சூலூர்; உலக நலன் வேண்டி, நடந்த மகா சண்டி ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் அடுத்த சின்னியம்பாளையம் ஸ்ரீ பிளேக் மாரியம்மன் கோவில், கீதா ராகவன் அறக்கட்டளை சார்பில், உலக நலன் வேண்டி, ஸ்ரீ மகா சண்டி ஹோமம், கோவில் வளாகத்தில் நடந்தது. அக்.1ம்தேதி காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. மாலை, கலச ஆவாஹனம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீ ஸுக்தம், ஸ்ரீ துர்கா ஸுக்த பாராயணங்கள் செய்யப்பட்டன. நேற்றுகாலை, 7:00 மணிக்கு கோமாதா பூஜை நடந்தது. காலை, 8:30 மணிக்கு, அனுக்ஞை, மகா சங்கல்பம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீ மகா சண்டி பாராயணம், 108 மூலிகைகள், வஸ்திரங்கள், பழ வர்க்கங்கள் கொண்டு மகா சண்டி ஹோமம் நடந்தது. சுமங்கலிகள், கன்யா பெண்கள், தம்பதி உபசார பூஜை நடந்தது. பூர்ணாஹுதி, மகா தீபாராதனை முடிந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோவில் கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.