அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா விமர்சையாக நடந்தது.
ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் பிட்டுக்கு மண் சுமந்த விழா,கொங்கேழு சிவ ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் நடக்கிறது. இன்று அவிநாசி வாழ் வணிக பெருமக்களால் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா கொண்டாடப்பட்டது. ஈசனின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான மூதாட்டிக்காக மண் சுமந்து, மன்னனிடம் ஈசன் பிரம்படி பெற்ற வரலாற்று நிகழ்வாக நிகழ்ச்சி நடந்தது. இன்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. இதில் ஸ்வாமி ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பிட்டுக்கு மண் சுமந்த வரலாற்றினை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் விதமாக நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பச்சரிசி பிட்டு பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது.