எரியோடு; எரியோடு அருகே இ.சித்தூர் நல்லமநாயக்கன்பட்டியில் இருக்கும் அய்யனார் கோயிலில் புரட்டாசி 3ம் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு மழை வேண்டியும் கிராம மக்கள் செழிப்புடன் வாழவும் கொழுக்கட்டைகளை சூறைவிட்டு நேர்த்திக்கடன் வழிபாடு நடந்தது. ஆண்டுதோறும் இதே நாளில் இந்த வினோத வழிபாடு நடக்கும். நேற்று மாலை நடந்த வழிபாட்டிற்கு ஏராளமான பெண்கள் தங்கள் வீடுகளில் கொழுக்கட்டைகள் செய்து வந்து கோயிலில் ஒப்படைத்தனர். அய்யனாருக்கு படையலிட்டு அபிஷேகங்கள் நடந்தபின், ஊர் தலைவர் செவந்தியப்பன் படையல் செய்யப்பட்டிருந்த கொழுக்கட்டைகளை எடுத்து சூறைவிட்டார். ஆண்கள் அனைவரும் போட்டியிட்டு கொழுக்கட்டைகளை கீழே விழாமல் தாவி தாவி பிடித்தனர். இவ்வற்றை கீழே விழாமல் பிடித்தால் வேண்டுதல் நிறைவேறும் என நம்புகின்றனர்.