திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயில் வசந்த பெருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இக்கோயில் மே 7 ல் கொடியேற்றத்துடன் வசந்த பெருவிழா நடந்து வருகிறது. தினசரி அம்மன் அலங்காரத்தில் இரவில் திருக்குளம் பவனி வருகிறார். நேற்று ஆறாம் திருநாளை முன்னிட்டு பால்குட விழா நடந்தது. நேற்று காலை கோட்டைக்கருப்பண்ணசுவாமி கோயிலிலிருந்து திருப்புத்தூர்,தென்மாப்பட்டு,தம்பிபட்டி, புதுப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். தேரோடும் வீதி வழியாக பூமாயி அம்மன் கோயில் வந்தடைந்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலால் மூலவர் சப்தமாதர்களுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட எட்டு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு பன்முக தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய மலர்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது. பூச்சொரிதலான மலர்களை பெண்கள் மடியேந்தி வாங்கிச் சென்றனர். பால்குட விழா ஏற்பாட்டினை வசந்தப் பெருவிழா குழு தலைவர் முன்னாள் தக்கார் நா.ஆறு.தங்கவேலு தலைமையில், திருப்பத்தூர், தெம்மாபட்டு, தம்பிபட்டி சோழிய வெள்ளாளர் இளைஞர் குழுவினர் செய்தனர்.