தேவகோட்டை: தேவகோட்டை எல்லை காவல் தெய்வமான கோட்டையம்மன் கோயிலில் ஆடி விழா கடந்த 20 ந்தேதி மேடை போடுதல் மற்றும் மறுநாள் முதல் பொங்கல் வைத்து காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் பீடத்திற்கு காலை மாலை சிறப்பு அபிஷேகங்கள். கோட்டைஅம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. தினமும் சில பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று புள்ளி பொங்கல் திருநாளை முன்னிட்டு நள்ளிரவு 1:30 மணி அளவில் அம்மன் கண் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பகலில் பீட அபிஷேகத்தை தொடர்ந்து கோயில் சார்பில் இரண்டாவது பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியதை தொடர்ந்து ஊர் மக்கள் வைக்கும் புள்ளி பொங்கலாக சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாலை வரை பொங்கல் வைத்தும் மாவிளக்கு ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். பொங்கல் விழாவில் உள்ளூர் மக்கள் உட்பட வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இன்று முதல் அம்மனுக்கு தினமும் வளையல், காய்கனி, உட்பட விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன.