மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆக.5ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடம்தோறும் ஆடி மாதம் தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான திருவிழாவிற்காக இன்று அதிகாலை சுவாமிகளுக்கு 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு சர்வ அலங்காரங்களுடன் கோயில் முன் மண்டபத்தில் வீர அழகர் ஸ்ரீதேவி பூதேவியருடன் எழுந்தருளினார் இதனைத் தொடர்ந்து அர்ச்சகர்கள் கோயில் கொடி மரத்துக்கு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடத்திய பின்பு கொடியேற்றம் நடைபெற்றது.விழா நாட்களின் போது சுவாமி பரங்கிநாற்காலி,பல்லக்கு, குதிரை, சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகபடிகளுக்கு எழுந்தருளி 4 ரத வீதிகளின் வழியே வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஆக.5ம் தேதியும், 8ம் தேதி மாலை 6:00 மணிக்கு தேரோட்டமும், 9ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சீனிவாசன், ஸ்தானீகர் சோமசுந்தர பட்டர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.