புதுச்சேரி: கோரிமேடு அப்பா பைத்திய சுவாமி கோவிலில் இன்று நடந்த குரு பூஜையில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று வழிபாடு செய்தார். கோரிமேடு, வீமக்கவுண்டன் பாளையத்தில் முதல்வர் ரங்கசாமியால் கட்டப்பட்ட அப்பா பைத்திய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், அப்பா பைத்திய சுவாமி 167 வது பிறந்த நாளை முன்னிட்டு குருபூஜை இன்று நடந்தது. விழாவையொட்டி, காலை திருவிளக்கு, புனித நீர் வழிபாடு, ஐங்கரன் வழிபாடு, செந்தமிழில் வேள்வி, நிறை வேள்வி, சிறப்பு திருமஞ்சனம், மலர் அலங்காரம், பேரொளி வழிபாடு நடந்தது. குருபூஜை விழாவில், முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, அப்பா பைத்தியம் சுவாமிக்கு பூஜைகள் செய்து, புனித நீர் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானத்தை துவக்கி வைத்தார். இதில், என்.ஆர்.காங்., வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.