குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வெர்ச்சுவல் கியூ தரிசனம் தொடக்கம்



பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பக்தர்கள் சிரமமின்றி விரைவாக சாமி தரிசனம் செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெர்ச்சுவல் கியூ (Virtual Queue) ஆன்லைன் வழி தரிசனம் இன்று தொடங்கியது.


இன்று காலை 6:30 மணியளவில் கோவில் கிழக்கு நடை பகுதியில் அமைந்துள்ள பகவதியம்மன் கோவில் நுழைவு வாயில் அருகில் தொடக்க விழா நடைபெற்றது. கோவில் நிர்வாக குழு தலைவர் கோபிநாத் ரிப்பன் வெட்டி இந்த வெர்ச்சுவல் கியூ தரிசனத்தை தொடங்கி வைத்தார். தேவஸ்வம் ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அடையாளச் சான்று பரிசீலனைக்குப் பிறகு ரகுநாதன் பிள்ளை என்ற பக்தர் முதன்முதலாக வெர்ச்சுவல் கியூ வழியில் சென்று தரிசனம் செய்தார். காலை 7 மணி முதல் 8 மணி வரையிலான முதல் கட்ட தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மூலவரை தரிசித்து அருள்பெற்றனர். இடைவிடாது பெய்த மழை மற்றும் மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் வருகை தந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், முதல் மணி நேரத்திலேயே மிக எளிதாக தரிசனம் செய்தனர். மதியம் 1 மணி வரை மட்டும் சுமார் 1,800 பக்தர்கள் வெர்ச்சுவல் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ள இந்த தரிசனத்திற்கு வருவோர், ஆன்லைன் முன்பதிவு ரசீதுடன் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே வருகை தர வேண்டும். கிழக்கு நடையில் உள்ள கியூ காம்ப்ளக்ஸ் (Queue Complex) வடக்கு முனையில் உள்ள வரிசையே வெர்ச்சுவல் கியூ பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. முன்பதிவுக்குப் பயன்படுத்திய அதே அடையாளச் சான்றைக் கையில் வைத்திருக்க வேண்டும். நுழைவு வாயிலில் பாதுகாப்பு ஊழியர்களின் சோதனைக்கு இதைக் காண்பிக்க வேண்டும். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே இந்த வெர்ச்சுவல் கியூ தரிசனம் அனுமதிக்கப்படும். காலை 7 மணி முதல் மதியம் வரையிலும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம். ஒரு மணி நேரத்திற்கு 300 பக்தர்கள் வீதம் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். வரும் செப்டம்பர் மாதத்திற்கான வெர்ச்சுவல் கியூ தரிசன முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்