கோவை; ஆடி வெள்ளிக்கிழமைகளில், கோவை மாவட்டத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கு, ஆன்மிக அன்பர்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர்.
இந்து சமய அறநிலையங்கள் துறையின் கீழ் உள்ள புகழ்பெற்ற அம்மன் திருக்கோவில்களுக்கு, ஆடி மாதத்தில், ஆன்மிக அன்பர்கள், அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர் என, அமைச்சர் சேகர்பாபு, சட்டசபையில் அறிவித்தார். இதன்படி, ஆடி வெள்ளிக்கிழமைகளில், கோவை மாவட்டத்தில், 18ம் தேதி (இன்று), 25ம் தேதி, ஆக., 1, 8 மற்றும் 15ம் தேதிகளில், ஆன்மிக அன்பர்களை, கோவை தண்டு மாரியம்மன் கோவில், பொள்ளாச்சியில் அருள்மிகு மாரியம்மன் அங்காளம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், சூலக்கல் மாரியம்மன் கோவில் ஆகிய புகழ்பெற்ற அம்மன் திருக்கோவில்களுக்கு, ஆன்மிக சுற்றுலாப் பயணம், இந்து சமய அறநிலைத்துறை மற்றும் சுற்றுலாத் துறையுடன் இணைந்து நடத்தப்படுகிறது.
இதில், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இலவசமாக அழைத்து செல்லப்பட உள்ளனர். கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் இருந்து இருந்து காலை 7:00 மணியளவில், காலை உணவுடன் துவங்கும் இப்பயணம், மேற்கண்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு தரிசனம் செய்துவிட்டு, மாலை 6:00 மணியளவில் கோனியம்மன் கோவிலில் நிறைவு பெறும். விருப்பம் உள்ளவர்கள், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், இதற்கான விண்ணப்பம் பெற்று, ஆதார் கார்டு நகல், உடற்தகுதி சான்றிதழ், மூன்று பாஸ்போர்ட் புகைப்படம், வருமான சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என, கோவை மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார். விபரங்களுக்கு: இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர், 98406 91623.