காஞ்சிபுரம்: பழுதடைந்த நிலையில் உள்ள காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் மரத்தேரை சீரமைக்க, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில், 54வது திவ்யதேசமாக விளங்குகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பிரம்மோத்சவம் 10 நாட்கள் விமரிசையாக நடந்து வருகிறது.
ஏழாம் நாள் உத்சவத்தில் தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் மரத்தேரில் எழுந்தருளும் உலகளந்த பெருமாள் நான்கு ராஜவீதிகளிலும் பவனி வருவார். மரத்தேரில் உள்ள பல பாகங்கள் பழுதடைந்தும், சேதமடைந்தும்f உள்ளதால், இரு ஆண்டுகளாக பிரம்மோத்சவத்தின்போது, தேரோட்டம் நடைபெறவில்லை. இதனால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே, வரும் 2027ம் ஆண்டு தை மாத பிரம்மோத்சவத்தின்போது, தேரோட்டம் நடைபெறும் வகையில், பழுதடைந்த மரத்தேரை சீரமைக்க ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.