பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேஷசமுத்திரத்தில் தேர் திருவிழா



சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.


சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம் காலனியில் மாரியம்மன் கோவில் உள்ளது. தேர் திருவிழாவின் போது தேரோட்டம் ஊர் கிராம எல்லையையொட்டி தேரை திருப்பிச் செல்வது வழக்கம். ஊர் எல்லை அருகே தேர் வந்து திரும்ப செல்வதற்கு ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2015ம் ஆண்டு தேர் திருவிழாவிற்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டது. தேரோட்டம் முதல் நாள் விஷமிகள் சிலர் புதிதாக செய்யப்பட்ட தேருக்கு தீ வைத்ததால் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் அப்போதைய விழுப்புரம் எஸ்.பி., நரேந்திர நாயர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. தொடர்ந்து ஊர் மக்கள் வீட்டை பூட்டிக் கொண்டு தலைமறைவாகினர்.


சேஷசமுத்திரத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக தேர் திருவிழா நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் 9 ஆண்டுகளுக்குப்பின் நீதிமன்ற அனுமதியுடன் கடந்த 2024ம் ஆண்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தேர் திருவிழா நடந்தது. இதனையடுத்து கோவில் புதுப்பிக்கும் பணி காரணமாக கடந்த 2025ம் ஆண்டு தேர் திருவிழா நடக்கவில்லை. இந்த ஆண்டு நேற்று தேர் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. மாலை 3:00 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச் செய்து பொதுமக்கள் தேர்வடம் பிடித்து இழுத்து தேரோட்டதை துவக்கி வைத்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு சேஷசமுத்திரத்தில் தேர் திருவிழாவில் ஏற்பட்ட கலவரம் காரணமாக நேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கள்ளக்குறிச்சி எஸ்.பி.,ஷஹ்னாஸ் தலைமையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தேர் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று முன்தினம் முதலே சேஷசமுத்திரம் கிராமம் போலீஸ் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க 30க்கும் மேற்பட்ட போலீசார் ஆங்காங்கே மாடி வீடுகளில் இருந்து தீவிரமாக கண்காணித்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்