மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே முனீஸ்வரர் கோவிலில் உற்சவ பெருவிழா நடந்தது.
மேட்டுப்பாளையம் அடுத்த ஓடந்துறை ஊராட்சி ஊமப்பாளையத்தில், மிகவும் பழமை வாய்ந்த முனீஸ்வரர் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோவிலில் உற்சவ பெருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கடந்த, 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு அபிஷேக பூஜை நடைபெற்றது. 28ம் தேதி இரவு பவானி ஆற்றில் இருந்து, சுவாமியை அழைத்து வந்தனர். நேற்று காலை ஊமப்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து, அலகு குத்தி மாவிளக்கு ஊர்வலம், முனீஸ்வரர் கோவிலுக்கு வந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பின்பு, அலங்கார பூஜை நடந்தது. பூஜைகளை பூசாரிகள் சந்தோஷ்குமார், ராமமூர்த்தி, ரங்கசாமி ஆகியோர் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர்கவுடர், பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.