அவிநாசி: ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர முதலைவாய் பிள்ளை மீட்ட ஐதீகப் பெருவிழா நடைபெற்றது.
அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர முதலை வாய் பிள்ளை மீட்ட ஐதீக பெருவிழா நடைபெற்றது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் தல வரலாறான,அந்தனர் தெருவில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வந்த போது எதிர் எதிர் வீட்டில் ஒரு வீட்டில் மங்கல இசையும் மற்றொரு வீட்டில் அழுகை ஒளியும் வந்தது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இது குறித்து கேட்க எதிரெதிர் வீட்டு பாலகர்கள் ஒரே வயதுடையவர் என்றும் மூன்று ஆண்டுக்கு முன் தாமரை குளக்கரையில் விளையாடும்போது முதலை வந்து ஒரு சிறுவனை விழுங்கி சென்றது என கூறுகிறார்கள். முதலை உண்ட பாலகனின் பெயர் அவிநாசிலிங்கம், அவரின் பெற்றோர்கள் பெயர் வேதப்பதுமை மற்றும் கங்காதர ஸர்மா என்றும் கூறுகிறார்கள். இதைக் கேட்டு சிறுவனை இழந்த வீட்டிற்கு சென்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி குளக்கரையை அடைந்தார். அங்கு குளம் வற்றி இருந்தது. முதலையும் இல்லை. சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஏற்றான் மறக்கேன் என்ற திருப்பதிகம் பாடி மழை பொழிந்து குளம் நிறைந்தது. நான்காம் பாடலின் போது 3 ஆண்டு வளர்ச்சியுடன் 7 வயது சிறுவனாக முதலை வாயிலிருந்து அவிநாசிலிங்கம் வெளியில் வந்தார். இந்த அற்புத நிகழ்வு நடைபெற்ற நாளான முதலையுண்ட பாலகனை மீட்டெடுத்த விழா, நேற்று கோவிலில் திருக்கல்யாணம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அவிநாசியப்பர், கருணாம்பிகையம்மன், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் முதலையுண்ட பாலகனின் பெற்றோர்கள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று முதலை வாயிலிருந்து பாலகன் மீண்டு வந்த அற்புத நிகழ்வு நடைபெற்றது. இதில், சிரவை ஆதீனம் கௌமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முதலை வாய்ப்பிள்ளை மீட்ட தல வரலாறு நிகழ்வைக் கண்டு பரவசம் அடைந்தனர் . முன்னதாக இன்று காலை சந்திரசேகரர், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள உமையஞ் செட்டியார் தண்ணீர் பந்தல் வளாகத்தில் ஸ்ரீ சுந்தரர் கட்டமுது விழா நடைபெற்றது.