Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பாவை நோன்பில் அறிவியல்
 
பக்தி கதைகள்
பாவை நோன்பில் அறிவியல்

பழங்காலத்தில் பெண்கள் ஒன்றுகூடி பாவை (உருவம்) செய்து விளையாடும் பழக்கம் இருந்தது. அப்போது அவர்கள் கூட்டமாய் கூடிப் பாடி மகிழ்ந்தனர். கடற்கரை, ஆற்றங்கரைகளில் நீராடிவிட்டு இந்த ஆட்டத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் நாட்டு மக்களிடையே நிலவிய பாவை ஆடலும் நீராட்டமும் பாவை நோன்பாகவும் பாவை பாட்டாகவும் மார்கழி நீராடலுமாகவும் மாறின. இத்தகைய நாட்டுப்புறப் பாடலுக்கு இலக்கிய மதிப்பை அளித்து முதல் பாட்டைப் பாடியவர் ஆண்டாள் நாச்சியார்.

பாமர மக்களிடையே நிலவிய பாடல்களை பக்தி மணம் கமழும் பாடல்களாக மாற்றி, மிக உயரிய மடைமாற்றம் செய்ததும் ஆண்டாளின் அருட்பெருஞ்செயலே! நோன்பு நோற்றலை அறிவியலுடன் இணைத்துப் பார்ப்பது சிறப்பு.

அறிவியல் என்பதே ‘அறிந்து கொள்ளுதல்’ என்று பொருள். முன்கண்காணிப்புகளின் வடிவத்தில் நிறுவ முடிந்த விளக்கங்களுக்கு நம் அறிவை ஒருங்கமைத்து கட்டமைக்கும் ஒருமுறை எனலாம். அறிவியல் என்பதே ஏன், எதனால், எப்படி ஏதொன்றும் இயங்குகிறது என்பதை உறுதியாக அறிவார்ந்த நிலையில் நின்று அறிவது தானே!

அம்முறையில் ஆண்டாள் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தை உணர்ந்து கொண்டும் நோன்பு நோற்றலின் அவசியத்தை அறிவியல் எனும் புள்ளியில் நிலை நிறுத்துகிறாள்.

 கடவுளின் அருளை மனிதர்கள் பெற சமய பொருண்மையை அடிப்படையாகக் கொண்டதே நோன்பு நோற்றல் அல்லவா?

உலகினர் மேற்கொள்ளும் பழைய நோன்பை ஆதாரமாக எடுத்துக் கொண்டு வைணவ சமய பேருண்மையினை வெளிப்படுத்தும் பிரபந்தமாக ஆண்டாள் திருப்பாவை இயற்றியதோடு மட்டுமல்லாமல் அதை அன்றாட அறிவியலுடன் இணைத்து பொருத்திப் பார்க்கச் செய்கிறார். இது தான் அவரின்  சிறப்பு.


இந்த நோன்பு எப்படி அறிவியலுடன் தொடர்புபடுகிறது என்று பார்ப்போமா…மார்கழி மாதத்து முதல் நாளே நோன்பு நோற்க சிறந்த நாளாக ஆண்டாள் அடையாளப்படுத்துகிறார்.  அது முழுமதி நாளாக அமைந்தது மற்றுமொரு மேன்மை.

பவுர்ணமி என்பது ஆன்மிகத்திற்கும் அறிவியலுக்கும் தொடர்புடைய ஒரு முக்கிய நாள்.  பொதுவாக நம் கலாச்சாரத்தில் பவுர்ணமியன்று கோயில் திருவிழாக்கள் நடைபெறும். இது பவுர்ணமி வெளிச்சத்துக்காக உருவாக்கப்பட்ட மரபு என்றும் நாம் கடவுளை தேடி வெளிச்சத்தில் செல்ல வேண்டும் என உருவாக்கப்பட்ட மரபு என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. சித்திரை மாதத்தில் வைகை ஆற்றில் அழகர் இறங்குவதை சித்ரா பவுர்ணமி திருவிழாவாகவும் முருகன் கோயில்களில் வைகாசி விசாகமாகவும் ஆனி திருமஞ்சனம் நடராஜர் அபிஷேகம், சிதம்பரத்தில்  நடராஜர் தேர், ஆவணி அவிட்டம் ஆவணி பவுர்ணமியாகவும் ஐப்பசியில் அன்னாபிஷேக திருவிழாவாகவும் கார்த்திகையில் பெரும் கார்த்திகையான அண்ணாமலை தீபமாகவும், மார்கழி திருவாதிரையில் ஆருத்ரா தரிசனமாகவும் விளங்குகிறது. மேலும் அதே நாளில் ஆண்டாள் திருப்பாவையும் பாடியுள்ளார்.  இது மிகவும் போற்றுதலுக்குரிய அரிதான நிகழ்வு. தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் முழுநிலவு நாளை ஒட்டியே வந்துள்ளன.

   சரி, நோன்பில் ஏன் அதிகாலை எழ வேண்டும்? அதிகாலையில் தான் இந்த பிரபஞ்சத்தில் வாழும் மனிதர்களின் எண்ண அலைகளின் ஓட்டம் மிகக் குறைவாக இருக்கும். பிரபஞ்சத்தின் சக்தி முற்றிலும் மேலோட்டமாக இருக்கும். ஆனால்  பகல் பொழுதுகளில்  பல கோடி மக்களின் எண்ண அலைகள் காற்றோடு காற்றாக கலந்து ஓடிக் கொண்டே இருக்கும். இந்த அமைதியான அதிகாலை நேரத்தில் நாம் எழுந்து துாய மனதுடன் எண்ணும் செயல்கள் யாவும் எண்ண அலைகளின் குறுக்கீடுகள் இல்லாத இந்த நேரத்தில் பிரபஞ்சத்தில் பதியப்படும் போது அதற்கான வீரியம் அதிகரிக்கப்பட்டு அது நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகின்றன என்கிறது பிரபஞ்ச நிகழ்வுகளை ஆராயும் நவீன அறிவியல்.

வாழ்வில் மிகப்பெரிய சாதனைகள் புரிந்த மனிதர்களை உற்று நோக்கினால் அவர்கள் யாவரும் அதிகாலை நேரத்தில் எழக்கூடியவர்களாக இருக்கிறார்கள். நம்முடைய சக்தி நிலை அதிகாலையில் தான் அபரிமிதமாக இருக்கும். நம் வீட்டு பிள்ளைகளை அதிகாலை எழுந்து படிக்கச் சொல்வது, அந்த நேரத்தில் அவர்களின் கிரகித்துக் கொள்ளும் தன்மை அதிகரிக்கும் என்பதால் தான்.

மேலும் ஆண்டாள் அதிகாலை எழுதலை மட்டும் வலியுறுத்தவில்லை. நீராடுதலையும் இங்கு நோன்பின் தலையாய கடனாக மொழிகிறார். தண்ணீருக்கு ஒரு தெய்வீக ஆற்றல் உண்டு என்று ஆண்டாள் உணர்ந்து உரைக்கிறார். அறிவியலும் தண்ணீருக்கு ஒரு அபார சக்தி உண்டு என்கிறது.  நம் உடல் மீது தங்கியிருக்கும் எதிர்மறை சக்திகளை தண்ணீர் கொண்டு நமது உடலுக்கு மேலாக ஊற்றி குளிப்பதால் அது நீங்குகிறது என்கின்றனர் பெரியவர்கள். புண்ணிய நதிகள், கடல் போன்ற நீர் நிலைகளில் குளிக்கும் போது இன்னும் அதிக நேரம்  நம் உடல் மீது அந்த தண்ணீர் இருக்கும். இது இன்னும் விசேஷமாக முன்வைக்கப்படுகிறது.

அனைத்து மதங்களிலுமே நோன்பு நோற்கும் மரபு இருந்து வருகிறது. நம் ஹிந்து மதத்தில் நோன்பு நோற்றல் என்றாலே அதிகாலை துயிலெழுதல் முக்கிய சடங்கு. ஆண்டாள் அதனினும் ஒரு படி மேல் சென்று அதிகாலை நீராடுதலின் அவசியத்தை பறைசாற்றுகிறார்.

தண்ணீர் தனக்கு இடப்படும், தான் கடந்து செல்லும் பாதையில் தன் மீது விழும் தகவல்களை அப்படியே தனக்குள் தேக்கி வைத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றது. அதிகாலையில் நாம் குளிக்கும்போது நம் உடலின் மேல் நீர் நீடித்திருக்கும் போதோ நீர் மொட்டுக்கள் பூத்திருக்கும் போதோ நாம் நம் மனதில் ஏற்படுத்திக் கொள்ளும் வைராக்கியம் அல்லது ஆழ்மன வேட்கை பரிபூரணமாக நிறைவேறுவதாக  நம்பப்படுகிறது.

ஆக, ஆண்டாள் நதிக்கரையில் நீராட செல்வச் சிறுமியர்களை அழைக்கும் போக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. ஒரு மேம்பட்ட வாழ்வு நிலையை அவர்கள் அடைய வழி கோலுகிறாள். அதுமட்டுமன்றி அதிகாலை 4:00 மணியில் இருந்து 5:00 மணி வரை குளிப்பது தேவ குளியல்.  5:00 மணி முதல் 6:00 மணி வரை குளிப்பது மனித குளியல். 6:00 மணிக்குப் பிறகு குளிப்பது அனைத்தும் அசுர குளியல் என்று ஆன்றோர்கள்  அறிவுறுத்தி இருக்கிறார்கள்.  அப்படிப் பார்க்கும்போது நம் அனைவரையும் தேவ குளியல் பெற அழைக்கிறார் ஆண்டாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar