காரைக்குடி: காரைக்குடி பகுதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏராளமான பெண்கள் மஞ்சள் கயிறு கட்டி தெப்பத்தில் வழிபாடு செய்தனர்.
ஆடி மாதத்தின் முக்கிய நாளாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு அன்று, மக்கள் சுப காரியங்களை தொடங்குவார்கள். நீரின்றி அமையாது உலகு என்பதை அறிந்து பெருக்கெடுத்து வரும் நீரை போற்றி வணங்கும் நாளாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நீர்நிலைகள் பெருக வேண்டும் என்றும், தண்ணீர் மற்றும் உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்க நதிக்கரைகளில் மக்கள் வழிபாடு செய்வர். ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரை மற்றும் தெப்பங்களில் மக்கள் ஒன்று கூடி மஞ்சளில் பிள்ளையார் செய்து தேங்காய் பாலம் வைத்து வழிபாடு செய்வர். பெண்கள், மஞ்சள் கயிறு கட்டிக் கொள்வார். இன்று காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயில் தெப்பத்தில், ஏராளமான பெண்கள் சிறப்பு வழிபாடு செய்து மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் அன்னதானமும் வழங்கப்பட்டது.