கூடலூர்: முதுமலை, மண்டைகரை பொம்மதேவர், பரதேவதை கோவில் திருவிழாவில், பக்தர்கள் 5000 தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
கூடலூர், முதுமலை புலிகள் காப்பகம் முதுமலை ஊராட்சி மண்டகரை பகுதியில், பூர்வ குடிகளான மவுண்டாடன் செட்டி, பழங்குடி மக்கள வழிபட்டு வரும் 500 ஆண்டுகள் பழமையான பொம்மதேவர், பரதேவதை கோவில் அமைந்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான திருவிழா 4ம் தேதி மாலை துவங்கியது. முதுமலை, தெப்பக்காடு, கூடலூர் பகுதிகளை சேர்ந்த மவுண்டாடன் செட்டி, பழங்குடியினர் கோவிலுக்கு சென்று, இரவு தங்கினர். இரவு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அருள்வாக்கு வழங்கும் நிகழ்ச்சியும், பூர்வ குடிக்கின் பாரம்பரியமான நடன நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, நேற்று முந்தினம், காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. பூர்வ குடியினை பாரம்பரிய இசையுடன் நடனம் ஆடினர். தொடர்ந்து அருள்வாக்கு வழங்கும் நிகழ்ச்சியுடன், தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி துவங்கியது. கோவில் சார்பில் 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் தேங்காய் உடைத்து நேற்றி கடனை நிறைவேற்றினர். பக்தர்கள் மூலம் 5,000 தேங்காய் உடைக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கூடலூர் எம்.எல்.ஏ., மற்றும் கூடலூர் அ.தி.மு.க., வேட்பாளர் பொன் ஜெயசீலன் விழாவில் பங்கேற்று, பொம்ம தேவரை வணங்கி, பூர்வ குடி மக்களிடம் இணைந்து பாரம்பரிய நடனமாடினார்.