக்ஷியம் செய்வதில்லை. அப்பொழுது நமது பளுவான சுமை அகன்று விடுகிறது. இதுவே உண்மைச் சந்யாசம் ; உண்மையான மோக்ஷம்,

பக்தனுக்கு உண்மையன்பு உதித்ததும் அவன் அடக்கத்தையும் விசால அன்பையும் பெறுகிறான், பகவானே யாவுமாய். தான் ஒன்றுமில்லாதவனாகிறான். எங்கும் தன் அன்பைனையே காண்பதனால், அவன் யாவருக்கும் ஊழியாகிறான். ஒவ்வொரு ஜீவன் மூலமாயும் அவன் தன் இஷ்ட தெய்வத்தையே புஜிக்கிறான். புல்லிதழுக்கும் தாழ்ந்தவனாயும், மரத்தையொத்த சகிப்புத் தன்மையைக் கொண்டவனாயும், தனக்குக் கீர்த்தியைத் தேடாமல் யாவருக்கும் சிரேயஸை யளிபவனே பகவானுடைய திருநாமத்øப் பூஜிக்க யோக்கியதையுடையவன்.

நாம் என்ன செய்தாலும், மரமனது தன்னியற்கையைப் பூர்த்தி செய்கிறது. அதன் கிளைகளை நாம் வெட்டிவிட்டால், அது மறுபடி வளர்ந்து நமக்கு நிழலையளிக்கிறது. அங்ஙனமே கடவுளிடமிருந்து எதையோ விரும்பி <உண்மைப் பக்தன் அவரைப் பூஜிப்பதில்லை ; தனக்குப் பிரியமான அன்பனை அன்பின் பெருட்டே அவன் பூஜிக்கிறான். நாம் எதையாவது எதிர்பார்த்து நிற்கும்வரை, உண்மையான அன்பு செலுத்த முடியாது ; நமது இலக்ஷியம் வெகு தூரத்திலேயே இருக்கும். அன்பின் பொருட்டே அன்புகொள்ள ஆரம்பித்தால்தான் உண்மைப் பக்தி நம்மிடம் தோன்றும்.  பிறகு நாம் படாடோபமின்றி இரகசியமாகச் சேவை செய்வோம். தன்னைப் பற்றியே பேசிக்கொள்ளும் மனிதன் உண்மைப் பக்தனாகவோ அல்லது, உண்மைக் கர்மயோகியாகவோ ஆகான். ஸ்ரீ விவேகானந்த சுவாமிகள் கூறுகிறார். உண்மையான கர்ம யோகிகள் யாரும் அறியாதே தங்கள் வேலையைச் செய்து, அங்ஙனமே மறைந்து விடுகின்றனர். மனித ஜாதியின் பொருட்டுத் தங்கள் உயிரையே அளிக்கும் மகான்களைப்பற்றி வெகுவாகப் பலருக்கு ஒன்றும் தெரியாது.

உன் வேலையைச் சிலாகித்துக் கூறுபவர் எங்கில்லையோ உனக்குத் தைரியமளிப்பதற்கொருவர் கூட எங்கும் கிடையாதோ, எங்கு உன்னை யாவரும் வெறுக்கின்றனரோ அங்கு தான் ஏராளமான பொறுமையும் அழியாத நிம்மதியும் வேலையைச் செய்வதில் சிறிதளவும் பயமின்மையும் இருக்கவேண்டும். சிலாகித்துக் கூறுவதற்கு ஆயிரக்கணக்கான மாந்தர் தயாராக உள்ள ஒரு பெரிய வேலை எதிரே தோன்றும்பொழுது, ஓர் அதமனான கோழையும், மிக்க சுயநலங்கொண்டவனுங்கூடத் தன்னை ஒரு பெரிய தீர புருஷனாகக் காட்டிக்கொள்ளத் தன் உயிரையும் விடுவான். ஆனால் பிறர் எவரும் அறியாதபடி ஒரு சிறு வேலையையாவது எவன் செய்கிறானோ, அவனே தீர புருஷன் ; அவனே மனித ஜாதியின் நலத்தையே கருதும் மஹான். அவனே மேன்மையானவன்.

உனக்கு மிக சமீப உணர்ச்சியை அளிக்கக்கூடிய உறவு முறையிலேயே உன் இஷ்ட தெய்வத்தை எடுத்துக்கொள். உனது இயற்கைக் குணத்திற்கு மாறான பாவனையில் பகவானை நீ பூஜிக்க ஆரம்பித்தால் பக்தி மார்க்கம் கடினமாய், சிலசமயம் பிரயோசனமற்றதாகவும் ஆகிவிடுகிறது. பகவான் உனக்கு அன்புள்ள தந்தையாகத் தோன்றுகிறரா ? அங்ஙனமாயின் அவரை உனது உண்மைக் தந்தையாகச் செய்துக்கொள். <உனது இகலோகத் தந்தையைவிட நெருங்கியவராக அவரைக் கருதி, அவரையே <உனது பற்றுக் கோடாகவும் வழிகாட்டியாகவும் கொள். தாயாராக அவர் உனக்கு இன்னும் நெருங்கியவரானால், அப்பொழுது இன்னும் நன்றாக அவரைப் பூஜிக்கலாம் ; ஏனெனில் தாயென்ற உணர்ச்சியால், மற்ற பாந்தவ்யத்தினின்றும் ஏற்படாத ஒரு நெருங்கிய உறவு தோன்றுகிறது. தந்தையினிடம் சில சமயம் பயம் உண்டாகலாம் ; ஆனால் தாயிடம் எப்பொழுதும் குழந்தை தாராளமாகப் போகலாம். தான் தவறு செய்திருப்பினும் தன் தாய் தன்னைத் தண்டிக்கமாட்டாளென்றும், எப்பொழுதும் அன்புடன் மன்னித்து இரக்ஷிப்பாளென்றும் குழந்தைக்கு நன்கு தெரியும்.

ஒருகால், இந்தியாவில் பலர் செய்வதைபோல், உன் இஷ்ட தெய்வத்தை உனது சிறு குழந்தையாக - பாலகிருஷ்ணனாக அல்லது பால கிறிஸ்துவாக - பாவிப்பது உனக்கு ஒத்ததாக இருக்கலாம். இதைவிட உயர்ந்ததும் பரிசுத்தமானதுமான உறவுமுறை எதுவுமில்லை. அன்னையின் உண்மையான தன்னலங் கருதா அன்பு மிகவும் ஆழ்ந்த அன்பாகும். அந்த அன்புக் கடலில் நீ மூழ்கும் ஆழத்திற்கேற்ப உனது ஞான வளர்ச்சியும் அதிகரிக்கும். உனது தெய்வீக பாலனிடம் அன்னையின் அன்பைச் செலுத்து ; பிறகு ஒரு தீங்கும் உன்னை அண்டாது, <உன் குழந்தையாகவே அவனை நினை. ஸ்ரீ கிருஷ்ணரின் அன்னையான தேவகியைப்போல நீ ஆகவேண்டும் ; அவள் தன்னுடைய புத்திரனுடைய சௌரியத்திலாவது கீர்த்தியிலாவது சிரத்தை கொள்ளவில்லை. தன் போஷணையையும் இரக்ஷிப்பையும் எதிர்பார்க்கும் தனது சிறு பாலனாகவே அவள் கிருஷ்ணனை எண்ணியிருந்தாள்.

இங்ஙனம் எந்தப் பாவனையிலாவது உண்மைப் பக்தி உதித்துவிட்டால், நமக்கும் இஷ்ட தெய்வத்திற்கும் உள்ள பாந்தவ்யம் மிக உண்மையானதாக ஆகிவிடுகிறது ; பின்பு அன்பும், பிரார்த்தனையும் தாமாகவே நம் ஹிருதயத்திலிருந்து பகவானிடம் செல்கின்றன. ஆனால் எந்த உருவத்திலும் ஸகுணமாகப் பகவானைப் பூஜிக்காமலேயே உண்மைப் பக்தியிருத்தலுங்கூடும். சிரத்தையுடனும், ஆஸக்தியுடனும் உண்மை வஸ்துவை <உன்னுள்ளேயே நீ தேடினால், நீயும் ஒரு உண்மைப் பக்தனேயாவாய். எந்தப் பெயரிட்டழைத்தாலும் சரி உனது இஷ்ட தெய்வத்திற்கு நீ உண்மையான பக்தியுடையவனாய் மட்டும் இரு. தன்னலம் கருதாமலும் பரிசுத்தத்துடனும் அவரைப் பூஜி உனக்கு உண்மைப் பக்தி சித்தித்து விடும்.

2. பரிசுத்தம்

பரிசுத்தம், தூய்மை இதுவே உண்மையான பலம் ; தூய்மையே நிஜ ஆரோக்கியம். இதன் மூலமாய் உனது பலத்தைப் பெறு. இதை என்றும் மறவாதே ! அப்போதே நீ மரணமற்றவனாவாய், பரிசுத்தம் உன்னைப் பயமற்றவனாகச் செய்யும் ; பரிசுத்தம் உன்னை மலர்முகனாகச் செய்யும். தீரனாக விரு, உன் முன் எது வேண்டுமாயினும் வரட்டும் ; தைரியத்துடன் நில். பரிசுத்தத்தால் ஏற்படும் பலத்தினால் பலஹீனத்தை யகற்றிவிடு. பகவானிடம் தீவிர நம்பிக்கை வைத்து தைரியமாக முன் செல். அவர் என்றும் உன்னை இரக்ஷிப்பார்.

பரிசுத்தத்துடன் நீ எதைச் செய்தாலும் அது பிரகாசிக்கும்; ஆகவே எதற்கும் நீ அஞ்சவேண்டியதில்லை. இதுதான் இரகசியம். பகவானுடைய அனுக்கிரகத்தினால் தான் இதை அறிய முடியும். அவருடைய சக்தி மகா சக்தியாகும் ; பரிசுத்தமான ஜீவனிடம் அவர் பிரதி பிம்பம் தோன்றும். உன்னைச் சரியான மார்க்கத்திலேயே அவர் சதா இட்டுச் செல்வார். ஆனால் மனோபலத்துடன் வேலை செய்; மனத்தளர்ச்சிக்கு இடமளிக்காதே. முன்னால் நட; முன்னோக்கிச் செல் ! இதோ, <<உன் வழி உன் முன் இருக்கிறது ; அதனுடைய முடிவை நீ அடைய வேண்டும். உறங்கி விடாதே ; இளைப்பாறாதே ; விழித்துக்கொள் ! எழுந்துகொள் !

சில சமயம் தூய்மையான உன் மனநிலை களங்கமுற்று மயங்கினாலும் நீ மனந்தளர்ந்து தைரியமிழக்கக் கூடாது. அந்நிலை நிலைத்து நில்லாது. ஒரு பெரும் புயற்காற்று வீசிய பின் சாந்தியும் நிம்மதியும் ஏற்படுகின்றன. அங்ஙனமே சஞ்சலமடைந்த பின்னர் சாந்தியுண்டாகிறது. ஒன்றையொன்று தொடர்ந்தேயாக வேண்டும் ; இது பிரகிருதியின் சட்டமாகும். துன்பமனுபவியாமல், சுகம் என்பதின் பொருளை நாம் அறிய முடியாது. ஆதலின் இதை என்றும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். நமது வாழ்க்கையில் நேரிடும் விஷயங்கள் யாவும் நம்முடைய அறிவை விசாலப்படுத்துகின்றனவான ஆழ்ந்த கருத்தைக் கொண்டவைகளே என்பதை மறக்கக்கூடாது. அதிகமான பலத்தை பிரயோகித்த பின்னர் அதற்கு எதிரிடையான உணர்ச்சி ஏற்படுவது சகஜமே. அப்பொழுது பலஹீனமும், களைப்பும் உண்டாவது இயற்கையே. இத்தகைய காலங்கள் <உண்மைப் பக்தனுக்குச் சோதனைக் காலங்களாகும். இவ்விரண்டு நிலைகளிலும் யார் நழுவிவிடாது அசையாமல் நிற்கின்றனரோ, அவரே பக்குவமான ஜீவர்கள். மற்றவர்கள் பாலர்களை யொத்தவரேயாவர். எல்லா விஷயங்களும் சரியாக இருக்கும் பொழுது, எவனும் சந்தோஷமாக இருக்கக்கூடும். ஆனால் எல்லா விஷயங்களும் தவறுதலாகவும் தமக்கு விரேதமாகவும் ஆகும் சமயத்தில்கூட யார் கவலைப்படாமல் நிற்கின்றனரோ அவரோ மெய்யடியார்கள். பரிசுத்தத்திலும் நம்பிக்கையிலும் வழுவாது நில் ; <உ<னக்கு நிச்சயமாக பலம் தோன்றும் ; உன் வழி தெளிவாகத் தோன்றும்.

யதார்த்த பக்தன் ஒருபொழுதும் இளைப்பாறுவதில்லை ; எக்காலத்திலும் அவன் சுயநலத்தை ஒழிக்கவும், பரிசுத்த வஸ்துவின் தரிசனத்தைப் பெறவும் முயற்சி செய்து கொண்டே யிருக்கிறான் ; பக்குவமாவதற்குப் பரிசுத்தந்தான் அஸ்திவாரம். தன்னலங் கருதாமல் வாழ்வது ஒரு மகத்தான விஷயம். சுயநலங்கருதாமை, பரிசுத்தம் இவைகளின் பொருட்டு ஹிருதய பூர்வமாகவும் ஒரு முகத்துடன் பகவானைப் பிரார்த்தனை செய் ! இந்த வழிதான் மோக்ஷ மார்க்கம். மற்ற மார்க்கங்கள் யாவும் பந்தத்திற்கே இட்டுச் செல்கின்றன.

சுயநலங் கருதாமையும் பரிசுத்தமும் இணைபிரியாத விஷயங்கள். ஒன்று மற்றொன்றை அனுசரித்தே நிற்கும். சுயநலங்கருதாத கர்மத்தினால் ஹிருதயம் சுத்தமாகின்றது ; சுத்தமான ஹிருதயத்திலோ அன்பைத்தவிர வேறெதுவும் இருக்கமுடியாது. அன்பு - கட்டுக்கடங்காத அன்பு - ஒரு பெரு வெள்ளம்போல் வந்து எதையும் அடித்துச் சென்று விடுகிறது, இகலோக சம்பந்தமான எவ்வஸ்துவுக்கும் அந்த ஹிருதயத்தில் இடம் கிடையாது. துக்கம், துன்பம், கஷ்டம், பொறாமை, விரோதம், இன்னும் இம்மாதிரியான பல விஷயங்களும் இனி அங்கு குடிகொள்ள முடியாது. தெய்வீக அன்பு அல்லது பகவத் பக்தி என்பதின் பொருள் இதுவே என நான் அறிகிறேன். மதம் என்பதும் இதையே குறிக்கிறதெனவே நான் நம்புகிறேன்.

இத்தகைய பக்தியில் மூழ்கியிருந்து, மற்றெல்லாவற்றையும் மறந்துவிடு. பிறர் என்ன சொல்லுகிறார்களெனக் கவலையுறாதே பகவானை மட்டுமே இலக்ஷியம் செய். இந்த வெளியுலகம் உனக்கு முற்றிலும் மறைந்து விடட்டும். அன்பென்னும் பித்துப்பிடித்து அலையவேண்டிய காலம் உனக்கு வந்து விட்டது. சிலர் பெயருக்கும், சிலர் கீர்த்திக்கும், பிறவற்றிற்குமாக உலகில் யாவரும் பித்துப் பிடித்தலைகின்றனர் என்கிறார் ஸ்ரீ ராமகிருஷ்ண தேவர். நீயோ <உன் இஷ்ட தெய்வப் பயித்தியனாக இருக்கவேண்டும். நேராக நின்று, நம்பிய விஷயத்தினின்றும் நழுவாது முன்னால் நடந்துசெல். யாருக்காக நீ அஞ்சவேண்டும் ? உன் ஹிருதயத்தில் பயம் என்பதற்கு இடம் அளிக்கக்கூடாது. பயமின்றி மலர்முகனாய், சுத்தனாய், தெய்வீகத் தன்மையுடன் இரு. நீ தெய்வீகக் குழந்தை என்பதை யுலகம் அறியட்டும். அகிலமானதொரு சக்தி உன் பின் இருக்கிறதென்பதை ஞாபகத்தில் வை. உன்னையசைக்கக் கூடியவர் எவருமில்லையென அறிந்து தைரியமாயிரு. என்ன நேர்ந்தாலும் சரியே, நீ எப்பொழுதும் கலங்காமல் இருக்க வேண்டும். தூய்மையான ஹிருதயத்தில் கவலையுமில்லை, வருத்தமுமில்லை. தனதன்னை யினது கரங்களில் ஆனந்தமாக வீற்றிருக்கும் குழந்தையைப் போல, <உனது முகமும் கவலையேயின்றி இருக்கட்டும்.

ஹிருதயம் மாசற்று முற்றுந் தூய்மையானாலன்றி <உண்மையான பக்தி தோன்றாது ; அன்பு எவ்விதம் நம்மை சுயநலமற்றவர்களாகச் செய்கிறதென்பதை நீ அறிவாய். உதாரணமாக, தன் குழந்தையின் மீது அன்னைக்குள்ள அன்பை எடுத்துக்கொள். தன்னைப்பற்றிய யாவையும் அவள் மறந்து, தனது குழந்தையின் ÷க்ஷமத்திற்காகவே சதா உழைக்கிறாள். தன் குழந்தையின் பொருட்டு எந்த அபாயத்திற்கும் உட்பட அவள் தயாராயிருக்கிறாள். தன்னுடையசுகத்தை துறந்தாவது தன் குழந்தையை ÷க்ஷமமாக வளர்க்க அவள் பாடுபடுகிறாள். இந்த ஒரே வழிதான் - தன்னையும் தனது நலத்தையும் இஷ்ட தெய்வத்தின் பொருட்டு மறந்து விடுவதே - சுயநலத்தை யொழிக்கும் வழியாகும். உண்மைப் பக்தி என்பதன் கருத்தும் இதுவேயாம்.

இந்த உயர்ந்த இலக்ஷியத்தை நம்முன்னிருத்திக் கொண்டு எப்பொழும் முன்சென்று கொண்டேயிருக்க வேண்டும். சரீரம் போய்விடுகிறதா, இருக்கிறதா என்பதைக் கூட கவனியாதே. பிறர் என்ன கூறுகிறார் என்பதைப்பற்றியும் கவலைக் கொள்ளாதே. நமது இஷ்ட தெய்வத்தை, நமது பகவானை, நமது நாதனையே நாம் பூஜிக்கவேண்டும். ஹிருதயம் நிறைந்த பக்தியுடன் அவரைத் தியானிப்பதே சாந்தியையும் இன்பத்தையும் அளிக்கும். மற்றெதுவும் - பெயர், புகழ், திரண்ட செல்வம் எதுவும் - இன்பத்தையளிக்காது, ஆதலால் பலன்களைக் கவனியாது நிச்சய புத்தியுடன் நாம் பகவானைப் பூஜிக்க வேண்டும். இதுவே உண்மையான மதம்.

தூய்மை, பலம், பயமின்மை, மனோசாந்தி இவைகளையே மதம் நமக்குத் தருகிறது. மதம் என்பது அனுபவித்தறியும் விஷயம் ; அது மனிதனின் இயற்கையையும் குணத்தையும் அமைக்கும். ஒரு குறித்த சமூகத்திலோ, மதத்திலோ சேர்ந்தவனாயிருப்பதால் மட்டும் நமது வாழ்க்கை இன்பமடையாது. ஒவ்வொரு வஸ்துவையும் அதனதன் உண்மை வெளிச்சத்தில் நோக்கு. யாரிடம் உனக்குப் பயம் ? கடவுள் நம்மிடம் உத்தம அன்பு கொண்ட தாயார். தன் குழந்தைக்கு அன்னை ஏதாவது தீங்கிழைப்பாளோ ? நீ யதார்த்தவானாக இரு ; தூய்மையையும் பொறுமையையும் பெற முயற்சி செய்.

தூய்மையைப் பெறவேண்டியதன் உனது இந்திரியங்களை அடக்க முதலில் கற்க வேண்டும்; பின் உனது பகவானிடம் மனத்தை ஒரு முகமாகச் செலுத்தி நிறுத்து. தன்னடக்க மின்றியே உண்மையின் தோற்றங்கள் சிற் சில சமயம் உனக்குத் தோன்றலாம் ; ஆனால் அவை உடனே நழுவி மறைந்துவிடும். இடைவிடா இந்திரிய நிக்ரகத்தினால்தான் உனக்குக் கிட்டும் உண்மையின் தரிசனத்தை மறையாதிருக்கச் செய்யலாம். இந்திரியங்களின் வழியே செல்லும் மனம் தன் ஞானமனைத்தையும் இழந்து விடுகிறது. இந்திரிய இச்சைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கும் வரையில் மனத்திற்குச் சஞ்சலமும் துக்கமுமே ஏற்படுகின்றன. ஆனால் எப்பொழுது, வெளியுலகின் ஆதிக்கத்தினால்தான் எல்லாத் துன்பங்களும் நேருகின்றன என்றும் இந்திரிய நிக்ரகம் சித்திபெற்ற பொழுதுதான் உண்மையான சாந்தி ஏற்படுமென்றும் அது அறிகிறதோ, அப்பொழுது வெளி விஷயங்களினின்றும் திரும்பி விடுகிறது ; பின்பு ஹிருதயமும் பரிசுத்தமடைகிறது.

ஹிருதயம் தூய்மை பெற்றதும் ஆத்மா அல்லது பகவானுடைய தரிசனம் நமக்குக் கிடைக்கிறது. நமது ஹிருதயம் ஒரு கண்ணாடியைப் போன்றது. மாசாகிய அழுக்கினால் அது மூடப்பட்டிருக்கும்வரை எல்லா ஜீவன்களுக்குள்ளும் இருக்கிற பரமாத்மாவை அது பிரதிபலிக்கிறதில்லை. ஆதலால் மோக்ஷமடையும் மார்க்கத்தில் ஹிருதய பரிசுத்தம் தான் மிக முக்கியமான காரியம். உண்மையிலேயே ஹிருதய பரிசுத்தந்தான் எல்லா மதங்களின் ஸாரமாகும். உள்ளே பரிசுத்தமின்றி வெளியில் பரிசுத்தம் செய்து கொள்வது ஒரு பொழுதும் தூய்மையுணர்ச்சியை அளிக்காது ; ஆதலால் வெளிச்சுத்தத்தைப்பற்றி அதிகக் கவலை கொள்ளாதே. ஜலத்தில் மூழ்கினாலும் மூழ்காவிட்டாலும் நீ பரிசுத்தனே என்பதை அறி. பகவான் பெரைக் கூறிய மாத்திரத்தலேயே எவ்வஸ்துவும் சுத்தமாய் விடுகிறது. பகவானுடைய புண்ணியமான திவ்விய நாமத்தை  நிஜ நம்பிக்கையுடனும் பக்தியுடனும் உச்சரி ; எல்லா அசுத்தங்களும் அகற்றப்பட்டு விடும் ; பரிசுத்தமான இடத்திலேயே உன் மனத்தைச் சதா நிறுத்து ; அதாவது தூய்மையான நினைவுகளையே நினை ; தூய்மையான  ஸத்ஸங்கத்தையே நாடு ; பின் உனது ஹிருதயத்தில் தூய்மை பிரகாசிக்கும்.

யாவற்றிற்கும் முதலாக அஹங்காரத்தை அகற்றிவிடு. இதைவிட அசுத்தமான வஸ்து எதுவும் இல்லையெனலாம் ; இதைத் தவிர வேறெதுவும் அவ்வளவு சீக்கிரமாக ஹிருதயமென்னும் கண்ணாடியை, மாயை, சுயநல அபிமானம் எனப்படும் புழுதியால் மூடிவிடாது. நீ உண்மைப் பக்தனாக இருக்கவிரும்பினால் நான் எனது என்பவைகளை அடித்துத் துரத்த வேண்டும் ;  இவை நம்மை அந்த காரத்திற்கும் பந்தத்திற்குமே இட்டுச் செல்கின்றன. இந்தக் குறுகிய அஹம் என்பதைத் துறந்துவிட்டால் நீ விரிந்த அஹம் ஆக விளங்கி அண்டத்தையே வியாபித்துக் கொள்வாய். தன்னைத்தான் முக்கிய வஸ்துவாகக் கருதுவதை நீ ஒழித்து விடவேண்டும். நான் இதைச் செய்கிறேன், நான் இதைச் செய்யவில்லை என்ற இரண்டு எண்ணங்களையும் அகற்றி விடவேண்டும். எதையாவது நாம் செய்தோம் என்ற செருக்கு உன்னிடம் தோன்றக் கூடாது ; இந்த எண்ணத்தை வேரறுத்து விடு ; நீ சுயநலமற்றவனாய், சுயநல ஆசைகளை வேரறுத்துத் தள்ளிவிடு ; அதன்பின் உனது இலக்ஷியத்தை யடைந்து விடுவாய். சுயநல ஆசைகளின்றி உனது இஷ்ட தேவனைப் பூஜித்தாயானால் நீ சுதந்திரனாகவே கருமம் செய்கிறவனாவாய் ; இத்தகைய கருமமே உண்மையான கருமமாகும். இதன்மூலம் பரிபூரண நிலையை அடையலாம். இஷ்ட தெய்வத்தை இங்ஙனம் சுய அபிமானமின்றிப் பூஜிப்பதால் உன் ஹிருதய பந்தங்கள் அறுபட்டு நீ பரிசுத்தத்தையும் சாந்தியையும் பெறுவாய்.

3. உறுதி

நீ நம்பியுள்ள விஷயத்தில் கற்பாறையைப் போல் திடமாக நில். எப்பொழுதும் கவனத்துடன், கவலையற்று, உனது இலக்ஷியத்திற்கு விரோதமின்றி இரு. தைரியமாயும், ஸத்யவானாயும், தன்னலங் கருதாதவனையும் இரு. ஒருபொழுதும் பயமடையாமலும், ஒருபொழுதும் பின் திரும்பிப் பாராமலும், முன்னே நடந்து செல். எல்லா நிலைகளிலும் திடமாயும் பலஹீனமின்றியும் இருப்பதைவிட நீ கற்க வேண்டிய பாடம் வேறெதுவும் இல்லை. மனிதர் உதவியை எதிர்பார்த்து நில்லாதே ; பகவானுடைய அருள் பெறுதற்கே முயற்சி செய். அவர் உன்னை என்றும் இரக்ஷிப்பார். அவரையே தியானித்து அவரையே சார்ந்து நில். மனிதர் உதவி நிச்சயமான விஷயமன்று. மனித நண்பர்கள் தன்னலங் கருதுபவர்கள். வஞ்சிக்கும் குணமுடையவர்கள். அன்பின் பொருட்டே அன்புகொள்ளும் பகவானே நமது தெய்வீக நண்பன். ஸ்ரீ விவேகானந்த சுவாமிகள் தம் கடிதமென்றில் பின் வருமாறு கூறுகிறார்.

பகவானாகிய அவனே யாவுமறிந்தவன். புத்தியற்ற மாந்தர் அபத்தமாகவே பேசட்டும். நாம் அவரது உதவியைத் தேடுவதுமில்லை ; அது வந்தால் வேண்டாமென மறுப்பதுமில்லை. பரமாத்மாவினுடைய தொண்டர்களே நாம் ; அற்பமாந்தரின் சிறுமுயற்சிகள் எல்லாம் நம் கவனத்திற்குட்படக்கூடாது. முன் செல்க ; பல ஜன்மங்களின் தீவிர முயற்சிக்குப் பின்புதான் பக்குவ குணம் வந்து அமைகிறது. தைரியத்தை இழக்காதே. உண்மையான வார்த்தை எதுவும் வெகுகாலம் மறைந்து இருக்காது ; பல யுகங்களாக அது குப்பையின் கீழ் கிடக்கலாம் ; ஆனால் சீக்கிரமாகவோ, நாளடைவிலோ, அது வெளித் தோன்றியே தீரும். உண்மையைக் கொல்ல முடியாது ; நன்மையை அழிக்க முடியாது. பரிசுத்தத்தையும் அழிக்க முடியாது. ஒரு யதார்த்தமான மனிதனே எனக்குத் தேவை ; நிச்சய புத்தியற்ற மனிதக் கூட்டங்கள் எனக்கு வேண்டாம். என் புத்திரனே ! திடமாக நில் ! உனக்கு உதவிபுரிய எவரையும் லக்ஷ்யம் செய்யாதே. மனிதரின் உதவியைக் காட்டிலும் பகவான் எவ்வளவோ மடங்கு மேன்மையானவரல்லவா ? புனிதமாக இரு ; பகவானை நம்பியிரு. அவரையே சதா சார்ந்து நில். அங்ஙனமாயின் நீ செல்லும் மார்க்கம் சரியானதே ; எவ்விஷயமும் உன் போக்கை எதிர்த்து நிற்க முடியாது.

துக்கமும் கஷ்டங்களும் சில சமயம் நேரிடுவது நம்முடைய இயற்கைக்குணங்களைப் பலப்படுத்தவே யாகும். அவைகள் பரீøக்ஷகளேயாகும். நம்மைத் தயார் செய்து கொண்டு அவைகளைக் கடந்து செல்ல வேண்டும். உன் இயற்கைக் குணங்களை நன்கு அமைக்க அவைகள் வெகு உபகாரமானவை என்பதை அறி. நமக்குக் கஷ்டங்கள் அதிகமாகத் தோன்றினால், நம்முடைய ஜகன்மாதாவை நம் இரக்ஷணையின் பொருட்டு அதிகமாக ஸ்மரிக்கிறோம். இதனால்தான் மஹா பக்தர்களுள் ஒருவரான பஞ்ச பாண்டவர்களின் அன்னை தமக்கு எப்பொழுதும் கஷ்டத்தையும் துக்கத்தையுமே அளிக்கும்படி பகவானைப் பிரார்த்தித்தாள். பகவானை என்றும் மறவாதிருக்கவே அங்ஙனம் அவள் வேண்டினாள். நம்மைச் சுற்றி யாவும் இன்பகரமாயும், சுலபமாயும் இருக்கும் சமயத்தில் நாம் பகவானை மறந்து விடுகிறோம். ஆதலின் துக்கமென்னும் குருவானவர் நம்முடைய கடமைகளை நமக்குத் தெரியப்படுத்துவது நம் அதிர்ஷ்டமேயாகும்.

நம்முடைய இலக்ஷியத்தை யடையும் வழியில், எதையும் எதிர்த்து நிற்கத் தைரியம் வேண்டும். எனது குருநாதர் என்ற பிரசங்கத்தில் ஸ்ரீவிவேகாநந்த சுவாமிகள் கூறுவதைக் கவனி : <உலகம் பூராவும் உன்னை யழுத்திவிட முற்பட்டாலும் நீ உன் இலக்ஷியத்தினின்றும் நழுவாது வேலை செய்வாய் என்று உண்மையாக நம்புகிறாயா ? அவ்வகையான உறுதியும் ஆத்மத் தியாக புத்தியும் அவசியம். பலஹீனமான மனத்தைக்கொண்ட மாந்தரால் உண்மையை அடைந்து அனுபவிக்க முடியாது. நம்முடைய வாழ்க்கையின் காரியத்தைத் தைரியமாக நிறைவேற்றவேண்டும். எவருக்கும் அஞ்சாதே. தெய்வீகமும் பரிசுத்தமும் உனது பிறப்புரிமைகளாகும். நம்பிக்கையுடன் போராடி முன் செல்.

தன்னலங்கருதாதவன் ஏன் அஞ்சுதல் வேண்டும்? சுயநல அபிமானமே எல்லாத் துக்கத்திற்கும், பயத்திற்கும் காரணமாகும், தன்னலமற்றவனுக்கு பாவம் எதுவுமில்லை. இதையறிந்து பயத்தையும் கவலையையும் ஒழித்துச் சுதந்திரனாக இரு. மதம் உபதேசிப்பது பயமின்மையேயாகும். மனோவாக்குச் செய்கைகளில் பரிசுத்தமானவனே பயமற்றிருப்பான். போன நாட்கள் கழிந்து விட்டன ; மறைந்துவிட்டன ; ஆனால் நிகழ்காலம் உயிருடன் இருக்கிறது. ஆதலின் இப்பொழுது எதையும் தன்னலங் கருதாமல் செய்வாயாக.

கர்ம மார்க்கம் கடினமாயும் கோணலாயும் இருப்பதால், முதிர்ந்த ஞானிகள் கூடபுத்தி கலங்கி விடுகின்றனர். மனத்தளர்ச்சி சிற்சில சமயம் நேரிடலாம். ஆனால் நாம் சாந்தமாயும் உறுதியுடனும் இருக்க வேண்டும். பகவானுடைய வழிகள் விளக்க முடியாதவைகள். நாம் உயிருடன் வாழும் வரை போராடியே தீரவேண்டும். ஆயிரம் தடவைகள் நாம் தவறி விழுந்தாலும் திரும்பத் திரும்ப குதூஹலத்துடனும் தைரியத்துடனும் எழுந்திருக்க வேண்டும். வாழ்க்கையே ஒரு போராட்டம். எதையும் எதிர்த்து நிற்க நாம் தைரியமுடையவர்களாக இருக்க வேண்டும். குருநாதனுடைய உபதேசங்களை அநுசரிக்க முற்படுவோம். பலம் ! பலம் வேண்டும். எழுந்து நில் ; எல்லா பலஹீனத்தையும் உதறித் தள்ளிவிடு. ஆத்மா அழிவற்றது, ஆத்மாவினிடம் பாவம் கிடையாது. யாருக்கு அஞ்சுதல் வேண்டும் ? பலத்துடன் முன் செல். அஞ்சாமல் முன்னே செல். நீ முக்தன் ; நீ அழிவற்றவன். எவரும் உன்னைப் பலஹீனன், துஷ்டன், பாவி என்று கூற விடாதே. நீ புனிதமானவன் ; பரிபூரணமானவன்.

இது ஓர் உயர்ந்த கீதம் :-

ஏ மனமே ! அவன் பாதகமலங்களில் சரணமடைந்தவிட்ட பின் பயமெங்கிருக்கும் ?

அவனோ ஸர்வ சக்தி வாய்ந்தவன் ; அவன் கருணையோ அபாரமானது.

இகழ்ந்து  கூறுவதாலும், துன்புறுத்தவதாலும், விரோதிகள் என்னசெய்யக்கூடும் ?

கடைசியாக நான் மடிய நேரலாம் ; ஆனால் அவனுடைய வெற்றிக் கீதத்தைப் பாடிக்கொண்டே நான் இறப்பேன். நான் மரணமடைய நேரிட்டாலும் சாசுவத இன்பத்தில் அவனுடன் வாழ்வேனென்ற தைரிய வாக்கியத்தைக் கேட்டிருக்கிறேன். இது அவனுடைய ஸத்திய வாக்கியம். என் ஹிருதயமென்னும் ஏகாந்தமான குடிசையில் என் நாதனான அவனை வைத்து இன்பத்திலும் ஆத்மானந்தத்திலும் இவ்வாழ்க்கையைக் கழிப்பேன்.

ஆகவே அவனுடைய பாதாரவிந்தங்களைச் சரணமாக அடைந்தப்பின் பயமில்லை ; இன்பமும் ஆனந்தமுமே நிற்கும். எவனுக்குப் பக்தியுள்ளதோ அவன் ஒருவனே அதிர்ஷடசாலி, பகவான் கூறுகிறார் : நான் வெகு சுலபமாக முக்தியளித்துவிடுவேன். ஆனால் பக்தியை நான் அங்ஙனம் அளிப்பதில்லை. பக்தியைக் கொடுப்பதால் நான் என் பக்தனுக்கு கட்டுப்பட்டவனாகிறேன். உண்மையான பக்தியைப் பெறுவது மிகக் கடினம்.. எவன் அதைப் பெற்று அமைதியுடனும் திடமாயும் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி கொடாமல் வேலை செய்கிறானோ அவன் மேன்மையானவன்.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் களைப்பும் சஞ்சலமும் மேலிட்டு நிற்கும் சமயங்கள் நேரும் ; அப்போழுது எல்லா விஷயமும் கஷ்டமாயும் மங்கியும் தோன்றும். ஆனால் இம்மாதிரி நிலைமைகளில் தைரியமாகச் செல்லாமல் எவரும் பக்குவமடைந்ததில்லை என்பதை அறி. ஆகவே நாமும் தைரியமாயும் பொறுமையுடனும் இருக்க வேண்டும். சில மூட மனிதர்கள் நினைப்பதைப்போல, உலகம் ஒரு மனோஹரமான உத்தியானவனமல்ல. அது முள் நிறைந்திருக்கிறது. அதன்மீது வெகு வெகு ஜாக்கிரதையுடன் நடந்து செல்ல வேண்டும். மோக்ஷ மார்க்கத்தில் முன் செல்ல ஜாக்கிரதையாயிருத்தல் நல்லது என்பதுமட்டுமன்று. அது அத்தியாவசியமான விஷயமாகும். நீ கண் விழித்திருக்கும் பொழுது திருடர்கள் உன் வீட்டில் நுழையமாட்டார்கள். ஆகவே விழிப்புடனும் ஜாக்கிரதையுடனும் எப்பொழுதும் இருக்க முயற்சி செய். அப்பொழுதுதான் உனது அருமையான பொக்கிஷத்தை நீ இழக்கமாட்டாய். யாவற்றிகும் மேல் உன்னிடத்திலும் உன் லக்ஷியத்திலும் தீவிரமும் உறுதியுமான நம்பிக்கையைப் பெற்றிரு.

எல்லாப் பலஹீனத்தையும் உதறி எறிந்துவிட்டு, உண்மை யென்னும் பரந்த சூரிய வெளிச்சத்திற்கு வா. பிறகு எவ்வஸ்துவும் மாறுபட்டுத் தோன்றும். இதை நினைவில் வை - எவர்பொருட்டோ நம்முடைய லக்ஷியத்தை நாம் கடைப்பிடிக்கவில்லை. எவர் பொருட்டாவது நாம் அதைவிடப்போவதுமில்லை ; நமக்கென்ற நாம் லக்ஷியத்தை அனுசரிக்கிறோம் ; நாம் உயிருடன் இருக்கும் வரை விடப்போவதில்லை ; சரியான மார்க்கத்தில் நின்று பகவானைப் பூஜிக்கும் பொருட்டுப் பலமும் ஒளியும் வேண்டுமெனப் பிரார்த்தி. அவ்வழி நடுவே இறந்தாலும் பாதகமில்லை ; ஆனால் எப்பொழுதும் பலஹீனத்தினால் நாம் அதை விட்டுவிடப் போவதில்லை.

மனத்திலும் தேகத்திலும் உயர்வு தாழ்வு இருந்துக்கொண்டுதானிருக்கும். அதனால் நாம் எவ்வழியிலும் தளர்ந்துவிடக் கூடாது; அசையாமல், திடமாய் இருக்கவேண்டும். ஸ்ரீ ராமகிருஷ்ணர் இரண்டு தொழிலாளரைப்பற்றிச் சொல்லிய உபமானக்கதையைக் கவனி. அவர்களுள் ஒருவன் கிருஷிகனாகவே பிறந்தவன். மற்றவன் சேணியன். சேணியனுக்குத்தன் தொழிலில் அதிக லாபம் கிடைக்காததால். அதிகமாய்ச்  சம்பாதிக்கும் நோக்கத்துடன் விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறான். ஆனால் ஒன்றிரண்டு வருஷங்கள் மழை பெய்யாவிடில், அவன் தைரியமிழந்து மறுபடி தன் சொந்தத் தொழிலுக்குத் திரும்பி விடுகிறான். பிறவிக் கிருஷிகனோ, மற்றத் தொழிலெதுவும் அறியாதவனாய், பன்னிரண்டு வருஷம் மழை பெய்யாவிடினும், கையில் கலப்பையுடன் தன் நிலத்திற்குச் சென்று வருவான்.

அங்ஙனமே இருவகைப் பக்தர்கள் உளர். ஒரு வகையினர் பகவதன்புடன் பிறந்து மற்றெதையும் மறந்து நிற்கின்றனர் ; மற்ற வகையினரோ அவ்வன்பை அடைய இன்னும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஆயிரம் கஷ்டங்கள் நேர்ந்தாலும், ஆயுள் முழுதும் முயற்சி செய்து பகவானை யடைய முடியாவிடினும் முதல்வகைப் பக்தன் தன் பக்தியை விடுவதில்லை. ஆனால் மற்றவனோ தன் மார்க்த்தில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும், தனது அன்பு குறைந்து மறுபடி <உலகிற்குத் திரும்பி விடுகிறான். முதல் வகைப் பக்திதான் தூய பக்தி ; அன்பின் பொருட்டுச் செலுத்தப்படும் அன்பு அதுவே. மற்றவனோ சுய நலங்களுக்காக பகவானைப் பூஜிக்கிறான் ; அவனது கோரிக்கைகள் நிறைவேறாது போயின் பக்தி மார்க்கத்திலிருந்து நழுவி விடுகிறான்.

உறுதியுள்ள மனம் அவசியமாகும். அதைப் பெறாவிடில் எவ்வித வளர்ச்சியும் அடைய முடியாது. வாழ்க்கையின் வெளி விஷயங்களில் எவ்வளவு கூடுமோ அவ்வளவு குறைவாகச் சார்ந்து நில் ; பின் உனக்கு உட்பலம் அதிகமாக வளரும். புகழ்ச்சி இகழ்ச்சிகளையும், மற்றவர் என்ன சொல்லுகின்றனர் என்ன செய்கின்றனர் என்பதையும் கவனியாதே. முன்னோக்கிச் செல், திடமாக நட. புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் நீ கலங்காமல் இரு. கீதையில் பகவான் சொல்வதை எப்பொழுதும் ஞாபகத்தில் வை. தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டுமேயன்றித் தன்னையே தான் தாழ்த்திக் கொள்ளக் கூடாது. (உன்னை முக்தனாகச் செய்து கொள்ள வேண்டுமானால் நீ என்றும் மனத்தாழ்வை அடையக்கூடாது).

எக்காலத்திலும் பலஹீனத்திற்கும் மனத் தாழ்விற்கும் நீ உட்பட்டு விடக்கூடாது. விழிப்புடனும் உறுதியுடனும் ஒரு தீர புருஷனாயிரு. நான் பலமுள்ளவன் ; நான் தூய்மையுடையவன். நான் புனிதமானவன் என்று எழுந்து நின்று தைரியத்துடன் உச்சரி. எல்லாப் பலக் குறைவும் உடனே அற்றுப் போகும். எல்லா நிர்ப்பந்தங்களும் மறைந்து விடும். நீ ஆனந்தமயனாய், சாந்தியுடையவனாய், சுகமுள்ளவனாய் ஆகி விடுவாய். உனக்கு வெளியிலிருந்து எதையும் எதிர்பாராதே ! உனது எல்லா எண்ணங்களையும் உட்செலுத்தி, பகவானை உன்னுள்ளே பார். உன் இஷ்ட தேவனை உன் ஹிருதயமான பலி பீடத்தில் இருத்தி, இரவும் பகலும் போற்று. இவ்வாழ்க்கையில் செய்யக்கூடிய விஷயங்களில் இதுவே மேன்மையானது.

உலக விஷயங்களில் உண்மைச்சுகம் கிடையாது. உலகில் எதுவும் நித்யமாயில்லாதிருக்கையில் அதில் எங்ஙனம் சுகம் இருக்கக்கூடும்? இன்பம் அநித்யம் ; துன்பமும் அவ்விதமே. அவைகள் வருகின்றன, போகின்றன. நிலைத்து நில்லா. ஆகவே அவைகள் கொஞ்ச தினங்களுக்குத் தானாதலின் சகித்துக்கொண்டிரு. இன்பதுன்பம் இரண்டிலும் கலங்காது நிற்பவனே தீர புருஷன். பொறுமை யாவற்றையும் வெற்றிகொள்ளும். திட நம்பிக்கையுடன் தீர சிப்பாய்கள் போல நாமும் நிற்க வேண்டும். சரீரம் வெகு நாள் நிற்கப்போவதில்லை. ஆனால் ஆத்மா எந்நாளும் நிற்கும். நம் இயற்கை குணங்கள் வெகுநாள் நிற்கும். ஆகவே உனது இயற்கையை யமைப்பதைப்பற்றி அதிக கவனம் செலுத்து.

நீ புனிதமானவன் ; சுதந்திர முடையவன் ; பலஹீனம் <உனக்குத் தகுதில்ல, உன்னிடம் நம்பிக்கை கொள். உன் இருக்கையின் ஒவ்வொரு அணுவையும் ஆதிக்யம் கொள்ளும்படி அவ்வளவு நம்பிக்கையுடனிரு, சந்தேகத்தைக் கொண்ட எவனும் தன் முடிவை அடைய முடியாது. தன்னிடந்தானே நம்பிக்கை கொள்ளாதவன் ஒரு நாஸ்திகனாவான் என்கிறார் ஸ்ரீ விவேகானந்த சுவாமிகள், முதலில் உன்னிடம் உனக்கு நம்பிக்கை யில்லாவிடின், உனக்குப் பகவானிடமும் நம்பிக்கையிருக்காது என அறி.

நம் நாதன் நம்மை என்ன செய்ய விரும்புகிறான் என்பதை நாம் அறிந்து கொள்ளாமலிருக்கலாம். ஆனால் அவனுடைய குழந்தைகளாகிய நம்மைக் காப்பாற்றி வழி காட்டுவான் என்பதை நிச்சயமாக நம்பலாம். நமக்கு வேண்டியது அவ்வளவே. உலகம் அனைத்தும் நமக்கெதிராக நிற்கட்டும் ; நாம் அதைக் கவனிக்கக்கூடாது. நாம் தைரியமுள்ள சேனாவீரராக, உண்மையான நம்பத்தக்க வீரராக இருக்கவேண்டும். கர்ம மார்க்கம் மிகக் கோணலானது ; ஆனால் உயர்ந்த தியாகம் செய்யாமல் எந்தப் பெரிய காரியமும் நடைபெற்றதில்லை.

விழித்து எழுந்து இவ்வெளியுலகிலிருந்து திரும்பிச் செல். உனக்குள்ளேயே இன்னும் ஆழ்ந்து மூழ்கு. அங்கு உண்மையான சாந்தியும் அமைதியும் பெறுவாய். உனக்குள்ளேயன்றி வேறெங்கும் சாந்தி ஏற்படாதென்பதை அறி. நாமே சாந்தியைப் பெற்றாலன்றி எவ்விடத்திலும் நமக்குச் சாந்தி ஏற்படாது. ஆகவே அந்தச் சாந்தியை உன்னுள்ளே பெறுவதற்கு முயற்சி செய் ; அப்பொழுது நீ முக்தனாய் விடுவாய் ; <உன் அமைதியை வெளிக்கஷ்டமெதுவும் அழிக்க முடியாது. பயப்படாதே. <உன்னுள்ளேயே நம்பிக்கை கொள். எப்போதும் மேல் நோக்கிச் செல் ! உண்மைக்காகப் போராடித் தீர புருஷனையொத்து மரண மடைவாயாக. இது உன் ஆத்மாவிற்குச் சாந்தியை யளிக்கும்.

4. பயமின்மை

திட புத்தியுடனும், தூய்மையான லக்ஷியத்துடனும் பயமின்றி நின்றால், எவரும் உன்னை உன் பாதையினின்றும் அகற்ற முடியாது. சில மனிதர் அதைக் கெடுதலெனக் கூ<றுவதாலும், நமக்கு விரோதமாக எதிர்ப்பதாலும் நமது தூய்மையான லக்ஷியத்தினின்றும் நாம் ஏன் நழுவ வேண்டும் ? கூடாது ! அங்ஙனம் விரோதமாக இருந்தாலும், நாம் அசையாது நின்று நம் லக்ஷியத்திற்கு உழைக்க வேண்டும். இதற்குப் பலமும், தீர்மான புத்தியும் நம்மிடம் வேண்டும். யாவும் கரடு முரடின்றி ஒழுங்காகச் செல்லும் சமயத்தில் எவரும் தீர புருஷராக இருக்கலாம். ஆனால் உலக முழுவதும் தனக்கு விரோதமாகச் செல்லும் காலத்திலும் தன் நிலையில் உறுதியுடன் நிற்பவனே உண்மையான தீர புருஷன். இது வாழ்க்கையின் சோதனையாகும்.

ஒரு பக்குவமான குணத்தை யமைக்க அனேக விஷயங்கள் வேண்டும். நன்மை, தீமை ; இன்பம், துன்பம் ; சுகம், துக்கம் - இவைகளின் மூலம் நாம் செல்ல வேண்டும். எப்பொழுது இன்பத்தாலும் துன்பத்தாலும் கலைக்கப்படாமலிருக்கிறோமோ, அப்பொழுது பரிபூரண தசையை அடையத்து விட்டோம். பின்பு வெளியுலகில் நமக்கு எந்தப் பயமும் கிடையாது.

உலகில் என்ன இருக்கிறது ? உண்மையான சுகம் இங்கில்லை என்பது நமக்குத் தெரியும். இவ்வளவு அநித்யமாயிருக்கும் பொழுது சுகம் இங்கு எப்படி இருக்க முடியும் ? கவலை கொள்ளாதே ; இந்த ஜன்மத்தில் பகவத் தரிசனம் கிடைக்காது போயினும், விஷமெனக் கருதித் துறந்து விட்ட தரித்திர உலகிற்கு மிகுந்த பலம் உண்டாகும். இந்த உலகத்தைத் துறந்த ஒருவன் - அதாவது தனது இயற்கையிலிருந்து இவ்வுலக சம்பந்தத்தையே வாந்தி யெடுத்து வெளியில் தள்ளிவிட்ட ஒருவன், இந்த ஆபாச வஸ்துவை மறுபடி ருசிபார்க்க இஷ்டப்பட்டால், அவன் எவ்வளவு முட்டாளாக, மதியீனனாக, மானமற்றவனாகக் கருதப்படவேண்டும் ! புனிதமான வாழ்க்கை வாழ்வதில் ஒரு இன்பம் இருக்கிறது. அது வேறெவ்வழியிலும் நமக்குக் கிடையாது.

தைரியங்கொண்டு அபாரமான பொறுமையைப் பெற்றிடு ! பொறுமை எதையும் வெற்றி கொண்டுவிடும். அபூர்வமான திடப் புத்தியுடன் தைரியமாக, நான் உண்மையான வாழ்க்கையை வாழவேண்டும் என்று சொல். உனது பலத்தைக் காண்பித்து உலகத்தை நோக்கிப் பயமின்றி, கர்வம் பிடித்த <உலகமே, தூரச் செல். நீ எனக்குத் தேவையில்லை. உனது உதவியை நான் விரும்பவில்லை என்று கூவு. உனது பலமனைத்தையும் ஒருங்குசேர்த்துக் கொண்டு திரும்ப திரும்ப நான் பலவான், நான் தூய்மையானவன், நான் ஸத்தியமானவன் என்று உச்சரி. பின்பு அவித்தை என்னும் மேகங்கள் எவ்வளவு சீக்கிரமாகக் கலைந்து மறைகின்றன என்றும், எவ்வளவு சீக்கிரமாக உன் ஹிருதயம் பகவத்பக்தியாலும் ஒளியாலும் நிரப்பப்படுகிறது என்பதையும் நீயே காண்பாய்.

பயம் ! யாரிடம் பயமடைய வேண்டும் ? நாம் பயமடைவதற்கு என்ன இருக்கிறது ? நம்முடைய விரோதிக்கு நம் முதுகையா காட்டப்போகிறோம் ? கூடாது. ஒருபொழுதும் கூடாது. துன்ப வாழ்வு வாழ்வதைவிட யுத்த களத்தில் உத்தம வீரர்களாக மடிவோம். ஞானமென்னும் கத்தியையும், தூய்மையென்னும் கவசத்தையும் பெற்றவனே தைரியமாக நின்று யுத்தம் செய்யக்கூடும்.

சுயநல ஆசைகளைப் பூர்த்திசெய்ய விரும்பும் இயல்புடையவர்களுக்குத் துறவு வாழ்க்கை கடினமாகத்தான் இருக்கும் ; அவ்வித ஆசைகளற்றுவிடின் உத்தமமான இன்பமும் சாந்தியும் நமக்குக் கிடைக்கும், <உலகத்தைத் துறப்பதால் உண்மையாகவே ஒரு சுகம் உண்டு, யாவற்றையும் துறந்து விட்டுச் சுதந்திரனாக இரு. நாம் சார்ந்து நிற்கக்கூடிய வஸ்து ஏதாவது இருக்கும் வரை நாம் சுதந்திரராக முடியாது. வெளியுலகிலிருந்து எவ்வுதவியையும் எதிர்பாராமல் நின்று, நம்முள்ளிருந்தே அனைத்தையும் பெற்று, நம்மிடமே திருப்தியடைந்து இருக்கும் பொழுதுதான் சுதந்திரம் நமக்குக் கிடைக்கும். இந்திரிய சுகங்களில் என்ன நன்மை உண்டு ? துக்கத்தையும் அந்தகாரத்தையுமே அவைகள் விளைவிக்கின்றன. ஒரு க்ஷணகால இந்திரிய சுகம் ஒர் ஆயுள் முழுவதுங்கூட துக்கத்தை அளிக்கிறது. முடிவில் கஷ்டத்தை யுண்டுபண்ணும் அந்த க்ஷணகால இன்பத்தினால் என்ன பயன் ? ஆயுள் முழுவதும் போராடி ஸத்யதரிசனம் கிஞ்சித்தும் கிடைக்காமற்போயினும் அந்த சுகங்களையடைய விரும்புவது நல்லதல்ல.

தன்னடக்கம் குறைந்த பக்ஷம் நமக்கு அதிக சுதந்திரத்தையாவது கொடுக்கும். இந்த ஜன்மத்தில் பகவானை அடைந்தாலும் அடையாவிட்டாலும் கவனியாதே ; ஆனால் அடிமைகள் மாதிரி நாம் வாழ வேண்டுமென்றாவது, அல்லது உலகைத் துறக்காமல் குருட்டுத்தனமாக நமது சுயநல ஆசைகளைத் தொடர்ந்துசென்று நம்மைச் சுற்றிலும் இன்னும் அதிகமான கட்டுகளை உண்டுபண்ண வேண்டு மென்றாவது சொல்லக் காரணமில்லை. நம் ஆசைகளைப் பூர்த்திசெய்ய முயற்சி பண்ணப்பண்ண அவைகள் இன்னும் பலத்தைப் பெறுகின்றன ; அக்னியில் நெய்யை விட்டால் ஜ்வாலை விருத்தியாவதைப்போல அவைகளும் வளர்க்கின்றன. உலகம் துக்கம் நிறைந்த இடம் என்பதை நாம் அறிவோம் ; அதனால் மறுபடி ஏன் மயக்கப்பட வேண்டும் ? கூடாது. அங்கு திரும்பிப் போவதைப் பற்றிய எண்ணமே கொள்ளக் கூடாது. இம்மாதிரியான தீர்மான புத்தியே நமக்கு வேண்டும். துறந்து விடுவது என்றால் பின்னர் திரும்பவும் செல்லாதவண்ணம் விட்டுவிடுவதுதான்.

பலம் அவசியம் ; உறுதி அவசியம். பலமிருந்தால் யாவும் அடங்கிவிம். தன்னலங்கருதாத குணங்களைக் கொண்டவனிடம் தேவர்களும் அஞ்சுகின்றனர். தூய்மையான குணங்களின் பலம் அபாரமானது. ஆகவே தைரியமாய் இரு ! யாருக்கும் பயப்படாமல் முன்னே செல். நான் ஸத்யமான வஸ்து, தூய்மையானவன், பலமுள்ளவன் என்று சொல்லுவதற்குக் கற்றுக் கொள் ; அப்பொழுது சற்றும் பயமற்றவனாய் விடுவாய். சுயநலம் கருதுவதால்தான் பயம் உண்டாகிறது. ஆகவே முழுமையும் சுயநலமற்றவனாக ஆய்விடு. தைரியத்தைக் கொள் ! தைரியத்தைக் கொள் ! தைரியத்தைக் கொள் ! பலஹீன மாந்தரால் உண்மையை ஒருக்காலும் அடைய முடியாது. நீ கண்டது, கேட்டது, கற்றது  யாவற்றினுடைய ஸாரத்தையும் எடுத்து உன் வாழ்கையிலேயே அதை அனுபவித்தறிய முயற்சி செய். உலகம் முழுவதும் உனக்கு எதிராக நிற்கட்டும் ; உன்னுடைய இலக்ஷியத்தை மட்டும் நழுவ விடாதே.

தோல்வியுற்ற வாழ்வு வாழ்வதைக் காட்டிலும், யுத்தத்தில் உயிர் துறப்பது மேலாகும். ஆயுள் உள்ளவரை நம்முடைய விரோதிகளுடன் தைரியமாகவே போர் புரிய வேண்டும். நம்முடைய விரோதி எவனும் வெளியில் இல்லை. நம்முள்ளிருக்கும் ஆசைகளே உண்மையான சத்துருக்கள். ஆதலால் அவைகளை வெற்றிகொள் ! நீ முக்தனாய் விடுவாய். பலம், பொறுமை - இவை இரண்டையும் பெறு. ஸத்யத்திற்காக வாழாத வாழ்கையினால் யாது பயன் ? தைரியமாய், பயமின்றி ஒவ்வொரு வஸ்துவையும் தூய்மை என்பதன் மூலம் நோக்கு. வாழ்கை என்பது ஓர் இடைவிடாத போராட்டம் ; இங்கு இளைப்பாறு மிடத்தை எதிர்பார்க்கக்கூடாது. முன்னே நடந்து செல். பலஹீனத்திற்கும் மனத்தளர்ச்சிக்கும் இடங்கொடுத்து விடாதே. கஷ்டம் நன்மையை விளைவிக்கக் கூடியது ; அது ஒரு பெரிய குருவாகும்.

கீதையில் பகவான் கூறுவதை என்றும் ஞாபகத்தில் வை. ஆரம்பத்தில் விஷத்தை யொத்திருந்தும் முடிவில் அமிருதத்தை யொத்துள்ள இன்பம், ஸாத்விக குணத்தைப் பெற்றது ; அது தூய்மையான ஆத்ம ஞானத்தினால் உண்டாவது ; ஆனால் ஆரம்பத்தில் அமிருதம் போலிருந்து முடிவில் விஷமாகமாறும் சுகம் இந்திரியங்களுக்கும் இந்திரிய விஷயங்களுக்கும் உள்ள சம்பந்தத்தால் உண்டாவது ; அது காமமோகங்களான ராஜஸ குணங்களிலிருந்து உண்டாவது. பகுத்தறிவு என்னும் சக்தியை நாம் உபயோகித்து நன்மையினின்றும் தீமையைப் பிரித்து விடவேண்டும். நம்முடைய ஆசைகளின் வழியே செல்வது வெகு சுலபமான காரியம் ; ஆனால் விவேக சக்தியை உபயோகித்து அவைகளைக் கடப்பவனே உண்மையான தீர புருஷன்.

பலமின்மை மரணத்துக்குச் சமம். பலம் ஒன்றே மதம் ; பலமே உண்மையென்று என்னுடைய அனுபவமே காட்டியிருக்கிறது. நம்மைப் பலஹீனமாகச் செய்யும் எதுவும் பாவமான காரியமாகும். நம்முடைய முழுசக்தியுடன் அதை அகற்றிவிட வேண்டும். நாம் தவறுகள் செய்வது அறிவைப் பெறும் பொருட்டுதான். ஆனால் ஒரு தடவை அந்த அறிவைப் பெற்றபின், தீர்மானத்துடன் வேலை செய்து பலஹீனத்திற் குட்படாதிருத்தல் வேண்டும். இதுவே கர்மங்களில் உயர்ந்த கர்மம். இதுவே யோகங்களனைத்திலும் சிறந்தது. எல்லாத் துர்பல ஆசைகளையும் வெற்றி கொண்டு நமக்கு நாமே யஜமான்களாக ஆகும்வரை எங்ஙனம் நாம் இளைப்பாற முடியும் ? நம்முடைய இந்திரியங்குளுக்கு இன்னும் கீழ்ப்படிவோமோ ? நாம் இனியும் அங்ஙனம் செய்யோம், <உலகானுபவம் சற்றுப்  பெறும் பொருட்டுக் குழந்தைகளான மனிதர்கள் அதைச் செய்யட்டும். ஆனால் இனி அவைகட்கு வணங்கி நில்லோம். நம் இஷ்டப்படி  அவைகளை ஆக்ஞாபிக்க வேண்டும். நமக்கு நாமே யஜமான்களானபின் நமக்குப் பந்தங்கள் இல்லை. பயமும் கிடையாது ! சாந்தியும் ஆனந்தமுமே மிகுந்து நிற்கும். இனி வீண் வார்த்தையும், ஏட்டுப் படிப்பும், வாய்பேச்சும் வேண்டாம் ; இருந்து ஆகி வாழ வேண்டிய காலம் வந்துவிட்டது. முன்னால் நட ! உலகம் தன்னுடைய விஷயங்களில் வெகு சுறுசுறுப்பாக இருந்து கொள்ளட்டும் ; ஆனால் நாம் அதைக் கண்ணெடுத்துக் கூடப் பாராமல் திடமாக நடந்து செல்வோம்.

எவ்விஷயத்தைக் குறித்தும்  நம்மனதைச் சஞ்சலத்துக் குட்படுத்த நமக்கு உரிமை கிடையாது. விஷயங்கள் யாவும் தம்மைத் தாமே கவனித்துக் கொள்ளும். கர்மம் செய்யத்தான் நமக்கு அதிகாரமேயன்றி, அதன் பலன்களில் நமக்கு அதிகாரம் கிடையாது. கர்மம் என்பது நம்முடைய இயற்கைக் குணங்களை அமைத்துக் கொள்வதே யாகும். அதை நாம் செய்ய முற்படுவோம் ; வீண்பேச்சில் நமது சக்தியைச் செலவழித்துவிட வேண்டாம். அவதார புருஷர்கள் கேவலம் வார்த்தைகளால் மட்டும் உபதேசம் செய்யவில்லை ; தங்கள் பக்குவ இயற்கையின் சக்தியினால்தான் உபதேசம் செய்தனர். அவர்கள் மாதிரி நாமும் இயற்கையை அமைத்துக் கொண்டாலன்றி நம்மால் எதுவும் செய்ய முடியாதென்பதை அறி. ஒரு யாசகன் மற்றொரு யாசகனுக்கு உதவி செய்ய முடியாது. பிறருக்குக் கொடுக்க வேண்டுமானால் ஏதாவது கொஞ்சம் சம்பாதித்துக் கொள் ; பின்பு பிறருக்கு உதவி செய்ய உன்னால் முடியும்.

பயமும் துக்கமும் சிறிதுமின்றித் திடமாக வேலை செய். தன் குழந்தைகளைப் பற்றிப் பகவான் கவலையெடுத்துக்கொள்ளுவார். நம்முடைய கடமை யெல்லாம், வேலை செய்து பின் மடிவதே ! நியாயமானதைச் செய் பலமளிப்பதைச் செய். தூய்மையளிப்பதைச் செய். உயர்ந்த நோக்கத்தைக் கொள். அமைதியுடன் உயிர் துற. பெரிய விஷயங்களைப் பேசுவதில் பயன் இல்லை. உலகம் உன்னை அங்கீகரிக்காமலிருக்கலாம். அதைப்பற்றி அக்கறையில்லை. உன்னுடைய குணமே உன்னை ஆனந்தமாகவும் இருக்கச் செய்யும்.

பகவானது மனத்திலிருப்பது அவருக்குத் தான் தெரியும். அவரை நம்பி நின்றால், எல்லா உபாதிகளிலும் திடமாக நிற்கப் போதிய பலத்தை நமக்கு அவர் தருவார். நன்மை, தீமை ; இன்பம், துன்பம் ; புகழ்ச்சி, இகழ்ச்சி - எதுவும் நம்மைப் பாதிக்காது. சுவர்க்கத்திலிருந்தாலும், நரகத்தி லிருந்தாலும் நமக்கு வித்தியாசம் எதுவும் தோன்றாது. விடுதலை யடைந்தவன் தனக்குத்தானே யஜமானனாகியுள்ளவன். நரகத்திலும் அவன் அங்ஙனமே இருப்பான். ஆதலால் துன்பம் வந்த காலையில் கவலை கொள்ளாமல், இன்னும் மாசற்ற தன்மையுடன் பிரார்த்திக்க வேண்டும். அவ்வளவு செய்யவே நமக்குள்ளது உரிமை. பகவானுடைய நாமத்தைச் செல்லிக் கொண்டு தன்னலங் கருதாத தூய வாழ்கை வாழலாம். பலன்களைப் பற்றி உனக்கு அதிகாரம் கிடையாது.

உலக விஷயம் வேறு, கடவுள் வேறு. ஆதலின், லௌகிக நோக்கத்தோடு பகவானுடைய வழியைப் பற்றி மதித்தல் கூடாது. பெரியோர், அவதார புருஷர்கள், உலகில் நன்கு மதிக்கப்படவில்லை என்பதை நாம் நன்றாய் அறிவோம். வெகு சிலரே அவர்களுடைய மகிமையை அறிந்து மதித்தனர் ; இச்சிலரும் உலகத்தைத் துறந்து உலகத்தால் இகழ்ச்சியெய்தினவரேயாவார். உலகமும் கடவுளும் உடனுடன் இருக்க முடியாது. அது சிறிதும் முடியாத காரியம். பகவானை பூஜிக்கவேண்டுமானால், நாம் உலக சுகங்கள், புகழ், கீர்த்தி, பெயர் யாவற்றையும் விட்டுவிட வேண்டும். மோக்ஷ சாதனத்திற்காக முயற்சிசெய்து கொண்டிருக்கும் ஜீவனுக்கு இவைகள் விஷத்தை யொத்தவை என்பதை அறி. குழந்தாய், நீ பந்தத்திலிருந்து விடுபட விரும்பினால், லௌகிக எண்ணங்களையே விட்டுவிட்டு, விஷம் நிறைந்த கிண்ணத்தை கண்டு ஒருவன் நடுங்கி, அமிருதத்தைப் பானம் செய்ய ஆனந்தமுடையவனாவது போல் நீயும் இந்திரிய விஷயங்களை விஷமாகக் கருதி அவைகளினின்றும் ஓடிவிடு; ஆனால் பொறுமை, ஆடம்பரமின்மை, திருப்தி, தயை, சத்யம், இவைகளே மோக்ஷமார்க்கமென அறிந்து அவைகளை அமிருதமாகக் கருது.

சந்நியாசியினுடைய வாழ்க்கை மிகமிகக் கட்டுப்பாடுடையது, சந்நியாசத்தை அப்பியசித்துக் கொண்டிருப்பவனுக்கு லௌகிக மனிதனைப் பார்ப்பதுகூடத் தீமையாகும், லௌகிக விஷயங்களை எடுத்து நிற்கப் போதிய பலம் நமக்கு இருக்கிற தென்று நாம் நினைக்கலாம் ; ஆனால் படிப்படியாய், காலக்கிரமத்தில், நமக்குத் தெரியாமலே நம்முடைய இயற்கையில் <உலகம் புகுந்து விடுகிறது ; நம்முடைய வாழ்க்கையயும் வீணாக்கி விடுகிறது. நம்முடைய இந்திரியங்கள் கொடிய திருடர்கள் போன்றவை ; நாம் அஜாக்கிரதையாய் இருக்கும் சமயத்தைத் தேடிக் கொண்டேயிருக்கின்றன. ஆதலால் மோக்ஷமார்க்க நிலையில் எப்பொழுதும் விழிப்புடனிரு  ; அப்பொழுது திருடர்களிடமிருந்து உனக்குப் பயம் இல்லை. நீ விழித்திருக்கும் பொழுது அவர்கள் திருடமுடியாது.

நம்முடைய சரீரத்தில் பிராணன் இருக்கும் வரை நம்முடைய இலக்ஷியத்தைத் தூய்மையான தன்னலமற்ற அன்புடன் தொழுவதற்கு நாம் போராட வேண்டும். பிறர் என்ன கூறுகின்றனரென்பதைக் கவனியாதே. எல்லையற்ற பலம் நமக்குப்பின் இருக்கிறது. ஜகன்மாதாவினுடைய குழந்தைகளாவோம் நாம் ; இங்கேதான் நமது பலமனைத்தும் உள்ளது. நாம் தைரியமாக வாழ்ந்து தைரியமாக வேலை செய்து, தைரியமாக மடிய வேண்டும். பயம்தான் பலஹீனம் ; பயம்தான் பெரும் பாவம். அத்தடன் நமக்கு எந்தச் சம்பந்தமும் கூடாது. உன்னுள்ளிருக்கும் அசுத்தங்களனைத்தையும் உதறி எறிந்து விட்டு, நான் புனித மானவன், நான் பந்தமற்றவன் என்று சொல். எனக்குப் பாவமில்லை. மரணமில்லை, பயமுமில்லை ; சிவோஹம் ! சிவோஹம் ! நான் கடவுளின் புத்திரன் ; நான் அழிவற்றவன். அழிவற்ற தந்தைக்கும் அழிவற்ற புத்திரனுக்கும் வித்தியாசமெதுவும் இல்லை. இருவரும் ஒன்றேயன்றி வேறல்ல என்று சொல். பலம் ! பலம் ! ! பலமொன்றே அவசியம், பலஹீனனெவனும் மோக்ஷமடைய முடியாது. ஆதலால், பலத்துடன் நின்று பலமின்மையைத் தூரத்தள்ளு. நான் பாபமற்றவன், நான் ஆனந்தமானவன், நான் முக்தன் என்றே இரவும் பகலும் சொல்லிக்கொண்டிரு ; இதையே இரவும் பகலும் நினைத்துக் கொண்டிரு.

உலகத்துள் மாறாத நாதனையுள்ள பகவான், மனிதர்களின் நன்மையை உத்தேசித்து வெவ்வேறு உருவங்களில் அடிக்கடி அவதரிக்கும் பகவான், நாம் யாவரும் அவருள்ளேயே வாழும் வண்ணம் நமக்குப் பலத்தையும், உறுதியையும், தூய்மையையும், பயமின்மையையும் அளிப்பாராக !

5. சரணாகதி

உண்மையான பக்தனோ தெய்வ சக்தியே, தன்னுள் இருந்து அனைத்து வேலைகளையும் செய்கிறது என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறான். அதுவன்றி அவன் வேறெதுவுமில்லை. அந்த தெய்வீக சக்தியை காட்டிலும் அவன் வேறெதுவுமாக இருக்க அவன் விரும்பவில்லை. ஜெகன் மாதாவே தன்னுள் இருந்து அனைத்து வேலைகளையும் செய்கிறாள் என்பதை அவன் நன்கு அறிந்து, அவன் எக்காரியத்திற்கும் கீர்த்தியையாவது, அபகீர்த்தியையாவது தான் கொள்வதில்லை. அவளை நாம் மறந்து விடாதவரையில் யாவும் சரியாகவே இருக்கும். அஹங்காரமே அம்பிகையை மறக்கச் செய்வது. அதுவே நமக்கு முதல் எதிரி. அதை நாம் மனதால் போரிட்டு அழிக்க வேண்டும். ஜகன் மாதாவினுடைய கைகளில் நாம் ஒரு கருவியாக இருந்து, அவளுடைய குழந்தைகளுக்கு சிறிது சேவை செய்ய வேண்டுமென பிரார்த்தனை செய்வோம். அப்படியில்லாமல் போனால், இவ்வுலக வாழ்க்கைக்கு மதிப்பு ஏதும் இல்லை. உண்மையாகவும், தூய்மையாகவும் வாழ்ந்து, அவளது குழந்தைகளுக்கு முடிந்தவரை சேவை செய்ய மட்டும் நமக்கு அதிகாரமுள்ளது.

சில சமயம் இவ்வித வாழ்க்கையில் தவிரத்துக் கொள்ளக்கூடாத கஷ்டங்கள் ஏற்படலாம். ஆனால் இவ்வுலகில் எதுவும் நீடித்திருப்பதில்லை. கஷ்டங்கள் விலகி மறுபடியும் சுகம் ஏற்படும். ஆகையினால் எந்தக்கஷ்டம் வந்தாலும், மலையைப்போல் உறுதியாக நாம் நிற்க வேண்டும்.எது வந்தாலும் வரட்டும். எது போனாலும் போகட்டும். நீ எப்போதும் அசையாமல் நிற்க முயற்சி செய். தைரியமாக நின்று சத்தியத்தை நேருக்கு நேராக பார். உனக்கு ஒரு லட்சியம் உண்டானால் அதை அறிந்த அனுபவிக்க உனது ஆயுளையே அளித்துவிடு. நமது லட்சியத்திற்காக நாம் உயிரையும் தியாகம் செய்ய வேண்டும்.  நமது லட்சியமான பகவானை வழிபட அந்த ஒரே வழிதான் உண்டு. பலஹீனத்தினாலும், யதார்த்த குணமின்மையினாலும் பகவானை வழிபட இயலாது. உண்மையான அன்பினாலும் பலத்தினாலுமே பகவானை நாம் உண்மையாக பூஜை செய்யலாம்.

முன்னோக்கி செல். பிறருக்கு என்ன நேரிடுகிறதோ, என்று திரும்பிப்பார்க்காதே. இந்த நேரத்தில் என்னைப்போல் ஆயிரம் பேர் இறக்கலாம். இதனால் இந்த மாபெரும் உலகத்திற்கு எந்தவித நஷ்டமும் ஏற்படப்போவதில்லை. உண்மை அழிவற்றது. அது என்றும் பிரகாசித்து நிற்கும். உண்மையை போற்றி அதற்கே உயிரையும் அளித்துவிடு. முன் ஜென்மங்களின் எண்ணங்கள், கர்மங்கள் ஆகிய இவற்றினுடைய பலனே இந்த ஜன்மம் என்பதை அறிந்து கொள். ஆனாலும் இப்போது நாம் வாழும் வாழ்க்கையை அனுசரித்தே இனிவரும் வாழ்க்கை இருக்கப்போகிறது.  எனவே வருங்காலம் என்பது நமது வாழ்க்கையிலேயே அமைந்திருக்கிறது. எனவே போன ஜென்மத்தில் நாம் என்ன பாவங்கள் செய்திருந்தாலும், அது நாம் இந்த ஜென்மத்தில் செய்யக்கூடிய நற்செயல்களால் அழிந்து போகும்.

நமது இலட்சியமான பகவானுடைய திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்டதை நம்முடைய சொந்த சுகத்திற்காகவும், திருப்திக்காகவும் உபயோகப்படுத்திக் கொள்ளும் உரிமை நமக்கு கிடையாது. கடவுளுடைய திருப்பணிக்கென்று உடல், பொருள், ஆவி இம்மூன்றையும் தத்தம் செய்தவன் தன்னுடைய சொந்த வேலையை நினைக்க கூடாது. பகவனாது கட்டளைக்குட்பட்டு தனது சொந்த விருப்பு, வெறுப்புகளை விட வேண்டும். இதுவே உண்மையான சரணாகதி ஆகும். நமது தேவைக்காக மட்டும் இறைவனை வணங்குவது கூடாது. இது உண்மையான சரணாகதி பக்தி ஆகாது. இந்த குணத்தை நீக்க வேண்டும். அனவைருக்காகவும், பொது நலத்திற்காகவும் பிரார்த்தனை செய்யும் சன்னியாசியைப்போல் இருக்கும் எண்ணம் வேண்டும். எப்போதும் எதற்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதற்காகன புத்தியையும் தைரியத்தையும் இறைவனிடம் பெற வேண்டும்.

சன்னியாச மார்க்கம் மிகவும் கடுமையானது. பகவனாது பாதத்தில் முழுவதுமாக சரணாகதி ஆவதும் கஷ்டமே. ஆனால் ஞானம் விருத்தியாக வேண்டுமானால் சரணாகதி அடைந்து தான் ஆகவேண்டும். தனது குருவின் கட்டளைப்படி, ஏனென்று கூட கேட்காமல், பீரங்கியின் வாய்முன்னும், புலியின் முன்னால் போய் நிற்பதற்கும் கூட  சீடன் தயாராக இருக்க வேண்டும். இதுவே உண்மையான பக்தியாகும்.

இகலோக விஷயங்களில் பற்றில்லாமல் இருப்பது மற்றொரு அவசியமான விஷயமாகும்.  எதற்கும் ஆசைப்படக்கூடாது. எவன் ஒருவன் தன் உடலை விட்டு பிரியும் முன் ஆசை போன்றவற்றை எதிர்த்து நின்று போராடி இங்கேயே விட்டு விட்டு செல்ல வேண்டும். அவ்வாறு செய்பவனே பாக்கியவான். இதை அனுபவ பூர்வமாக செய்ய வேண்டும். இதனால் முக்தி கிடைக்கும். நமக்கு ஏற்படும் அகங்காரத்தை அடியோடு விலக்கி," நான் ஒரு புல்லுக்கும் கீழானவன் என கூற வேண்டும். இதனால்
தனது அசுத்தங்கள் எல்லாம் நீங்கி, புனிதனாகி விடுவாய். அப்போது தான், இறைவனின் நாமத்தை கிரகித்துக்கொள்ள அதிகாரமுடையவனாவாய். நாம் வழிபடும் இறைவனுக்கும் நமக்கும் இடையில் அகங்காரம் இருக்கவே கூடாது. அப்படி இருந்தாலும், "நாஹம், த்வமேவ என்று அடிக்கடி கூற வேண்டும். இதன் அர்த்தம் என்னவென்றால், நானல்ல நானல்ல தாயே, சகலமும் நீயே என கூற வேண்டும். இப்படி கூறினால் நமது அகங்காரம் முழுவதும் அழிந்து விடும். உனது உத்தமமான பலத்தை கொண்டு, எல்லா பலஹீனத்தையும் அழித்து விடு. பலஹீனமான ஒருவனால் இறைவனை அடைய முடியாது என்பதை உணர வேண்டும்.

ஆகவே பலஹீனத்தை ஜெயித்து விடுவோம். நாம் பலஹீனமாயிருக்கும் சமயத்தில் ஜனங்கள் நம்மை ஏமாற்றி விடுகின்றனர். நம்முடைய தன்மதிப்பையும், கவுரவத்தையும் காப்பாற்றும் வழியை நாம் அறிய வேண்டும். அதுவும் நாம் உலக மாந்தரிடையே இருக்கும் பொழுது இன்னும் கவனமாக இருக்க வேண்டும். துஷ்டர்களிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள அவர்களை சீறி பயமுறுத்த வேண்டும். ஆனால் அவர்களுக்கு தீங்கு செய்ய முற்படக்கூடாது. அவர்களுக்கு தீங்கு செய்ய முயற்சித்தால், அவர்களது நிலைக்கே நாமும் வந்து விடுகிறோம். இதனால் நமக்கே நாம் பெருந்தீங்கை விளைவித்து கொள்கிறோம். நமது லட்சியத்திலிருந்து தவறாதிருக்கும்படி, சில நேரங்களில் சீறிப்பாய்ந்து எதிர்ப்பது போல் பாவனை செய்ய வேண்டும். ஆனால் எப்போதும் எவருக்கும்  தீங்கிழைக்க வேண்டும் என்ற நினைப்பு கூட வரக்கூடாது.

உன் பக்தி விசுவாசத்தால் பாறையைப்போல் உறுதியாக நில். ஜகன் மாதா உன் கரங்களை பிடித்து கொள்ளட்டும். அவளது கரங்களை நாம் பிடித்தால், சில நேரங்களில் நம் பிடி தளர்ந்து விடுமோ என்ற பயம் ஏற்படும். ஆனால் அம்பாள் நமது கரங்களை பிடித்து கொண்டால், நாம் கீழே விழுவோம் என்ற பயமே கிடையாது. எனவே அம்பாளின்  திவ்விய சித்தத்தில் தீவிர நம்பிக்கை வைத்து, அபாயம் ஒன்றும் ஏற்படாதபடி பார்த்து கொள்ள வேண்டும். அவளைத்தவிர வேறு எந்த விஷயத்தையும் உனது இதயத்தில் குடி கொள்ள விடாதே. தேவையில்லாத நினைப்பு, பயம், கவலை ஆகிய எதனாலும் மனத்தளரச்சி அடையாதே. பரமேஸ்வரியால் ஆகாத காரியம் எதுவும் இல்லை என்பதை தெரிந்து கொள். உறுதியான விசுவாசத்தை பெற்று பயமற்றவானக வாழ்ந்திரு.

அம்பிகையின் திருவுள்ளத்தின்படியே அனைத்தும் நடக்கட்டும். அப்பொழுது தான் எல்லாமே சரியாகும். ஏன் என் என்ற கேள்வி கேட்காமல் பொறுமையுடனும், அமைதியுடனும் அவளுடைய இஷ்டத்தை அனுசரிக்க வேண்டும். துன்பம் ஏற்பட்டால், அது அம்பிகையின் திருவருளால் உண்டானது என்று ஏற்றுக்கொள். நமது குணத்தை எப்படி அமைத்து, எப்படி நடத்தி செல்ல வேண்டும் என அவள் நன்கு அறிவாள். ஒன்றை மட்டும் எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். லௌகிகம், ஆன்மிகம் இரண்டும் முற்றிலும் வேறான விஷயங்கள். இவைகளில் ஒன்று வடக்கே போனால், மற்றொன்று தெற்கு நோக்கி செல்லுகிறது. எனவே இந்த உலகத்திலிருந்து நீ நியாயத்தை எதிர்பார்க்க கூடாது.

நமது ஒவ்வொரு செயலிலும் தைரியம், பலம், பயமின்மை, இவைகளை நாம் காட்ட வேண்டும். கஷ்டங்கேளா, துன்பங்களோ வந்தால், "நல்லது வாருங்கள், என்று கூறி வீர புருஷனாக நில்லுங்கள். அவைகள் யாவும் உன்னை விட்டு ஓடிப்போகும். அவைகளை வெற்றி கொள்ள இதுவே வழி. தைரியமாக இரு. தைரியத்துடன் பலத்தையும் பெறு. தைரியமான வார்த்தை ஒன்றேனும் அது மன வலிøமையைத் தருகின்றது. ஆதலால் உனது மனம் எப்போதும் உற்சாகத்துடனும், தைரியத்துடனும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

உனது இஷ்ட தெய்வத்தின் மீது சந்தோஷமாகவும், உறுதியாகவும்,கவலையற்றும் இருப்பதே ஒரு மகத்தான, தன்னலமற்ற செய்கையாகும். அப்படித்தன்னலமற்றவனாக உழைப்பதால், மேலும், மேலும் மனம் சுத்தமாவதுடன், தைரியத்தையும் பெறுவாய். ஆனால் இதை செய்வதற்கு இஷ்ட தெய்வத்தைப்பற்றிய இடைவிடாத சிந்தனையும், உள்ளம் உருகிய பிரார்த்தனையும் வேண்டும். அகங்காரம்,வெறுப்புகள் இல்லாமல் நம் இதயத்திலிரந்து தோன்றும் பிரார்த்தனைகளை நிறைவேற்ற நம் தாய் தவற மாட்டாள். உனக்கு பலமளித்து, வழிகாட்டி, எப்போதும் உடனிருந்து உன்னை வழிநடத்தி செல்வாள். உன் மனப்பூர்வமான ஆத்ம சக்தியுடன் நீ அவளை பூஜை செய்யும் போது, உனக்கு எப்போதும் துக்கத்தை அளிக்க மாட்டாள். அவள் கருணைக்கடல். அவள் தன் குழந்தைகளுக்கு துன்பம் தர மாட்டாள். பயப்பட வேண்டாம். அப்படி துன்பம் நேர்ந்தாலும், அதை உன்னுடன் சேர்ந்து தானும் அதை பங்கிட்டு கொள்ள தானே முன் வருவாள்.

அப்படியிருந்தால், ஏன் நம்முடைய நிறைய பிரார்த்தனைகள் பலனளிக்காமல் போகின்றன என சந்தேகம் வரலாம். அப்படியெல்லாம் நாம் கேட்ககூடாது. நாம் கேவலம் பாலகர்களே. நாம் அவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள ஆசைப்படக்கூடாது. அவளுக்கு யாவும் தெரியும். இது அவளது உலகம். அவளது குழந்தைகளைப்பற்றி அவள் மிகவும் அக்கறை கொள்வாள். "நான் சிறு குழந்தை, எனக்கு ஒன்றும் தெரியாது. அனைவருக்கும் நான் தாசன் என்ற இந்த எண்ணத்தையே நாம் மேற்கொள்ள வேண்டும். அவளது குழந்தைகள் அனைவருக்கும் தன்னலமற்ற தொண்டு புரிவதில் ஓர் இன்பம் உண்டு. அந்த அருமையான தொண்டை நாம் செய்வோம். இப்படி செய்வதிலும் ஒரு சிரமம் உள்ளது. உண்மையான தொண்டு என்ன என்பதை நாம் அறிவதில்லை. நாம் யாருக்கு தொண்டு செய்ய விரும்புகிறோமோ, அவருக்கு நமது அறியாமையினால்  தீங்கிழைத்து விடுகிறோம்.இவ்வாறு பல தவறுகள் செய்து பிறருக்கு துன்பத்தை விளைவிக்கிறோம்.  நமக்கு சரியான பகுத்தறிவு இல்லாததே இதற்கு காரணம்.

இருந்தாலும் அவள்மீதே முற்றிலும் சார்ந்திருக்க நாம் முற்படுவோம். சில சமயம் நம்மைச் சுற்றிலும் மனத்தைக் கலக்கும் ஆபத்துக்கள் நேர்ந்த போதிலும், நாம் பொறுமையுடன் தாங்கி கொள்ள வேண்டும். எதற்கும் அஞ்சாமல் திடமாக முன் நடந்து செல்வோம். பலன்களைப்பற்றி கவலைப்படாதே. நன்மை செய்தால் நன்மையே கிடைக்கும் என்பதை தெரிந்து கொள். இதை தவிர வேறெதுவும் இருக்க முடியாது. அது வெளிப்பார்வைக்கு தோன்றாமல் இருந்தாலும், அதுவே சரியான பாதையாகும்.

அன்னை பராசக்தியின் கருணை உள்ளத்தினாலேயே நாம் யாவரும் நடத்தப்படுகிறோம். எனவே, முழுப்பாரத்தையும் அவள் மீது சுமத்தி, "உன் சித்தத்தின் படியே அனைத்தும் நடக்கடும் என இதய பூர்வமாக சொல்வோம். இதை நாம் ஞாபகத்தில் வைத்திருந்தாலும், சில நேரங்களில் நமது மனதில் கவலை புகுந்து விடுகிறது. இந்த கவலையை நாம் உடனே அகற்றி விட வேண்டும். தூய்மையையும், நற்குணத்தையும் பெற்று தைரியமாக வாழ்ந்து, எந்தவித கஷ்டத்தையும், அபாயத்தையும் பயமின்றி எதிர்க்க வேண்டும். நாம் எதற்காக, யாருக்காக பயப்பட வேண்டும். நாம் அன்னை பராசக்தியின் குழந்தைகள். நம் தாயோ இந்த உலகத்தையெல்லாம் ஆட்சிசெய்யக்கூடடிய அரசி. எனவே இந்த உலகமே நம்முடையது தான். இத்தகைய உயிரளிக்கும் நம்பிக்கையை பெற்று நில்.

உன்னுள் இயற்கையாகவே அமைந்திருக்க கூடிய ஊக்கம், பலம், தூய்மை, தன்னலமற்ற அன்பு ஆகிய அனைத்தையும் வெளி உலகுக்கு கொண்டு வா. இவை அனைத்தும் உனது பிறப்பு உரிமைகள். தைரியமாக முன் வா. உனக்கு மரணம் என்பதே கிடையாது. எல்லா அசுத்தங்களையும், பழைய மூட நம்பிக்கைகளையும் தூர எறிந்து விடு. அவைகள் உனக்கு சொந்தமல்ல. நீ முக்தன். எல்லா பந்தங்களில் இருந்தும் விடுபட்டவன் என தெரிந்து கொள். பொறாமை, விரோதம், கோபம், மாத்ஸர்யம்ல பெயர், கீர்த்தி - யாவும் முடக் கொள்கைகள். அவைகளிடம் உனக்கு என்ன வேலை ? கொஞ்சமேனும் தயையின்றி அவைகளை ஞானமென்னும் கடலில் அமிழ்த்திவிடு, அதை <உடனே செய்து நீ முக்தன் என்பதை அறி. நீ முக்தன் ; ஆம், எங்குச் சென்றாலும் நீ பந்தமற்றவன் இனிப் பந்தமில்லை ! பயமுமில்லை ! முட்டாள்கள் எதை வேண்டுமாயினும் கூறட்டும். அவர்கள் ஒன்றையும் அறியவில்லையே என்று அவர்களிடம் கருணைகொள். பின்னால் என்ன நடக்கிறது என்பதைக் கவனியாமலே முன் நடந்து செல். அவர்கள் பின்னால் இரையட்டும் ; எதை வேண்டுமாயினும் செய்யட்டும். நீ எதையும் கூறாமல், மௌனமாயும் திடமாயும் முன் செல்.

தாயே யாவும் உன் சித்த பாக்யமே ; நீயே சகல சித்தங்களிலும் ஆவிர்ப்பவித்துள்ளவள்.

உன் வேலையை நீ செய்கிறாய் தாயே !

ஜனங்களோ, நான் செய்கிறேன் ; நான் செய்கிறேன் ; என்கின்றனர்.

ஒரு சிறு வளையில் ஒரு யானையை அடக்கி வைக்கவும் <உன்னால் கூடும்.

ஒரு முடவனும் மலையைத் தாண்டும்படிசெய்ய உன்னால் முடியும்.

நீ ஒருவனை தேவேந்திரனுடைய ஸ்தானத்திற்கும் உயர்த்தக்கூடும்.

ஒருவனை அதமமான நிலைக்குத் தள்ளவும் உன்னால் கூடும்.

நீயே காரணமான பொருள் ; நாங்கள் வெறுங் கருவிகள்.

நீ வழி காட்டுகிறபடியே நாங்கள் நடந்து செல்கிறோம்

நீ எங்களைப் பேசச் செய்கிபடியே நாங்கள் பேசுகிறோம்.

ஹே, தாயே ! உனது சித்தத்தின் படியே யாவும் நடக்கின்றன, நாஹம், நாஹம்.

இதுவே உண்மையான ஞானம். இதை அறிந்த பின்பே விடுதலையடைகிறோம், வீண் டம்பம் நம்மைக் கெடுத்துவிடும் ; அது மனிதனுடைய கொடிய சத்துருவாகும். அதைக் கொன்றுவிடு ; ஒரே தடவையாகக் கொன்றுவிடு, பிறகு தான் ஞானமென்னும் சூரியன் பிரகாசிப்பான். இவ்விதம் சிந்தனை  செய். நான் யார் ? ஒருவருடன் ஏன் சச்சரவு செய்து சண்டையிட வேண்டும் ? நானோ கடவுளின் புதல்வன். கீர்த்தி, அப கீர்த்தி, துக்கம், வருத்தம், இன்பம், துன்பம் எவையும் என்னைக் கட்டுப்படுத்தாது. அதுதான் விடுதலை. புத்தியில்லாத மனிதர்கள்தான் மற்றவர் தம்மை மகானெனக் கருதிப் புகழ்ந்து கூறவேண்டும்மென விரும்புகின்றனர், தாம் விரும்பியதைப்பெறாவிடில் துக்கத்தையும் அடைகின்றனர். இது சுத்த மௌட்டியம் ! அந்த மௌட்டியத் திற்காக நீயும் கவலைப்படப்போகிறாயா ? ஐந்து நிமிஷம் நிலைத்து நிற்கும் மூட விளையாட்டாகும் அது ! இவ்வுலகில் ஸத்யமான வஸ்து எது ? நம்முடைய விவேகத்தை <உபயோகப்படுத்த வேண்டும். அடிமைகளைப் போல் வாழ்வதால் பயனேதுமில்லை.

நம் இந்திரியங்களும் ஆசைகளும் இட்டுச் செல்லும் வழியிலேயே நாம் ஏன் செல்ல வேண்டும் ? அவைகளுடன் போராடி அவைகளை நாம் ஜயிக்க வேண்டும். நம்முள் ஏராளமான வேலை யிருக்கிறது. வேலை செய்வது கடினமே ; ஆனால் அதைச் செய்தே தீரவேண்டும். நாம் விடுதலை யடையுமுன் அதைச் செய்து முடிக்கவேண்டும், அதை நாம் அனாதரவு செய்தாலும், பயத்தினால் அதைச் செய்யாவிடினும், இன்னும் அநேக ஜன்மங்கள் எடுக்க வேண்டி வரும் ; இன்னும் துன்பங்களும் வந்து கொண்டேயிருக்கும். பகவானுடைய அருளினால் நமது வழியோ திறந்திருக்கிறது, பயமும் கவலையுமின்றி உறுதியாக நடந்து செல், நம்முடைய சுமையைத் தூக்கிச் செல்வது மிகக் கஷ்டமே ; ஆனால் அதை அகற்றி விடுபவனுடைய கஷ்டமோ இன்னும் அதிகம். அப்படி அகற்றும் பகவானுக்கு நன்றி செலுத்துவது எப்படி ? அவனுடைய உபதேசத்தை யனுசரித்துத் தூய்மையான வாழ்க்கை வாழ்வதால் தான். வேறு வழியில்லை ; வேறு வழி கிடையவே கிடையாது. லௌகிக உதவியும், லௌகிக சேவையும் பயனற்றவை. ஆதலால் உன் சோம்பல் முழுவதையும் அகற்றி விட்டு நகர்ந்து செல். நீ சரீரமல்ல ; பிரகிருதியுமல்ல ; ஆனால் புனிதமான,கலக்கமற்ற ஆத்மாவே நீ என்பதை அறி. இந்த உயர்ந்த இலக்ஷியத்தை உன் மனத்தில் எப்பொழுதும் நிறுத்து ; அப்பொழுது உன் சாந்தியைக் கலைக்க எதனாலும் முடியாது.

ஜகன்மாதா உன்னை எப்பொழுதும் ரக்ஷிப்பாள். அவளுடைய அருளின்றி எந்த நற்கருமத்தையும் நாம் செய்ய முடியாது. அதை நாம் மறக்காமல் இருந்தால், ÷க்ஷமமாகவே இருப்போம், தாயை மறந்து, உலக விஷயங்களையே பெரியதாயும் சாசுவதமாயும் எண்ணி அவைகளையே பின்தொடரும் பொழுதுதான, மனிதன் அபாயத்திற்குள்ளாகிறான். அம்பாளுடைய அருள் கிடைத்தாலன்றி நமக்கு ஒளியும் உலக சுகங்களில் விரக்தியும் தோன்றாது. நாம் சுகத்தின் மத்தியில் இருந்தாலும் சரி, துன்பத்தின் நடுவே இருப்பினும் சரி, நாம் உயிர் வாழும் வரை, அவளுடைய பிரபாவத்தைப் பாடுவோம். அவளைப் பற்றிய சிந்தனையிலேயே முழ்கிக் கிடப்போம் ; அவளுடைய அன்பென்னும் பித்துப் பிடித்தலைவோம். உடனே உலகம் நம் மனத்திலிருந்து தானே நழுவி விடும். இவ்வுலகத்தின் புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும், அன்பிலும் பகைமையிலும் பொறாமை முதலிய குறுகிய விஷயங்களி<லும் என்ன இருக்கின்றது ? இவை அனைத்தையும் மறந்து, நம்முடைய உள்ளன்போடும் பூர்ண பக்தியோடும் அவளையே தொழுவோம்.

நம் மாதா நம்மைச் சுற்றிலும் சாந்தியையும் அருளையும் வாரி இறைப்பாள். நாம் அவளுடைய செல்வப் பிள்ளைகள். நம்மிடம் அவள் அன்னையின் அன்பைச் செலுத்தத் தவறமாட்டாள். அலைகள் வந்து போய்க் கொண்டேயிருக்கும் - சுகம், துக்கம் என்னும் அலைகள் ; அவைகள் நமது ஆத்ம வளர்ச்சிக்கு மிகவும் நல்லவை. திடமாக நில். எது வேண்டுமாயினும் வந்து போகட்டும், நீ பாறையைப் போல் அசைவற நின்று, <உன்னிலும் உனது இஷ்ட இலக்ஷியத்தி<லு<ம் நம்பிக்கையுடன் இரு. நம்பிக்கை, சரணாகதி ஆகிய இவைகளால்தான் உண்மையை அறிய முடியும் ; பயனற்ற உண்மையை அறிய முடியும் ; பயனற்ற தர்க்க வாதங்களாலும், புத்தி விசேஷத்தாலும் அதை அடைய முடியாது.

மானிட சிநேகிதராலும், சத்ருக்களாலும் ஆவது ஒன்றுமில்லை. ஜகன்மாதாவே சர்வமும். எல்லாவற்றி<லும் எல்லாமாயிருப்பவள் அவளே. ஒவ்வொரு வினாடியையும் அவளை உபாசிப்பதிலேயே கழிக்க வேண்டும் ; மற்றவை யாவும் பொய் ; நன்மை தீமையாவும் மித்யை ; மாயை ; அவித்தையே யாகும். <உண்மை இரண்டின்றி ஒன்றே ; அதுவும் அவளே. அகில அண்டத்திற்கும் ஆதாரம் அவளே, அவளுக்கு இஷ்டமில்லை யாயின் எதுவும் நடக்காது. அவள்தான் நம்முடைய தாய் ; அனைவருடைய அன்னையும் அவளே. தாய் பக்கத்திலிருக்கும் பொழுது ஒரு தீங்கும் நம்மை யணுகாது. நம்பிக்கை, பலம், தைரியம் - இவைகளைப் பெற்றிரு. ஜகன்மாதா எல்லாம் வல்லவள் என்பதை அறி. அவளுடைய பாதங்களில் சரணமடைந்தவனுக்கு எவ்வித அபாயமும் ஏற்படாது. பயமற்றுக் குழந்தையாய் விடுகிறான் அவன்.

ஜகன்மாதாவைப் பூஜித்து, அவள் பாதங்களில் சரண்புகுந்தால், பயம், கவலை முதலிய பலஹீன உணர்ச்சிகள் அழிந்து விடும். ஜெய மா ஆனந்தமயி என்று சொல், இதை உரக்க உச்சரி ;  சகல கஷ்டங்களும் நிவர்த்தியாய் விடும். அவளே சகல துன்ப நிவாரணி ; தாயைத் தவிர வேறெதையும் அறியாத தனது சிறு குழந்தைகளை ரக்ஷிப்பவள் அவள் ஒருத்தியே. அவளைத் தவிர வேறென்ன இருக்கிறது இவ்வுலகில் ? ஜகன்மாதாவினுடைய பிரபாவத்தைத் தவிர மற்ற யாவும் பயனற்றவை, மித்தைய. மாதாவே நம்முடைய வாழ்க்கைக்கு ஆதாரமானவள் ; அவளே சாந்தி, ஆனந்தம் இவைகளின் ஊற்று.

அவளுடைய கரங்களிலேயே நாம் அமைதியாக அமர்ந்திருப்போம். தன் குழந்தைகளைப்பற்றிக் கவனம் செலுத்துவதில் அவளே நன்கறிந்தவள், தனதன்னையின் கரங்களில் இருக்கும் வரை குழந்தைக்கு எவ்வித பயமும் இல்லை. அவளே யாவும் ; ஏகமே வாத்விதீயமான பொருள். அவளுடைய திவ்விய பாதங்களை ஸ்மரிக்காமல் வேறெதைத்தான் நாம் பூஜிக்கப் போகிறோம் ? மற்ற விஷயங்கள் யாவற்றையும் உன் மனத்திலிருந்து அகற்றிவிடு. பின்பு தீமை எங்கிருக்கும் ? நம் ஹிருதயம் முழுவதிலும் அவளே வியாபித்திருக்கையில் பயம், கவலை, வேதனை இவை எங்கிருக்கமுடியும் ?

பரமானந்த மயமான ஜகன்மாதாவை அறிந்தவனே ஆனந்தத்தையடைந்தவன் என்று சொல்லும் அழகிய கீதத்தை நீ அறிவாய். மற்ற பூசைகளும் மந்திரங்களும் அவனுக்கு வேண்டுவதில்லை. தன்னைப் புனிதனாக்கிக் கொள்ள அவன் ÷க்ஷத்திர யாத்திரை செய்வதில்லை ; ஸர்வானந்தமயியான மாதாவினுடைய நாமத்தைத் தவிர மற்றெவ் வார்த்தைக்கும் அவன் செவி கொடுப்பதில்லை ; அவளுடைய திருவுள்ளத்தைத் தவிர வேறெதையும் அவன் நம்புவதுமில்லை. இம்மாதிரி ஜகன்மாதாவின் பாதங்களே யாவுமென்று இருப்பவன் கஷ்டமின்றி வெகு சுலபமாய் உலகத்தை மறந்து விடுகிறான் ; அவன் ஒருவனாலேயே ஸம்ஸாரஸாகரத்தின் மறுகரையை அடைய முடியும். அவனுக்கு எவ்வித பயமும் இருக்க முடியாது. உலகத்தின் புகழ்ச்சி இகழ்ச்சிகளை அவன் கவனிப்பதில்லை ; மாதாவினுடைய திவ்விய நாமமென்னும் அமிருதத்தைப் பானம் பண்ணி எப்பொழுதும் அவன் மயங்கிக் கிடக்கிறான்.

ஜகன்மாதாவே நம்முடைய முடிவான இலக்ஷியம். அவள் ஒருத்தியிடமே சாந்தியும் அமைதியும் இருக்க முடியும். அவளையே தியானி. அவளையே பிரார்த்தித்து அவளையே சதா சிந்தனைசெய். அவளே உண்மையான ரக்ஷகி. சகல ஆனந்த சுகங்களுக்கும் அவளே இருப்பிடம். அவளது பேரன்பு என்னும் சாகரத்தில் ஆழ்ந்து மூழ்கிப் பித்தேயிரு. உடனே இவ்வுலகம் நம் மனத்திலிருந்து நழுவிவிடும். அவள் அன்பிற்கு விரோதமான யாவும் ஒரு நிமிஷத்தில் மறைந்துவிடும். ஜெயமா ஆனந்த மயி ! நம்முடைய பயமனைத்தும் நீங்கி, அவள் முன்னிலையில் யாவும் ஆனந்தமயமாகவே மாறிவிடும்.

கபடமற்ற சிறு குழந்தையைப்போல் அவளிடத்தில் கெஞ்சி மன்றாடு. <உன்னை நிச்சயம் ரக்ஷிப்பாள். நாம் யாவரும் அவளுடைய குழந்தைகளே. எதற்கு நாம் அஞ்ச வேண்டும் ? நம்மை அவள் கவனித்துக் கொள்வாள், இந்த துக்கமயமான உலகக்குழப்பத்தின் இடையில் அவளை மறக்காமல் இருப்பதே நமது கடமையாகும். எல்லா நிலைகளிலும், எப்பொழுதும் ஜகன்மாதாவையே பூஜிக்க வேண்டுமென்பதைத் தவிர வேறு எதை நான் சொல்ல முடியும் ? இவ்வாழ்க்கையில் நாம் செய்யவேண்டியது இது ஒன்றே. இதைத் தவிர உத்தமமான, மகத்தான கடமை வேறெதுவும் இல்லை.

ஓ ! <என் அருமைத் தாயே ! உன் பாதார விந்தங்களில் உண்மையான பக்தியை எனக்களி. நான் வேறெதுவும் வேண்டேன். என்னிடமுள்ள யாவற்றையும் எடுத்துக்கொண்டு உன் பாத கமலங்களில் பக்தியை மட்டும் தருவாயாக என்று அன்னையைத் தியானி. இரவு பகலும் தியானம் செய்து உண்மை பக்தியும் அன்பும் வேண்டுமென்று கதறியழு, இதுதான் உண்மையான பூஜை. இத்தகைய மகா உத்தமமான ஆராதனையில் அமர்ந்து நின்றால் உலகம் உன்னைவிட்டு அகன்றுவிடும் ; நீ சாந்தியையும் ஆனந்தத்தையும் பெற்று வாழ்வாய்.

அவளுடைய சித்தத்தின்படியே யாவும் நடக்கின்றன வென்பதை ஞாபகத்தில் வை. அவள் சர்வ வல்லபை. தன் இஷ்டப்படி எதையும் செய்ய அவளால் முடியும். மிகவும் அசாத்தியமான காரியத்தையும் சாத்தியமாகச் செய்ய அவளால் முடியும். அவளுடைய மகிமையை அறிந்தவர் யார் ? அவளுடைய மகிமையைப் பாடக்கூடியவர் யார் ? அஹங்காரம் யாவையும் விட்டு இங்ஙனம் சொல்வதே நம்முடைய கடமையாகும் ; நாஹம் ! நாஹம் ! துஹு ! துஹு ! துஹு ! - தாயே, நானல்ல, நானல்ல, யாவும் நீயே, உன்னை என்றும் மறக்காத வண்ணம் உனது திவ்ய பாதங்களில் பக்தியையே எனக்கு அளி. தாயே ! உனது நம்பிக்கையும் மெய் அன்பும் உண்டாகும்படி எனக்கு அருள்வாயாக. தாயே ! அம்மா ! உனது நாமத்தில் உனது கரங்களில் என்னை எடுத்துக்கொள் ; இங்கிருக்க நான் விரும்பவில்லை ; இதுவல்ல என்னுடைய இருப்பிடம். நீயே என்னுடைய இருப்பிடம் ; எனது புகலிடம். உன்னிடம் என்னை அழைத்துக்கொள் ; உனது காரியமாகத்தான் நான் இங்கிருக்கிறேன் ; உனது வேலையைச் செய்தே தீர வேண்டும். அதைச் சுயநல மற்றும் தூய்மையுடன் உண்மையாகச் செய்யும்படி எனக்குப் பலத்தைக் கொடு. உனது திருவுள்ளத்தின் படியே யாவும் நடக்கட்டும் ! எங்களுக்குப் பலத்தை அளி ;ஒளியை அளி ; ஹிருதய பூர்வமாக உனது திருவுள்ளத்தின்படியே யாவும் நடக்கட்டும் என்று கூறுவோமாக.

தாயே ! எங்களுக்குச் சாந்தியையும் உன் அனுக்கிகத்தையும் தந்தருள்புரிவாயாக.

ஓம் தத்ஸத்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar