பாலக்காடு; தேவஸ்வம் வாரியங்களின் செயல்பாடுகளுக்கு மாநில அரசு முழுமையான ஆதரவை வழங்கி வருவதாக தேவஸ்வம் துறை அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார். குருவாயூர் தேவஸ்வத்தின் புதுப்பிக்கப்பட்ட கவுஸ்துபம் ஓய்வு விடுதியைத் திறந்து வைத்து பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தேவஸ்வம் வாரியங்களின் செயல்பாடுகளுக்கு மாநில அரசு முழுமையான ஆதரவை வழங்கி வருகிறோம். எனது தந்தை முன்னாள் முதலமைச்சர் கருணாகரன் 40 ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைத்த கவுஸ்துபம் ஓய்வு விடுதியை, தற்போது புதுப்பித்து மீண்டும் அர்ப்பணிக்க முடிந்ததை எனது பாக்கியமாகக் கருதுகிறேன்.
குருவாயூர், கொட்டியூர் உள்ளிட்ட கோவில்களை இணைத்து ஆன்மீகச் சுற்றுலா வட்டாரத்தை ஊக்குவிப்பதற்கு பட்ஜெட்டிலேயே அரசு முன்னுரிமை அளித்துள்ளது. பக்தர்களுக்குச் சிரமமில்லாத தரிசனத்தை உறுதி செய்ய வெர்ச்சுவல் கியூ முறையைத் தொடங்கிய குருவாயூர் தேவஸ்வத்தின் முடிவு, அமைச்சரவை உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. கோவில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் நன்முறையில் நடந்துகொள்ள தேவஸ்வம் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. குருவாயூர் தேவஸ்வத்தில் பணிநியமனம் செய்வதற்கான அதிகாரம், குடியரசுத் தலைவர் கையொப்பமிட்ட 1978-ஆம் ஆண்டின் தேவஸ்வம் சட்டப்படி தேவஸ்வம் மேலாண்மைக் குழுவிற்கே உள்ளது. இது தொடர்பான வழக்கில் மாநில அரசு தேவஸ்வம் சட்டத்தின் பக்கமே நிற்கிறது. இதுவே அரசின் நிலைப்பாடு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.விழாவில் தலைமை வகித்த தேவஸ்வம் தலைவர் கோபிநாத் அமைச்சருக்கான தேவஸ்வத்தின் நினைவப்பரிசை வழங்கினார். குருவாயூர் சட்டமன்ற உறுப்பினர் அக்பர் முதன்மை விருந்தினராகவும், தேவஸ்வம் செயலாளரும் குருவாயூர் தேவஸ்வம் ஆணையருமான ராஜமாணிக்கம், குருவாயூர் நகராட்சி தலைவர் சுனிதா அரவிந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்றனர்.