ரிஷிவந்தியம்: பள்ளிப்பட்டு கிராமத்தில் அய்யனார், மாரியம்மன், கெங்கையம்மன் மற்றும் செல்லியம்மன் சுவாமி தேர்திருவிழா நடந்தது.
வாணாபுரம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கணபதி, அய்யனார், மாரியம்மன், கெங்கையம்மன், செல்லியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த ஜூலை 31ம் தேதி பாரம் பாடலுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும், மாரியம்மன் பிறப்பு, அய்யனார் சக்திஅழைப்பு, மாரியம்மன் சக்தி அழைப்பு, அய்யனார் மற்றும் மாரியம்மன் சுவாமிகள் வீதியுலா, சின்னான் மோடி எடுத்தல், ஊரணி பொங்கல், சாகைவார்த்தல், பால்குட ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. தொடர்ந்து, தேர்திருவிழாவையொட்டி உற்சவர் சுவாமிகளுக்கு பூஜைகளும், பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு தேரில் எழுந்தருள செய்தனர். சுற்று வட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று முக்கிய தெருக்கள் வழியாக தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் கோவிலுக்கு வந்த பிறகு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.