குன்னூர் ; பி மணியட்டி கிராமத்திலிருந்து பழனிக்கு 205 கி.மீ., தூரம் முருக பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து பழனிக்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். இது மட்டுமின்றி ஆடி மாதத்தில், கார்த்திகை நட்சத்திரம் உட்பட அனைத்து நாட்களிலும் பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதனையொட்டி, நீலகிரி மாவட்டம் பி. மணியட்டி, மீக்கேரி உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். இன்று பி. மணியட்டி கிராமத்திலிருந்து மகாலிங்கா பாதயாத்திரை குழுவினர் 100க்கும் மேற்பட்டோர் 205 கி. மீ., தூரம் பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
38வது ஆண்டாக செல்லும் இந்த பாதயாத்திரை காட்டேரி சின்ன கரும்பாலம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அன்னதானம் முடித்து, குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழியாக, பழனிக்கு பாதயாத்திரை சென்றனர். இந்த குழுவினர் வரும் 8ம் தேதி நடக்கும் சிறப்பு பூஜை மற்றும் தங்க தேர் பவனியில் பங்கேற்கின்றனர். வனத்துறை அறிவுரை : நீலகிரி மாவட்டத்தில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் மலைப்பாதைகளில் நடந்து செல்வதால், வாகனங்களை ஒட்டி செல்பவர்கள் மித வேகத்தில், முன்னெச்சரிக்கையுடன் இயக்கவும், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக, குறுக்கு பாதைகளில் செல்லாமல் சாலைகளிலேயே பக்தர்கள் செல்லவும் போலீசார் மற்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.