பொன்னேரி; பொன்னேரி, திருஆயர்பாடியில் உள்ள சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த 13ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சிம்மவாகனம், சூரியபிரபை, சந்திரபிரபை, அனுமந்த வாகனம், புன்னவாகனம், சேஷவாகனம், அன்னவாகனம் திருவீதி உலாவும் நடைபெற்றன. விழாவின் ஐந்தாம் நாளான நேற்று காலையில், நாச்சியார் திருக்கோலம், மாலையில் ஊஞ்சல் சேவை உற்சவங்கள் நடந்தன. பொன்னேரி அகத்தீஸ்வர பெருமானும், கரிகிருஷ்ண பெருமானும், ஒருசேர சந்தித்து, பக்தர்களுக்கு காட்சி தரும் ‛சந்திப்பு திருவிழா’ நள்ளிரவு, 12:00 மணிக்கு துவங்கியது. வாணவேடிக்கைகள், மங்கள வாத்தியங்களுடன் கருட வாகனத்தில் புறப்பட்ட கரிகிருஷ்ண பெருமாள், அரிஅரன் பஜார் வீதியில் உள்ள தேரடிக்கு வந்தடைந்தார். மறுமுனையில் விநாயகர், முருகர், ஆனந்தல்லிதாயார், சண்டிகேஸ்வர் என பஞ்ச மூர்த்திகளுடன், சேஷ வாகனத்தில் அகத்தீஸ்வரர் பெருமான் வந்தடைந்தார்.
இருபது நிமிடங்கள் நடந்த சிறப்பு வாண வேடிக்கைகள், பக்தர்களை மெய்சிலிர்க்க செய்தன. அதை தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழுங்க, அகத்தீஸ்வரர் மற்றும் கரிகிருஷ்ண பெருமாளுக்கு தாம்பூலங்கள் சிறப்பு மாற்றப்பட்டன. பட்டாசாரியர்கள், சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓத, சிறப்பு தீபஆராதனைகள் நடந்தன. இன்று காலை, 5:00 மணிக்கு, கரிகிருஷ்ண பெருமாள், அகத்தீஸ்வரர் இருவரும் ஒரே சமயத்தில் எழுந்தருளி, கோதண்டராமன் சன்னதியில், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அகத்திய பரத்வாஜ முனிவர்களின் முன்னிலையில், நேருக்கு நேராக சந்தித்து, பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அரியும், அரனும் சந்தித்தப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‛ஓம் நமச்சிவாயா... ஓம் நமோ நாராயணா’ என, பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பி நெஞ்சுருக வணங்கினர். அதை தொடர்ந்து, அகத்தீஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடனும், கரிகிருஷ்ண பெருமாளும் மாட வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.