காஞ்சிபுரம்; சங்கரா கல்வி அறக்கட்டளை நடத்தும் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவியருக்கு, காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாராட்டுச் சான்றிதழும், பதக்கமும் இன்று வழங்கினார்.
சங்கரா கல்வி அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுதும் உள்ள சங்கரா பள்ளிகளில் 10, பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற 126 மாணவ – மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழும், பதக்கமும் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. ஓரிக்கை மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்து சான்றிதழும், பதக்கமும் வழங்கி மாணவ – மாணவியரை ஆசீர்வதித்தார். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் செயலர் சல்லா.விஸ்வநாத சாஸ்திரி, சங்கரா மருத்துவக் குழும தலைவர் பம்மல் விஸ்வநாதன், சங்கரா கல்வி அறக்கட்டளையின் செயலர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாம் மேலாளர் ஜானகிராமன் வரவேற்றார். விழாவில் தணிக்கையாளர் வைத்தியநாதன், ஓரிக்கை மணி மண்டப நிர்வாக அறங்காவலர் மணி அய்யர், சங்கர மடத்தின் மூத்த மேலாளர் சுந்தரேச அய்யர், மேலாளர் அரவிந்த் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.