ராமேஸ்வரம்: இன்று (ஆக., 21) ராமேஸ்வரம் கோயில் இருந்து சுவாமி, அம்மன் பர்வதம் மண்டகப்படிக்கு செல்வதால், கோயில் நடை சாத்தப்படும்.
ஆக.,16ல் ராமேஸ்வரம் கோயிலில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் விழா நடந்தது. தொடர்ந்து 16 நாட்கள் கோயிலில் ஆடித் திருவிழா நடந்த நிலையில், 17ம் நாள் திருவிழாவான இன்று ராமேஸ்வரம் கோயிலில் இருந்து காலை 6 மணிக்கு சுவாமி, அம்மன் தங்க கேடயத்தில் எழுந்தருளி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு செல்வார்கள். பின் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை முடிந்ததும், இரவு 9 மணிக்கு கோயிலுக்கு திரும்புவார்கள். இன்று காலை 2:30 முதல் 3 மணி வரை கோயிலில் ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால, சாயரட்சை பூஜைகள் நடக்கும். இதன்பின் காலை 7 மணிக்கு முதல் இரவு 10 மணி வரை நடை சாத்தப்படும். எனவே பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என கோயில் இணை ஆணையர் சுரேஷ் தெரிவித்தார்.