உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.
உடுமலையில், நுாற்றாண்டுகள் பழமையானதும், பிரசித்தி பெற்ற தலமாகவும் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டு தேர்த்திருவிழா, பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் திருவிழாவாக மிகச்சிறப்பாக பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு தேர்த்திருவிழா, கடந்த, 1ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, கம்பம் போடுதல், கொடியேற்றம், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. திருவிழாவை முன்னிட்டு, காமதேனு, யானை, ரிஷபம், அன்னம், சிம்மம் என பல்வேறு வாகனங்களில், சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் எழுந்தருளி, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, தினமும், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், வேப்பிலை, மஞ்சளுடன், தீர்த்தம் எடுத்து வந்து, திருக்கம்பத்திற்கு ஊற்றியும், நேர்த்திக்கடனாக, பூவோடு எடுத்து வந்தும் வழிபட்டு வந்தனர். திருவிழாவில் நேற்று, அதிகாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் துவங்கியது. நுாற்றுக்கணக்கான பெண்கள், அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வந்து வழிபட்டனர். பிற்பகல், 3:00 மணிக்கு, வேத மந்திரங்கள் முழங்க, சூலத்தேவர் சுவாமியுடன் அம்மன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. கோவில் வளாகத்தில், திருமண பந்தல், மலர் அலங்காரம், பக்தர்கள் கூட்டம் என கோவில் வளாகம் களை கட்டியிருந்தது.
முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக இன்று காலை, 6:45 மணிக்கு, மகா சக்தி மாரியம்மன், சுவாமியுடன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மதியம், 4:15 மணிக்கு, திருத்தேரோட்டம் துவங்கியது. ஓம்சக்தி பராசக்தி கோஷத்துடன் நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தர்கள் வடம் பிடிக்க, யானை மணிகண்டன் தேரின் சக்கரத்தை தள்ளியது. வரும், 18ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம், மாலை, 4:00 மணிக்கு, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, இரவு, 8:00 மணிக்கு, அம்மன் பரிவேட்டை, இரவு, 10:00 மணிக்கு, குட்டை திடலில் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 19ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, கொடியிறக்கம், 11:00 மணிக்கு, மகா அபிேஷகம், 12:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு, மாலை, 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் மற்றும் குட்டைத்திடலில், தினமும் ஆன்மிக பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள் என மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவால், நகரமே விழாக்கோலம் பூண்டது.