திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் பூச்சொரிதலை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பூக்கள் சொரிந்து வழிபட்டனர். நாளை மாலை காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்குகிறது.
பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 3:30 மணிக்கு கோயில் நடை திறந்து பூர்வாங்க பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சப்தமாதர்களில் நடுவரான வைஷ்ணவி என்ற பூமாயி அம்மனுக்கு பால் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மண்டாலாபிஷேக பூஜைகள் நடந்தன. பின்னர் அம்மன் வெள்ளி அங்கியில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அலங்காரத் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பக்தர்கள் பூக்களை செலுத்தி பூச்சொரிந்து வழிபட்டனர். தொடர்ந்து நகரின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பூத்தட்டுக்களுடன் ஊர்வலமாக வந்து அம்மனை தரிசித்தனர். நாளை அதிகாலை வரை விடிய,விடிய பூக்களை அம்மனுக்கு செலுத்தி வழிபடுவர். அதிகாலையில் மூலவர் அம்மனுக்கு தீபாராதனையுடன் பூச்சொரிதல் விழா நிறைவடையும். நாளை மாலை 5:00 மணிக்கு மேல் இரவு 7:35 மணிக்குள் அம்மனுக்கு கொடியேற்றி, காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்குகிறது. தொடர்ந்து அம்பாள் கோயில்குளத்தை வலம் வருவார். தொடர்ந்து பத்துநாட்கள் வசந்தப் பெருவிழா நடைபெறும். பூச்சொரிதலை முன்னிட்டு நகரெங்கும் இசை,நாடகம்,பாடல் கச்சேரிகள் நடந்தன.