திருநெல்வேலி: ஆடி 18-ம் பெருக்கையொட்டி, திருநெல்வேலி மாவட்ட வி.எச்.பி. சார்பில் தாமிரபரணி நதிக்கு சீர்செய்தல் மற்றும் தீப ஆரத்தி விழா நேற்று நடைபெற்றது.
திருநெல்வேலி ஜங்ஷன் சிருங்கேரி சாரதா மண்டபத்திலிருந்து ஏராளமான பெண்கள் சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக திருநெல்வேலி கைலாசபுரம் தைப்பூச மண்டப படித்துறைக்கு வந்தனர். அங்கு தாமிரபரணி நதியை கர்ப்பிணியாக பாவித்து, கருப்பு வளையல், கருகுமணி, மஞ்சள், தேங்காய், புடவை உள்ளிட்ட மங்களப் பொருட்களை வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து தாமிரபரணி நதிக்கு அபிஷேகம், தீப ஆரத்தி நடைபெற்றது. சமங்கலிப் பெண்கள் தம்பதி ஒற்றுமை, குடும்ப நலன் மற்றும் ஆடி விரத பலன் வேண்டி மாங்கல்ய தாலி சரடுகளை புதுப்பித்து வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட வி.எச்.பி. நிர்வாகிகள் செய்திருந்தனர்.