பெங்களூரு ரூரல் மாவட்டம் ஹொஸ்கோட் தாலுகா ஜடிகேனஹள்ளி கிராமத்தில் உள்ளது, கால பைரேஸ்வரா கோவில். 2,000 ஆண்டு பழமையான இக்கோவில், கால பைரவருக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. அமாவாசை அன்று கோவிலுக்கு வந்து, கால பைரேஸ்வரரை தரிசனம் செய்தால், பக்தர்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னை தீர்ந்து போகும் என்று நம்பப்படுகிறது.
சிவபெருமானின் மற்றொரு வடிவமான கால பைரவர் மீது, மாலம்மா என்ற பெண் ஆழ்ந்த காதல் கொண்டதாகவும், கால பைரவரை மணந்து விடலாம் என்ற நம்பிக்கையில் காத்திருந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
ஒரு நாள் மாலம்மாவின் கனவில் தோன்றிய கால பைரவர் தன் பிரம்மச்சரிய உறுதிபாட்டை வெளிப்படுத்தி உள்ளார். மாலம்மாவுக்கு தெய்வீக அருளையும் வழங்கினார். அடுத்தடுத்த பிறவிகளில் கால பைரவருக்கு சகோதரியாக மாலம்மா பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
இக்கோவிலில் கால பைரவர், மாலம்மாவுக்கு தனித்தனி சிலைகள் உள்ளன. பூதராயர், பூதராட்சசன், நந்தி சிலைகளும் இங்கு உள்ளன. தாமரை, வீணை, இசைக்கருவிகள் ஏந்திய கலைஞர்கள் போன்ற உருவங்கள் பக்தர்களை வெகுவாக கவர்கின்றன.
இக்கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகவும், கோவிலுக்கு அடியில் ஏராளமான பொக்கிஷங்கள் புதைந்து கிடப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இரவு முழுதும் கோவில் வளாகத்தை, நாக தேவதைகள் பாதுகாப்பதாகவும் அர்ச்சர்கள் கூறுகின்றனர்.
ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஹொஸ்கோட், கோலார், ஆந்திராவில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். தினமும் காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.
30 கி.மி., துாரம்
பெங்களூரில் இருந்து கோவில் 30 கி.மீ., துாரம்
மெஜஸ்டிக்கில் இருந்து 317-yb பி.எம்.டி.சி., பஸ்சில் சென்றால் ஜடிகேனஹள்ளி கிராமத்திற்கே செல்லலாம்
ஹொஸ்கோட்டில் இருந்து ஜடிகேனஹள்ளிக்கு 6 கி.மீ., துாரம்
மெட்ரோ ரயிலில் கே.ஆர்.புரம் சென்று, அங்கிருந்து ஹொஸ்கோட்டிற்கு பஸ்சில் சென்று, கோவிலுக்கு ஆட்டோவில் செல்லலாம்.