திண்டுக்கல்: திண்டுக்கல் – பழநி ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் அம்மன் வீதி உலா நடந்தது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா 7 நாட்கள் நடக்கும். இந்தாண்டு ஜன.20.ல் சுவாமி சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. பிப்.3 இரவு அம்மன் கரகம் ஜோடிக்க இரவு முழுவதும் வானவேடிக்கை, கரகாட்டம் நடந்தது. நேற்று அதிகாலை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலா தொடர்ந்து வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் அம்மன் எழுந்தருள நகர்வலம் நடந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி கோஷங்கள் முழங்கி பக்தியுடன் அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம், தீச்சட்டி, எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா நாட்களில் நாள்தோறும் மண்டகப்படிதாரர்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்க உள்ளது. ஜன.9ல் தெப்பத் திருவிழாவுடன் திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் - விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.