கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் பகுதியில் இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.
தேனி மாவட்டம் கூடலுார் அருகே தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். தமிழக கேரள பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு மே 1ல் நடைபெற உள்ள விழாவிற்கு தேனி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. விழாவிற்கு முன்பு பளியன்குடியில் அறக்கட்டளையினர் கொடியேற்ற விழா நிகழ்ச்சி நடத்தி விரதத்தை துவக்குவார்கள். ஆனால் கடந்த ஆண்டு முதல் பளியன்குடியில் கொடியேற்ற நிகழ்ச்சி நடத்த வனத்துறை தடை விதித்தது. அதனால் கோயில் அடிவாரப் பகுதியில் கொடி ஏற்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று கூடலுார் கண்ணகி தேவி அறக்கட்டளை சார்பில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தி அம்மன் கொடியை ஏற்றினர். பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை துவக்கினர். அறக்கட்டளை தலைவர் மகேந்திரன், செயலாளர் லலிதா, பொருளாளர் குமரன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நேரு, ஸ்டாலின், பாண்டியன், சாமியப்பன், தேவி, ரத்தினமாலா, கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.