நவம்பர் 27,2025
சபரிமலை; பக்தர்களுக்கு உதவுவதற்காக வனத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள அய்யன் செயலி நடப்பு சீசனிலும் பக்தர்களுக்கு உதவியாக உள்ளது.
பக்தர்களுக்கு தேவைப்படும் எல்லா விபரங்களையும் உள்ளடக்கி இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகள், சபரிமலையின் சிறப்புகள், பெரியார் புலிகள் சரணாலயத்தின் சிறப்புகள், அவசர உதவி எண்கள் இப்படி பல்வேறு விபரங்கள் இந்த செயலியில் உள்ளது. இன்டர்நெட் இல்லாத இடங்களிலும் இது செயல்படும் வகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பம்பை, எரிமேலி,சன்னிதானம் போன்ற இடங்களில் கிடைக்கும் சேவைகள், பெரு வழிப்பாதையில் உள்ள சேவை மையங்கள், மருத்துவ வசதிகள், கழிவறைகள், குடிநீர் மையங்கள் பற்றிய விவரங்களும் இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடத்திற்கான தூரம், பக்தர்கள் தேர்ந்தெடுக்கும் வழிகளில் உள்ள முன்னறிவிப்புகள் போன்றவையும் இதில் உள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியும். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்த ஆப் செயலி கிடைக்கிறது.சபரிமலை பாதைகளில் ஆங்காங்கே அமைக்கப்பட்ட உள்ள கியூ. ஆர். கோடுகளை ஸ்கேன் செய்தும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.