திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் சித்திரைத்தேர் உத்ஸவம் (விருப்பன் திருநாள்) இன்று அதிகாலை துவஜாரோஹாணம் எனும் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும், 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் “சித்திரைத்தேர் திருவிழா விருப்பன் திருநாள் கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அதிகாலை மீன லக்னத்தில் சுவாமி புறப்பாடு, கொடிப்படம் திருவீதி சுற்றிவருதல் நடைபெற்று, துவஜாரோஹாணம் எனும் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் விதவிதமான வாகனங்களில் எழுந்தருளி வழிநடை உபயங்கள் கண்டருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து அருள்பாலிக்கிறார். உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் திருவிழாவின் நான்காவது நாள் 21ம் தேதி மாலை கருட வாகனத்தில் அருள்பாலிக்க உள்ளார். ஏழாம் திருநாளான 24ம் தேதி மாலை நெல்லளவு கண்டருளுகிறார். விருப்பன் திருநாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ‘சித்திரை திருத்தேர்’ வடம் பிடித்தல் 9ம் திருநாளான வரும் 26ம் தேதி காலை 6.00 மணியளவில் நடைபெறஉள்ளது. 11ம் திருநாளான 28ம் தேதி ஸ்ரீநம்பெருமாள் இரவு 8.00 மணியளவில் ஆளும் பல்லக்கில் புறப்பாடு கண்டருள்கிறார்.