விழுப்புரம்: திண்டிவனம் அருகே பல்லவர் கால மூத்ததேவி, கொற்றவை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
திண்டிவனம் அடுத்த கொள்ளார், பெலாகுப்பம் பகுதிகளில், விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் மற்றும் குழுவினர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, பல்லவர் கால மூத்ததேவி மற்றும் கொற்றவைச் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும்.
இதுகுறித்து, செங்குட்டுவன் கூறியதாவது: கொள்ளார் கிராமத்தில், ஏரிக்குள் பாதியளவுக்கு மேல் மண்ணுக்குள் சிற்பம் புதைந்திருந்தது. இதனை துர்க்கை என்று அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். அதனை வெளியே எடுத்து ஆய்வு செய்தபோது அது மூத்ததேவி சிற்பம் எனத் தெரியவந்தது. இது கி.பி., 8ம் நுாற்றாண்டு பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகும். 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. 5 அடி உயர பலகைக் கல்லில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. அழகிய தலையலங்காரம், காதணிகள், கழுத்தணி, முடிச்சுகளுடன் கூடிய இடையாடை அணிந்து மூத்ததேவி காணப்படுகிறார். 2 கால்களையும் தொங்கவிட்ட நிலையில் மூத்ததேவி அமர்ந்துள்ளார்.
மூத்த தேவியின் வலது பக்கத்தில் அவரது மகன் மாந்தன் அமர்ந்துள்ளார். வழக்கமாக அவர் கையில் காணப்படும் கதை இங்கு இல்லை. இடது பக்கத்தில் மகள் மாந்தி அமர்ந்திருக்கிறார். சிற்பத்தின் வலது மேல் மூலையில், மூத்த தேவியின் ஆயுதமான துடைப்பம் காணப்படுகிறது. வழக்கமான காக்கைக் கொடி இடம்பெறவில்லை. இதேபோன்று, பெலாகுப்பம் சிப்காட் வளாகத்திற்கு அருகாமையில், தோப்பிற்குள் கொற்றவை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 8 கைகளுடன் காணப்படும் கொற்றவை எருமை தலைமீது கம்பீரமாக நின்றிருக்கிறார். அவளது முன்னிரு கரங்களும் தொடை மீது வைத்து, வித்தியாசமான அமைப்பாக உள்ளது. மற்ற 6 கரங்களில் தக்க ஆயுதங்களை ஏந்தியிருக்கிறாள். கொற்றவையின் வலது காலுக்கு அருகே அவளது வாகனமான மான் அழகாக நிற்கிறது. கொற்றவைச் சிற்பங்களில் வழக்கமாகக் காணப்படும் தலைப்பலி வீரன் மற்றும் அடியவரின் உருவங்கள் இதில் இடம்பெறவில்லை. மக்கள், வன துர்க்கை என வணங்கி வருகின்றனர். இதுவும், கொள்ளார் மூத்ததேவி சிற்பத்தின் காலத்தைச் சேர்ந்ததாகும். இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.